விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் சுப்ரா, மற்றும் ஆர்யன் மகேஷ் தயாரிக்க, விஷ்ணு விஷால், மானசா , செல்வராகவன் நடிப்பில் ஜிப்ரான் இசையில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் பிரவீன் கே என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் ஆர்யன்.
1988 ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் , ரம்யா கிருஷ்ணன், ஷோபனா நடிக்க , பிரியதர்ஷன் இயக்கத்தில் ஆர்யன் என்ற படம் வந்தது , அதை தமிழில் சத்யராஜ் நடிக்க திராவிடன் என்ற பெயரில் பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் படமாக எடுத்தார்கள்.
ஆனால் இந்த ஆர்யன் வேறு மொழிக்குப் போனால் என்ன பெயரில் போகுமோ தெரியல.
வாழ்வில் பணியில் தோற்றுப் போன ஒரு நடுத்தர வயது எழுத்தாளர் ஒரு நிலையில் தான் ஒரு பர்ஃபெக்ட் குற்றம் செய்யப் போகிறேன் என்று சொல்வதன் மூலம் எல்லோரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறான். அவன் செய்யும் தொடர்கொலைகளை தடுக்க போலீஸ் என்ன செய்கிறது என்று, இரண்டு தரப்புக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே ஆர்யன் என்கிறது கோலிவுட் வட்டாரம் . போலீசாக விஷ்ணு விஷால். வில்லனாக செல்வராகவன்
ஆனால்…
அக்டோபர் 31 ஆம் தேதி இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் திரைக்கு வரும் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷ்ணு விஷாலும் பிரவீணும் இதைச சொல்லவில்லை (ஒரு வேளை வேற கதை இருக்குமோ என்னவோ?)
படத்தைப் பற்றி புத்திசாலித்தனமாக – அருவி போலப் பேசிய விஷ்ணு விஷால்,” பிரவீன் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவியாளர் . எனது எப் ஐ ஆர் பட இயக்குனர் மனு ஆனந்தின் நண்பர் . எப் ஐ ஆர் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார் மனு ஆனந்த் சொல்லித்தான் இவரிடம் கதை கேட்டேன். கதை நன்றாக இருந்தது . படம் ஆரம்பித்தோம் .இருபது சதவீதம் முடிந்தது
அப்போது ஒரு வெப் சீரியஸ் விசயமாக பிரவீனும் நானும் மும்பை போனபோது அங்கே அமீர்கானை சந்தித்தோம் . அவர் என்ன படம் போகுது என்று கேட்க, நான் லைட்டாக கதையை சொல்ல, ‘நல்லா இருக்கே வரச் சொல்லுங்க . கதை கேட்போம் ‘ என்றார் .
இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் கதையை சொன்னார் பிரவீன் . காலை ஆறு மணி வரை நாங்கள் மூவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.
அவர் இந்தப் படத்தை இந்தியில் தயாரித்து வில்லனாக நடிப்பதாகவும் நான் ஹீரோவாக நடிப்பதாகவும் முடிவானது . பின்னால் சில காரணங்களால் அவரால் முடியாது என்பதை அவர் சொன்னபோது அது நியாயமாக இருந்தது . அதில் சில மாதங்கள் போனது .
அந்த நேரத்தில் கட்டாகுஸ்தி படம் தீவிரமாக ஆரம்பிக்க , அதை முடித்துக் கொடுத்தேன் . இந்தப் படம் ஷூட்டிங் அப்படியே இருந்தது.
ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு வானம் படத்தில் நடித்து முடித்தேன் அதற்கு 155 நாட்கள் அதாவது 225 கால்ஷீட் கொடுத்தேன் . அதனாலும் இந்தப் படம் லேட் ஆனது . இனிமேல் சொந்தமாக படம் எடுத்தாலே போதும் என முடிவுக்கு வந்தேன் .
எனவே கட்டாகுஸ்தி 2 படத்தை நானே தயாரித்து இருக்கிறேன் . இந்த ஆர்யன் படத்தையும் நானே தயாரித்து இருக்கிறேன் .
