சென்னை- காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தமிழ்த் திரையுலகில் பலம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்று. 2 வருடங்களுக்கு ஒருமுறை இச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.
2017-2019-ம் ஆண்டுக்கான தேர்தல், சென்னை அண்ணாசைலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (24-12-2017) பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது .
இந்த தேர்தலில், தயாரிப்பாளர் சங்கச் செயலாளராக இருந்த கே.ஈ.ஞானவேல்ராஜா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம்ம அணி என்ற பெயரில் தனி அணி அமைத்து போட்டியிட்டார்.
கே.ஈ.ஞானவேல்ராஜா (தலைவர்), கே. ராஜன் (துணைத்தலைவர்), நேசமணி (செயலாளர்), ஸ்ரீராம் (இணைச்செயலாளர்), ‘மெட்டி ஒலி” அபூபக்கர் சித்திக் (பொருளாளர்) ஆகியோர் போட்டியிட்டனர். இன்னொரு அணி, தற்போதைய தலைவர் டி.ஏ.அருள்பதி தலைமையில் போட்டியிட்டது.
இந்த அணியில், டி.ஏ.அருள்பதி (தலைவர்), பங்களா சீனிவாசன் (துணைத்தலைவர்), ஜெயக்குமார் (செயலாளர்), ராஜகோபாலன் (இணைச்செயலாளர்), என்.பாபு ராவ் (பொருளாளர்) ஆகியோர் போட்டியிட்டனர்.
மூன்றாவது அணி சார்பில், கே.தேவாஜ் (தலைவர்), கலைப்புலி ஜி.சேகரன் (செயலாளர்), துணைத்தலைவர் பதவிக்கு சம்பத், சந்திரன் (இணைச்செயலாளர்), பொருளாளர் பதவிக்கு மோகன் ராவ் ஆகியோர் உள்பட 58 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் ஜனநாயக முற்போக்கு அணி சார்பாக, ஏற்கனவே தலைவராக இருந்து வந்த டி.ஏ.அருள்பதிக்கும், தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனி அணி அமைத்து போட்டியிட்ட கே.ஈ.ஞானவேல்ராஜாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அலுவலகத்தில், காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகஸ்தர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது.
பலத்த பாதுகாப்புக்கிடையே விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவில், 89.50 சதவீத வாக்குகள் பதிவாயின. நேற்று இரவு (24-12-2017) வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
2017-2019-ம் ஆண்டுக்கான திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தலில் டி.ஏ.அருள்பதி 54 ஓட்டுகள் வித்தியாசத்தில் தொடர்ந்து 4வது முறையாக அபார வெற்றி பெற்று புதிய சாதனை படைத்து மீண்டும் தலைவரானார். அவருக்கு கிடைத்த ஓட்டுகள் 248. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே.ஈ.ஞானவேல்ராஜாவுக்கு கிடைத்த ஓட்டுகள் 194.
உப தலைவர் பதவிக்கு டி.ஸ்ரீனிவாசலு (எ) பங்களா சீனு (216), செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஜெ.ஜெயகுமார் (169), பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட என்.பாபு ராவ் (201) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

செயற்குழு உறுப்பினர்களாக வி.அன்புமணி, ஏ.வி.அரசு, ஜி.சொக்கலிங்கம், யு.தனசேகரன், கே.காளையப்பன், ஏ.காமராஜ், யு.கிருஷ்ணமூர்த்தி, ஏ.எம்.ஏ.மாலிக், பிளாசா நடராஜன், ஏ.ஜி.ரகுபதி, ஏ.ராஜாரஹிம், படூர் எஸ்.ரமேஷ், பிரபு (எ);
டி.ஆர்.ராம்பிரசாத் (கலைப்பூங்கா), சி.சாய்பாபா (எ) சாய் ஆகியோர் டி.ஏ.அருள்பதியின் ஜனநாயக முற்போக்கு அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கே.ஈ.ஞானவேல்ராஜாவின் நம்ம அணியிலிருந்து இணைச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஸ்ரீராம் (212), மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.மோகன், எஸ்.தியாகு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
வெற்றி பெற்ற டி.ஏ.அருள்பதிக்கு தயாரிப்பாளர் ‘கலைப்புலி” எஸ்.தாணு, தயாரிப்பாளர் டி சிவா, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், தயாரிப்பாளர் சௌந்தர் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
