சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில்,
மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர்.
தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் ஆகியவை
இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது.
ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம்.
இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.
தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை
பொதுமக்களும்,கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும்,
கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைத்துள்ளார் .
சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் இந்த அருங்காட்சியகத்தில்
உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும்,
முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என,
பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இடம் பெற்றுள்ளன
இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள்
அடங்கிய புத்தகங்களும் உள்ளன
புகைப்படக் கலையை அதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் விதமாக 3ஆவண படங்களும் திரையிடப்பட உள்ளது.
புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும்,
சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும்,
கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்படுகிறது
மேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும்,
நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று.
அதோடு இந்த அருங்காட்சியகத்தில் இன்னொரு சிறப்பம்சம்
கிளிக் ஆர்ட் முறையில் புகைப்பட கலையின் முன்னோடிகளும்
புகைப்படகலையின் பல சாதனங்களை கண்டுபிடித்தவர்களுமான
பிரான்சு நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலையின் முன்னோடியும்
புகழ் பெற்ற கோடாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜார்ஜ் ஈஸ்ட்மேனிடம்,
அவர் கண்டுபிடித்த பாக்ஸ் கேமராவை பெற்றுக்கொள்வது போலவும் செல்பி எடுத்து கொள்ளலாம்.
19ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை
ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில்
இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.
உலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார்
கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்
அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு கால கட்ட கேமராக்களை பார்த்து,
காதலோடு வியந்து நின்றார் ஒளிப்பதிவு மாமேதை பி சி ஸ்ரீராம் .
அங்குள்ள பழைய கால கேமரா முதல் நவீன கேமரா வரை ,
பலவற்றின் சிறப்புகளை வரலாற்றை அவர்களுக்கு ஏ பி ஸ்ரீதர் விளக்ககினார் .
சிவகார்த்திகேயன் மிகவும் ரசித்துப் பார்த்தார் .
ஏ பி ஸ்ரீதரின் முயற்சிகளை ரசனையை அறிய உழைப்பை இருவரும் பாராட்டினர் .
இந்த அருங்காட்சியகம் அமைக்க ஏபி ஸ்ரீதருக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பரிசு வழங்கிப் பாராட்டினர்
நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி , வி ஜி பி அதிபர் சந்தோசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
உலகப் புகைப்பட தினத்தை ஒட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து புகைப்படக்காரர்களோடும்
பி சி ஸ்ரீராமும் சிவகார்த்திகேயனும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் .
இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.
