பெரிய இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக மீண்டும் கண்டினியூட்டி போலீஸ் டிரஸ் போட்டபோது வாட்ச் ,மேன் மாதிரி இருந்தேன். அப்படி உடம்பு மாறி இருந்தது . அடுத்த பத்தொன்பது நாளில் உடலை இழைத்து ஃபிட் ஆன நிலைக்கு வந்தேன் . ( தன் செல்போனில் இருந்து புகைப்படங்களைக் காட்டுகிறார் )
எனது மகன் பெயர் ஆர்யன் எனவே இந்தப் படத்துக்கு அந்தப் பெயர் . மற்றபடி இதில் திராவிடன் ஆர்யன் இஷ்யூ எல்லாம் இல்லை. (பையனின் முழுப் பெயர் ஆர்யன் மஹேஷ்).
என்னைப் பொறுத்தவரை நான் ராட்சஷன் ஒரு படம்தான் திரில்லர் செய்தேன் . எப். ஐ. ஆர் படம் கூட ஆக்ஷன் படம்தான். நிறைய காமெடி கமர்ஷியல் படங்கள்தான் கொடுத்து இருக்கிறேன் . ஆனால் எனக்கு என்னமோ திரில்லர் பட நடிகர் என்ற பெயர் வந்து விட்டது . இரண்டு வானத்தில் கூட காதலோடுதான் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது . கட்டாகுஸ்தி 2 முழுக்க முழுக்க காமெடி படம் .
என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகனுக்கு ஆக்ஷன் படம் முக்கியம்தான் . ஆனால் ஆக்ஷன் மட்டுமே என்று போனால் ரிஸ்க் . முதல் படத்தை விட இரண்டாவது படம் பெருசா இருக்கணும். அதை விட அடுத்த படம் பெரிய வெற்றி அடையணும் என்று டென்ஷன் ஆகி விடும் . அதே வெரைட்டியாக படம் செய்தால் அந்த ரிஸ்க் இல்லை.
எனக்கு கிரிக்கெட்டையும் சினிமாவையும் தவிர வேறு எதுவும் தெரியாது . என்னால் இனி இந்திய அணிக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. சினிமாதான் .
எனவே நமக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நம் வசதிக்கு நாமே தயாரிப்பது நல்லது ‘ எனும் முடிவுக்கு வந்திருக்கிறேன்.
அந்த வகையில் ஆர்யன் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .
விஷ்ணு விஷால் மூச்சு விடும் இடைவெளியில் பேசிய இயக்குனர் பிரவீன் ,
” ஆக்சுவலாக இந்தப் படத்துக்கு செல்வராகவனை நாங்கள் நடிக்க அழைத்தபோது அவர் சினிமாவில் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. ஆனால் இப்போது படம் வரும் நிலையில் அவர் நல்ல நடிகராகவும் ஆகி இருக்கிறார். தாமதம் என்றாலும் அது ஒரு பிளஸ் தான் .
அமிர்கான் கூட தமிழில் இந்த கேரக்டர் பண்ணுவது யார் என்று ஆவலாகக் கேட்டார்
இது பலரும் செய்த – விஷ்ணு விஷால் சாரே செய்த போலீஸ் அதிகாரி படத்தில் ஒன்று என்று சொல்லி விட முடியாது .உதாரணமாக ராட்சசனில் கொலையாளி யார் என்பதில்தான் படம் போகும் . ஆனால் இந்தப் படத்தில் கொலையாளி யார் என்பதை முன்னரே சொல்லி விடுவோம். ஏன் எதற்கு என்ற காரண காரியம்தான் முக்கியம் ” என்றார் .
“எல்லாம் சரி. ஒரு டீசரில் என்ன கதை என்பதை கொஞ்சமாவது சொன்னால்தானே பார்க்கும் ஆடியன்சுக்கு ஆவல் வரும் ? சொல்லும் அளவுக்கு சொல்லி தியேட்டரில் அதற்கு மேலும் சொல்வதுதானே நல்ல உத்தி. இல்லை. எதுவுமே கதை பற்றி சொல்லவில்லை என்றால் நடிகர் முகத்துக்கு வருபவர்கள் மட்டும்தானே உள்ளே வருவார்கள்?” என்றேன் .
உண்மை சார் . இது டீசர் தான். டிரைலரில் என்ன கதை என்பதும் வரும் ” என்றார் பிரவீன்.
பட ரிலீசுக்கு இன்னும் மூணு வாரம்தான் இருக்கு. சீக்கிரம்
