ஸ்ரீதேவி மூவீஸ் சார்பில் சிவ லெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க, சமந்தா , உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி, முரளி சர்மா. சம்பத் நடிப்பில் ஆ, அம்புலி, ஜம்புலிங்கம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய ஹரி- ஹரீஷ் இரட்டையர்கள் இயக்கி இருக்கும் படம்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அல்லது குழந்தை சுமந்து பெற்றெடுக்கும் உடல் தகுதி இல்லாத பெண்களுக்கு அவர்களின் உயிர் மற்றும் உடல் அணுக்களில் உருவான குழந்தையை தங்கள் கருப்பையில் வைத்துத் தாங்கி வளர்த்து பெற்றுக் கொடுக்கும் வேலையை சேவையாகவோ அல்லது பணத்துக்காகவோ செய்பவர்கள் வாடகைத்தாய் அல்லது பதிலித்தாய் என்று அழைக்கப்படுகிறார்கள் .
அப்படி ஏராளமான பெண்கள் ஒரு மருத்துவமனையில் பதிலித்தாயார்களாக இருக்கிறார்கள். அப்படி ஒரு பதிலித்தாயாக இருக்கிறாள் யசோதா (சமந்தா).

கூட இருந்த பதிலித்தாய் ஒருத்தி குழந்தை பிறப்புக்குப் போன நிலையில் திரும்பி வராமல் போக , அங்கே நடப்பது பற்றி ஆராயும் யசோதாவுக்கு அங்கு பெற்று எடுக்கப்படும் குழந்தைகள் குழந்தை இல்லாத் தம்பதிகளுக்கு வாரிசாகப் போவதில்லை என்பதும் அவை எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கொடூரமான- அதிர்ச்சிகரமான உண்மையும் தெரிய வருகிறது.
யசோதாவுக்குத் தெரிந்து விட்டது என்பது சம்மந்தப்பட்டவர்களுக்கும் புரிய, அப்புறம் என்ன ஆனது ? அந்த கொடிய உண்மை என்ன என்பதே யசோதா.
வித்தியாசமான படங்களையே செய்யும் இயக்குனர்கள் ஹரி ஹரீஷ் இந்தப் படத்திலும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து உள்ளனர் . எதற்காகப் பதிலித்தாய் மூலம் குழந்தைகள் பெறப்படுகிறது என்ற உண்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது . அழகின் கோர முகம் புரிகிறது .
பொதுவாக சினிமாக்களில் ஒன்றிரண்டு கர்ப்பிணிப் பெண்களையே பார்த்த நமக்கு கர்ப்பிணிப் பெண்களின் கூட்டமும் அது தொடர்பான காட்சிகளும் ரொம்பவே புதுசு . பதிலித்தாயாக பணத்துக்காக வரும் ஒவ்வொரு பெண்களும் சொல்லும் காரணங்கள் அருமை.

ஆண் மகன் இல்லாமல் பெண்ணாகப் பிறந்து விட்டாயே என்று அப்பா சொன்ன காரணத்துக்காக, ஆணால் சம்பாதிக்க முடியாத வகையில் சம்பாதிக்க பதிலித்தாயாக வந்து இருப்பதாக ஒரு பெண் கூறுவது வேற லெவல்
அதே போல் ஐ போன் வாங்க பணத்துக்காக பதிலித்தாயாக வந்ததாக ஒரு பெண் கூறுவதும் பின்னால் அது குறித்து வரும் திருப்பமும் பலே டுவிஸ்ட்.
நம்மால் முகம் பார்க்கக் கூட முடியாது என்று தெரிந்தும் வயிற்றில் உள்ள குழந்தையை நேசிக்கும் பெண்கள் , அதே காரணத்துக்காக வயிற்றில் உள்ள குழந்தையை நேசிக்காத பெண்கள், நாம் குழந்தை பெற்றுக் கொடுக்கும் வரை ஜாலியாக இருந்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு போய் விடலாம் என்பதால் சிகரெட் பிடிக்கும் பெண்கள் என்று, இந்த ஏரியாவில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் ஹரி – ஹரீஷ் இருவரும்.
சமந்தா படத்தின் நடிப்புத் தூண். . தாய்மை, தங்கைப் பாசம் , சீற்றம் என்று அசத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார். . வில்லியாக வரலக்ஷ்மியும் சிறப்பு. உன்னி முகுந்தன், சம்பத் , பதிலித்தாயார்களாக வரும் கல்பிகா உள்ளிட்ட மற்ற பெண்கள் என்று எல்லோரும் சிறப்பான நடிப்பு.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு யானை பலம். ஒளி, வண்ணம் என்று எல்லா ஏரியாவிலும் அசத்தி இருக்கிறார் சுகுமார். மணி ஷர்மாவின் இசையும் சிறப்பு.

ஒரு பக்கம் பதிலித்தாய்களின் காட்சிகள் மறுபக்கம், சம்மந்தப்பட்ட கொடி
ய காரணம் தொடர்பான காட்சிகள் என்று மாறி மாறி காட்சிகள் போகின்றன.
மாறாக முதலில் பதிலித்தாயாக வரும் பெண்களின் கதையை மட்டுமே செண்டிமெண்ட் உணர்வோடு தான் பெற்றுக் கொடுக்கப் போகும் குழந்தையின் முகத்தை ஒரு முறையாகப் பார்க்க விரும்பும் பெண் அதனால் வரும் விளைவுகள் என்று சொல்ல ஆரம்பித்து , விஷயம் இதற்கு எல்லாம் அப்பாற்பட்டது என்ற வகையில் , ஒரு நிலையில் அந்த கொடிய அதிர்ச்சிகரமான காரணத்துக்கான காட்சிகளைத் துவங்கி சொல்லி இருந்தால் இன்னும் படம் சிறப்பாக வந்திருக்கும் .
எனினும் வித்தியாசமான கதை, களம், திரைக்கதை, செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் , விழிப்புணர்வுக்கு ஒரு விஷயம் என்று பறக்கிறது யசோதா.