ஸ்டோன் பெஞ்ச் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, வைபவ் , அனகா, ஆந்தகுடி இளையராஜா, ஆடுகளம் நரேன், கஜ ராஜ், நடிப்பில் அசோக் வீரப்பன் இயக்கி இருக்கும் படம்.
பபூன் வேடத்தில் கூத்துக் கட்டும் குடும்பத்தில் பிறந்த தென் மாவட்ட இளைஞன் ஒருவன் ( வைபவ்) , அவனது நண்பன் ஒருவன் ( ஆந்தகுடி இளையராஜா) இருவரும் தொழில் நசிவால் அயல்நாடு போய் சம்பாதிக்க முடிவு செய்து , அதற்குப் பணம் சேர்க்க லாரி டிரைவராக வேலை செய்கிறார்கள் . அந்த லாரியில் அவர்களுக்கே தெரியாமல் போதைப் பொருள் கடத்தப்படுகிறது . அதற்கு பொறுப்பான தனபால் என்ற ரவுடி முக்கிய அமைச்சருக்கு ( நரேன்) நெருக்கமான ஆள்.
அமைச்சருக்கும் முதல்வருக்கும் ( வ. ஐ ச. ஜெயபாலன்) ஏற்படும் அரிசயல் பனிப்போரில் அமைச்சரைத் தட்டி வைக்க முதல்வர் டி எஸ் பி ஒருவர் மூலம் தனபாலைத் தூக்க முயல, அதில் நாயகனும் நண்பனும் பகடைக்காய் ஆகின்றனர்.
இலங்கை அகதிகள் முகாமில் வாழும் நாயகியின் ( அனகா) உதவியோடு நாயகன் தப்பிக்க முயல , நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
இலங்கை தமிழர்களின் சோகத்தை சொன்னதற்காக இயக்குனருக்கு முதலில் பாராட்டுகள்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் அட்டகாசமான லொக்கேஷன்களில் விசுவல் நன்றாக இருக்கிறது .
சந்தோஷ் நாராயணன் துள்ளலான பாடல்கள் கொடுத்துள்ளார் . அவற்றை ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை
ஆந்தகுடி இளையராஜா நடிப்பில் கவனிக்க வைக்கிறார் .
அரசியல் விளையாட்டில் தனி மனித பாதிப்பு என்பது புதிய விசயமும் இல்லை . ரொம்ப துவைக்கப்பட்ட விசயமும் இல்லை. அது ஒகேதான் . ஆனால் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யமும் அழுத்தமும் கொடுத்து இருக்கலாம்.
