அங்கீகாரம் @ விமர்சனம்

ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் எஸ். கே. பிரசாந்த், அஜித் பாஸ்கர் ,அருண் முருகன் ஆகியோர் தயாரிக்க, கே ஜே  ஆர் ,  விஜி வெங்கடேஷ், இசபெல்லா ,  வசுந்தரா,  சிந்தூரி , அஜித் கோஷி ,  ரமா நடிப்பில் தென்பாதியான்  எழுதி இயக்கி இருக்கும் படம் அங்கீகாரம் . 

எதில்  அங்கீகாரம்?
 
சென்னையில் துப்புரவுத் தொழிலாளியாக பணி புரியும் பானுமதிக்கு (ரமா ) , ஆதிரன் (கே ஜே  ஆர் ),  செல்வி (இசபெல்லா) என்று இரண்டு பிள்ளைகள். கூவம் நதிக்கரையில் பத்தடிக்கு பத்தடி கூட இல்லாத மண் சுவர் வீடுதான் படுக்கையறை , சமையல் அறை குளியல் அறை எல்லாம் . 
 
காலைக்கடன் என்றால்  கரையோரம் ஒதுங்க வேண்டும் .பெண்களின் நிலை இன்னும் மோசம்.   இருட்டு விலகுவதற்குள்   எல்லாம் முடிக்க வேண்டும். 
 
வீடு எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம் என்ற நிலை.  கணவன் எப்போதோ இறந்து விட்ட நிலையில் தனி மனுஷியாக பானுமதி  பிள்ளைகளை வளர்க்கிறார். பானுமதியின் அண்ணனும் இறந்து விட்ட நிலையில் அண்ணியும் அண்ணன் மகளும் இன்னொரு குடிசையில் . 
இவ்வளவு வறுமையான சூழலிலும் ஆதிரனும் , ஆதிரனின் மாமன் மகளும்,  தீவிர தடகள விளையாட்டு வீரர்களாக புகழ்பெற அற்புதமான திறமை மற்றும் கடும்  உழைப்பு இவற்றோடு போராடுகிறார்கள்.
 
ஆனால் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சு, ஆணையம் மற்றும் வாரியங்களின் மேட்டுக்குடி அதிகாரிகள் எல்லாம்,  விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்   அரசுப் பணத்தை உண்டு கொழுப்பது , அல்லது அவர்களுக்கு வேண்டிய எலைட் மேட்டுக்குடி ஆட்களுக்கு மட்டும் வாய்ப்பு தருவது, என்று மனசாட்சி இல்லாமல்  நடந்து கொள்கிறார்கள். 
 
குறிப்பாக ஆதிரன்  போல,   சமூக வகுப்பு மற்றும் பொருளாதார பாகுபாடுகளின்  பள்ளத்தாக்குகளில் இருப்பவர்களுக்கு உதவ மனம் இல்லை என்பதோடு,  இவர்களை எல்லாம் முன்னேற விடவே  கூடாது  என்பதில் அந்த  அதிகார வர்க்க நபர்கள் குறியாக இருக்கின்றனர் . அதோடு கிரிக்கெட் தவிர அவர்களுக்கு எதுவும் முக்கிய விளையாட்டு இல்லை. 
 
எப்படியாவது நாட்டுக்காக ஓடி வென்று வாழ்வில் உயர்ந்து,  தங்கள் குடும்பத்தை தரமுயர்த்த  வேண்டும் என்ற லட்சிய வேட்கையோடு ஓடும் ஆதிரன்கள் எல்லாம்   காலில் விழுந்து கெஞ்சிக்  கதறினாலும் பலனில்லை .
 
ஆதிரனின் மாமன் மகளான தடகள வீராங்கனையை படுக்கைக்கு அழைத்து , விளையாட்டை விட்டே விலகி ஓட வைக்கிறார்கள்.
 
திறமையும் தகுதியும் இருந்து தன்னை ஒதுக்கி வைக்கும் மத்திய மாநில அமைச்சர்கள், விளையாட்டு ஆணையங்களை கோர்ட்டுக்கு இழுக்கிறான் ஆதிரன் .
 
அவ்வளவுதான்!   அரசியல்வாதிகள், பிரபல வக்கீல்கள்,  அரசு அதிகாரிகள்,  காவல்துறை யாவும் அவனுக்கு எதிராக கலந்து கட்டி களம் இறங்குகின்றனர். அவனை நிரந்தரமாக தகுதி இல்லாதவனாக மாற்ற , அதிகாரத்தின் கொடிய கரங்களை விரிக்க, நடந்து என்ன? 
 
நியாயமான அங்கீகாரத்துக்காக ஏங்கிய ஆதிரன் என்ன ஆனான் என்பதே இந்த அங்கீகாரம். 
 
போதுமான வசதிகள் இல்லாத நிலையிலும் பட்டினி கிடந்து போராடி திறமையை வளர்த்துக் கொண்டு,  தகுதியோடு முன்னேறும் பூர்வகுடி, ஒடுக்கப்பட்ட,  ஏழை மக்களை,  அரசு எந்திரமும் அதை நாய்க்குட்டியாகப்  பயன்படுத்தும் எலைட் கூட்டமும் எப்படி எல்லாம் சீரழிக்கிறது என்ற உண்மைகளை சொல்லி, நமது விளையாட்டு துறைகளின் வண்டவாளத்தை கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார் இயக்குனர்  தென்பாதியான் .
 
நாயகனின் வீடு, வாழ்வியல் சூழல் என்று அவர் நடித்திருக்கும்  பின்புலம்  நிஜத்துக்கு ரொம்பவே நெருக்கும் . 
 
