மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன . நதிகள் இணைப்பை வற்புறுத்தும் படம் இது என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது . பாடல்கள் மனத்தைக் கவரும்படி இசை அமைத்து இருக்கிறார் ரதன்.

நிகழ்ச்சியில் நடிகர் ஆர்ஜே பாலாஜி. பேசும்போது, “எல்லாமே இருந்தாதான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில்தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில்தான் நட்பு ஆரம்பித்தது.
எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம்தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்கச் சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினை மற்றும் , நதிநீர் இணைப்பை பற்றி பேசும் மிக முக்கியமான படம் இது” என்றார்

இசையமைப்பாளர் ரதன் , “நான் இந்த இடத்துக்கு வரக் காரணம் என் அம்மாதான். அவர் என் மீது வைத்த நம்பிக்கைதான் நான் இங்கு இருக்கிறேன். அம்மாவின் பெயர் ராதா . அதில் இருந்துதான் என் பெயரை வைத்துக் கொண்டேன். நான் தமிழன்தான். எனக்கு தெலுங்கே தெரியாது . ஆனால் தெலுங்குப் படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்ற உடன் , அங்கேயே பல படங்கள் பண்ணி விட்டேன் . அதில் அர்ஜுன் ரெட்டி படமும் ஒன்று . இப்போதுதான் தெலுங்கு கற்றுக் கொண்டு இருக்கிறேன்.
அர்ஜூன் ரெட்டி படத்தில் என் இசையை பாராட்ட என்னை அழைத்தார் கண்ணன் சார். அங்கு போன பிறகு, ‘நாம படம் பண்ணலாம்’ என சொன்னதோடு, அடுத்த நாளே என் பெயரை படத்தின் விளம்பரத்தில் சேர்த்தார். தமிழில் ஒரு நல்ல படத்தில் இங்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். நல்ல ஒரு கருத்தை சொல்லும் ஒரு முக்கியமான படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

நடிகை இந்துஜா, “அதர்வா, ஆர்ஜே பாலாஜியுடன் தான் அதிகம் எனக்கு காட்சிகள் இருந்தது. எனக்கு நடிக்க மிகவும் எளிதாக இருக்குமாறு முழு சுதந்திரம் கொடுத்தார் கண்ணன் சார். ஆர்ஜே பாலாஜியின் மார்க்கெட் இப்போது இன்னும் ஏறியிருக்கிறது, எல்லோரும் தியேட்டரில் போய் படத்தை பார்ப்பீங்க என நம்புகிறேன் என்றார்.
இயக்குனர் ஆர்.கண்ணன் பேசும்போது, “இந்தியா வரும் விங் கமாண்டர் அபிநந்தனை நினைத்து பெருமைப் படுகிறோம் . பாகிஸ்தான் ராணுவத்திடம் பேசும்போது அவர் காட்டிய கம்பீரம்.. அதை ஒரு தமிழ்த் திமிருன்னே சொல்லலாம் . அவருக்கு பூமராங் குழுவின் பாராட்டுக்கள் .

ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம். எப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். இந்த படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி.
படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் ட்ரைடெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி. இவன் தந்திரன் படத்துக்கு பிறகு இது எனக்கு முக்கியமான படம். அந்த படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்த படத்தையும் ரசிகர்கள் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் அதர்வா தனது பேச்சில், “படம் எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. மிக வேகமாக முடித்து விட்டோம். பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்கு திரும்ப வரும். இந்த படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம்.
ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறைய படங்கள் இசையமைக்க வேண்டும். இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தை தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன் என்றார் .

இந்த சந்திப்பில் நடிகை மேகா ஆகாஷ், படத்தொகுப்பாளர் ஆர்கே செல்வா, எம்கேஆர்பி ப்ரொடக்ஷன்ஸ் எம்கே ராம் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.