பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மிக அகன்ற திரையில் திரையிடப்பட்ட பாடல்களும் முன்னோட்டமும் சிறப்பாக இருந்தன . இளைஞர்கள் காதல், நட்பு, வாழ்வில் திருப்தி , உறவுகள் இவைகளை பற்றி பேசும் படம் இது என்பது புரிந்தது

நிகழ்ச்சியில் கார்த்தி பேசும்போது, “தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாகதான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
அவரின் தாத்தா லேனா செட்டியார் (எம் ஜி ஆர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற) மதுரை வீரன் படத்தைத் தயாரித்தவர். அவரின் பரம்பரையிலிருந்து லக்ஷ்மன் வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி.
இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.
ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.
ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.

இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் லக்ஷ்மன் பேசுகையில், “குழந்தைப் பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும்.

ரஜத் கதை சொல்லும்போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார்.உலகின் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம்” என்றார்.
ரகுல் ப்ரீத் சிங் பேசும்போது , “இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.
கார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
இயக்குநர் ரஜத் ரவி ஷங்கர் பேசும்போது, “இந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் சாருடன் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் முடிவானது.

இப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம்தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.
கார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
ரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. இந்த படத்தில் அவருடைய முழுத் திறமையையும் காட்டியிருக்கிறார்.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி” என்றார்.
