தமிழ் சினிமாவின் நூறாண்டு கால தகவல்களைத் திரட்டி வரிசைப்படுத்திப் பாதுகாக்கும் காவலனாக திகழ்ந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.
தமிழ் நாட்டின் முதல் மவுனப் படமான கீசக வதம் படத்தை எடுத்த நடராஜ முதலியாரை தேடிச் சென்று புகைப்படம் எடுத்தது முதல் அவர் திரட்டிப் பாதுகாத்த தமிழ் சினிமா தகவல் பொக்கிஷங்கள் கொஞ்ச நஞ்சமல்ல
தள்ளாடாத வயதிலும் தள்ளாடாமல் தன் பணியை செய்தவர் அவர் .
தமிழ் சினிமாவின் ஆவணங்களை ஆணவம் இன்றி திரட்டிப் பாதுகாத்த அவரைப் பற்றிய சிறப்பு மலர் ஒன்றை தொகுத்து வெளிக் கொண்டு வந்திருக்கிறார்,
வண்ணத்திரை சினிமா வார இதழின் தலைமை செய்தியாளர் நெல்லை பாரதி
ஆனந்தனின் சிறப்புகள் , அவர் செய்த சாதனைகள் , அவரது பணிக் காதல் , அவருக்கு சினிமாவும் அரசும் செய்தது செய்யத் தவறியது என்று பல்வேறு தகவல்கள் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளை
பத்திரிகையாளர்கள் , சினிமா பிரமுகர்கள் பலரும் எழுதி உள்ளனர் . (துறைத் தகப்பன் என்ற பெயரில் நாம் எழுதிய கட்டுரையும் இதில் உண்டு )
எழுதிய ஒவ்வொருவரின் பெரிய அளவு புகைப்படம் ,பெயர் , பணி நிலை , மின்னஞ்சல் போன்றவற்றை எல்லாம் குறிப்பிட்டு, எழுதியவர்களை சிறந்த முறையில் நெல்லை அங்கீகரித்து இருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம் .
நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள் மலர்ந்து மணம் வீசும் மலர் !


