மேக் 5 ஸ்டுடியோஸ் சார்பில் கார்த்திகேயன், ஆனந்த் உதார்கர் மற்றும் நண்பர்கள் தயாரிக்க, சாட்டை படத்தில் அறிமுகமான யுவன் கதாநாயகனாக நடிக்க,
கதாநாயகியாக ஸ்ராவியா மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத், நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஜா ஆகியோர் நடிக்க,
பெரோஸ்கானின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி விஜய் R. ஆனந்த், A.R.சூரியன்என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் படம் விளையாட்டு ஆரம்பம்.
ஒளிப்பதிவு – அருண்மொழி சோழன் , இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – ருக்ஷனா, இந்துமதி, எழில் வேந்தன், தென்றல், ஸ்ரீகாந்த்தேவா
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பாலா, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அருண் பாண்டியன்,
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சாட்டை அன்பழகன், ஷக்தி N.சிதம்பரம், பிரவீன் காந்த், மன்சூர் அலிகான் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னோட்டமும் இரண்டு பாடல்களும் திரையிடப்பட்டன .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாலா ” யுவன் கடின உழைப்பாளி. அவனது நடிப்பில் நான் இயக்க இருந்த ஒரு படத்துக்காக,
நாகூரில் புரோட்டா போடும் விதத்தை கற்று வர அனுப்பினேன் . மாவை எடுத்து பிசைந்து உருட்டி தட்டி பத்து அடி தூரத்தில் இருந்து வீசுவார்கள்.
அதை சரியாகக் கூட பார்க்காமல் ஆனால் சரியாக பிடித்து புரோட்டா போட வேண்டும் .
அதைக் கற்றுக் கொள்ள அவன் பதினைந்து நாள் எடுத்துக் கொள்வான் என்று நினைத்தேன் . ஆனால் நான்கே நாட்களில் சரியாகக் கற்றுக் கொண்டு அசத்தினான் .
அந்த அளவுக்கு சினிமா மீது ஆர்வமும் திறமையும் கொண்டவன் அவன். விரைவில் அவனை வைத்து படம் இயக்குவேன்” என்றார் .
” இயக்கிய படங்களின் பேரைச் சொல்லி அப்புறம் இயக்கியவர் பேரைச் சொன்னால்தான் பல இயக்குனர்களை அடையாளமே தெரியும் .
ஆனால் பாலாவைப் பொறுத்தவரை பாலா என்று அவர் பெயரை சொன்னால் போதும் அவர் இயக்கிய படங்கள் வரிசையாக மனசில் ஓடும் .
யுவனின் ஆர்வமும் உற்சாகமும் அவரை இன்னும் உயரங்களுக்கு கொண்டு செல்லும் ” என்றார் இயக்குனர் பேரரசு .
விஷால் பேசும்போது ” எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரி போவதாகச் சொல்லிவிட்டு இந்த விழாவிற்கு வந்து விட்டேன்.
பெரோஸ்கான் மகன் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு அப்பாவிற்கு தன் மகன் பெரிய ஹீரோவாவது ரொம்பப் பிடிக்கும். எங்க அப்பாவும் என்னை இப்படிதான் வளர்த்தார். அதனால் தான் இந்த விழாவிற்கு வந்தேன்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்..
தியேட்டரில் படம் ஓடும் போது அதை கேமரா வைத்து காப்பி செய்து திருட்டு வி.சி.டி, பைரஸி தயாரிக்க வேலை செய்பவர்களை கையும் களவுமாக பிடித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கொடுத்து,
போலீஸில் எப்.ஐ.ஆர் போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ருபாய் ஒரு லட்சம் பரிசாகத் தரப்படும். இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும்” என்றார்
படம் பற்றி இயக்குனர்கள் கூறும்போது ” இது சதுரங்க வேட்டை மாதிரியான படம். ஆனால் சதுரங்க வேட்டை ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்மறையான விஷயங்களைப் பதிவு செய்தது.
ஆனால் விளையாட்டு ஆரம்பம் படத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிறைவான விஷயங்களை இதில் பதிய வைத்திருக்கிறோம்.
ஒரு நாடு வல்லரசு நாடாக உருவாக வேண்டுமானால் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு காரணமாக இருக்கும் என்கிற நேர் மறையான விஷயம்தான் படத்தின் மையக்கரு !
படப்பிடிப்பு மதுரை, திருச்சி, நாமக்கல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
பாடல் காட்சிகள் சென்னை, பாங்காக் போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டுள்ளது” என்றனர்







