முக்குழி பிலிம்ஸ் சார்பில் கே பி வேலு , ஜெயராமன், ராமச்சந்திரன் தயாரிப்பில் விக்னேஷ், ஆரா மகா , செந்தி, ஷாலினி நடிப்பில் சேரா கலையரசன் இயக்கி இருக்கும் படம்.
கிராமத்தில் உயர் சாதிப் பெண்ணுக்கும் (ஆரா) தாழ்த்தப்பட்ட சாதியிலேயே கொஞ்சம் பெரிய ஆளான ஒருவரின் மகனுக்கும் ( விக்னேஷ்) காதல்.
பல வருடங்களுக்கு முன்பு உயர் சாதி நபர் ஒருவன் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்துக் கர்ப்பமாக்க , அந்தக் காதலை உயர் சாதி ஆட்கள் ஏற்காததோடு சம்மந்தப்பட்ட பெண்ணின் அப்பாவை நாயை விட்டுக் கடிக்க வைத்து அவமானப்படுத்தி விடுகிறார்கள் . அந்த விசயத்தில் உயர்சாதி ஆட்களிடம் பேசி நியாயம் பெறப் போராடவில்லை என்று நாயகனின் அப்பா மீது சக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோபம்.

இந்த சூழலில் இந்தப் புதிய காதலைக் கண்டு பிடிக்கும் அந்த தாழ்த்தப்பட்ட சமூக சக நபர் ஒருவன் , பெண்ணின் தாய்மாமாவிடம் போய் , ”அப்போ ஏமாந்துட்டோம் இந்த முறை விட மாட்டோம் . இந்தக் காதல் நிறைவேற வேண்டும்” என்று கொடி பிடிக்க, விஷயம் பெண்ணின் அம்மாவுக்கும் உறவுகளுக்கும் சாதிக்காரர்களுக்கும் தெரிய வர, மருத்துவராகும் கனவோடு காதலித்த அந்தக் காதல் ஜோடிக்கு என்ன ஆச்சு என்பதே குழலி .
அக்கறையான முயற்சி .
கிராமியப் பழக்க வழக்கக் கலாச்சாரங்களை காட்சிகளில் இணைத்து இருக்கும் விதம் அழகு .
அழுத்தமான காட்சி அமைப்பு மற்றும் இயக்கம் . நிறைய கிராமிய மனிதர்களை யதார்த்தமாக நடிக்க வைத்து இருக்கிறார் . ஆரா, செந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

உதயகுமாரின் பாடல் இசையும் பின்னணி இசையும் அருமை .
சமீரின் ஒளிப்பதிபும் சிறப்பு .
எண்பதுகள் தொண்ணூறுகள் பாணியிலான படமாக்கலும் அர்த்தமற்று அலை பாய்ந்து சிதறும் திரைக்கதையும் பெரும் குறைகள். சாதிப் பிரச்னையில் முழுக்க முழுக்க அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு நிலையில் வித்தியாசமாக ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று நம்ப வைத்து ஏமாற்றியது குறை
அந்தக் கால பாணியில் ஒரு படம் பாக்கணும் என்போர்க்கு வாய்ப்பு