மலம் அள்ளும் தொழில் செய்யும் பானுமதிக்கு  வீட்டில் சாப்பாட்டு தட்டில் சோற்றுக்கு மேல் ஊட்டப்பட்டு குழம்பு கூட மலம் போல தெரிந்து, அவர் சாப்பிடாமல் படுப்பது….  காலொடிந்த ஆதிரன் மலம்  கழிக்க வெளியே போக முடியாமல் தவிக்கும் பொது,  வீட்டுக்குள்ளயே கழிக்க வைத்து “எவன் எவன் மலத்தையோ அள்ளுறேன் ; என் மகனுக்கு செய்ய மாட்டானா?’ என்று பானுமதி சொல்லும் இடம்.. இவை  எல்லாம் படம் பார்க்கும் இதயத்தில் ரத்தம் வடிகிறது.
 
கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் ஏன் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை? மற்ற விளையாட்டுகளில் சொந்த செலவில் உழைத்து முன்னேறி விருது பெற்ற  விளையாட்டு வீரர்களைக் கூட அரசு கண்டு கொள்ளாமல் வறுமையில் விட்டு விடுவது…. இந்த விஷயங்களில் மற்ற நாடுகள் எப்படி நடந்து கொள்கின்றன.. பெண் வீராங்கனைகளை பாலியல் பொருளாக பார்க்கும் அயோக்கியத்தனம்…என்று ஆரம்பித்து மொத்த விவகாரத்தையும் உடைத்துப் பேசி இருக்கும் எழுத்தாளர்- இயக்குனர் தென்பாதியானை , தாராளமாக இனி தென்’முழுமையான்’ என்றே சொல்லலாம். 
 
நயன்தாரா போன்றோர் நடித்த பிரபல படங்களை தயாரித்த கோட்டபாடி ராஜேஷ் தான் படத்தின் நாயகன் ஆதிரன். 
 
சும்மா சொல்லக் கூடாது …தனது உடம்பை தானே  செதுக்கி இழைத்து நிஜமான தடகள வீரராகவே மாறி இருக்கிறார். அவரது உடல் , கால்கள், தொடை, கைகள் யாவும் நிஜமான ஒரு மிகைத்திறமையான தடகள  வீரருக்கு இணையாகவே இருக்கின்றன. பிரம்மிப்பு. 
 
ஆனால் இது கூட பெரிய விசயமில்லை. மிக அட்டகாசமாக உணர்ச்சிப் பூர்வமாக நடித்து வியக்க வைக்கிறார். 
 
ஊரை ஏமாற்றாமல்,   தனக்கு பிடித்த விளையாட்டில் முன்னேறி, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்து , தனது குடும்பத்தையும் முன்னேற்ற ஆதி வயிற்றில் இருந்து ஆவேசமாக பொங்கும்போது எப்படி இருப்பான்? கே ஜே  ஆர் போலத்தான் இருப்பான். 
 
ஒரு நீளமான ரவுண்ட் ட்ராலி ஷாட்டில் (டப்பிங் பேசும்போது திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தாலும்) மிக சிறப்பாக நடித்துள்ளார்  கே ஜே  ஆர்   . ஒரு படத்துக்கு பல ஹீரோக்கள் பேசத் தயங்கும் உழைப்பை கே ஜே  ஆர் போட்டிருக்கிறார் . வாழ்த்துகள். பாராட்டுகள். சபாஷ்.
 
விஜி வெங்கடேஷ், இசபெல்லா ,  வசுந்தரா,  சிந்தூரி , அஜித் கோஷி ,  ரமா ஆகிய அனைவரும் பொருத்தமாக இருக்கிறார்கள்  . அவர்களின் இயல்பான நடிப்பு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. 
 
படத்துக்கு அதி அற்புதமான இசை கொடுத்துள்ளார் ஜிப்ரான் வைபோதா , தடகளக் காட்சிகளில் தடதடப்பையும்  கோர்ட் காட்சிகளில்   பரபரப்பையும் ஏற்றுகிறது அவரது இசை. 
 
நாயகனின் வீடு, அந்தப் பகுதியின் சூழல் இவற்றை உணர வைப்பதிலாகட்டும்….. தடகளப் பயிற்சி மற்றும்  போட்டிக் காட்சிகளில் நம்மையும் களத்துக்குள் இறக்கி விடுவதிலா கட்டும் சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்  விஸ்வநாத்.   
 
லால்குடி இளையராஜாவின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது. 
 
 விளையாட்டுத்துறை தொடர்பான சில விஷயங்கள் எல்லா ரசிகருக்கும்  புரியுமா என்பது பற்றி யோசிக்காமல் படபடெவென போகிறது. 
 
எமோஷனலாக வர வேண்டிய சில விஷயங்கள்  ஸ்டேட்மென்ட் ஆக கடந்து போகும்படி இருக்கின்றன.  
 
கோர்ட்  காட்சிகளுக்கு இடையே வரும் குடும்பக் காட்சிகள் சில தேவையில்லாமல்  filler களாக வந்து போகின்றன . (தலைமுறை முன்னேற்றம் பற்றி பேசும்  காட்சி  தவிர )
 
கிளைமாக்சில்  நங்கூரம் போல ஷார்ப்பாக அடித்து நிறுத்த  வேண்டிய படம் இது .
 
அதுவும் மிஸ்ஸிங் . 
 
இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும்,  அதற்காக இந்தப் படத்துக்காக அங்கீகாரத்தைக் கொடுக்காமல் இருக்க முடியாது. 
 
சமூகப் பார்வை,  நல்ல எழுத்து, சிறப்பான உருவாக்கம் ,  நல்ல நடிப்பு என்று  அருமையாக இருக்கிறது படம். 
 
இது போன்ற படங்களை வெற்றி பெற செய்வது ரசிகனின் கடமை . 
 
அங்கீகாரம் ….. அவசியம் தரலாம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *