இசையமைப்பாளர் , இயக்குனர்,நடிகர் என்று பல துறைகளில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஹிப் ஹாப் ஆதி, உலக அளவில் எட்டு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி உள்ள நிலையில் மேற்கொண்டு ஆறு நாடுகளில் நடத்த இருக்கிறார் . சில படங்களுக்கு இசை அமைத்து வரும் ஆதி அடுத்து , ஜோ பட இயக்குனரின் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் .
இதற்கிடையில் தமிழ் மொழிக்கென அவர் செய்திருக்கும சில செயல்கள் மற்றும் படைப்புகள் சிறப்பானவை.
தமிழ் மொழி இனம் கலாச்சாரம் இவை தொடர்பான வரலாறு மற்றும் சிறப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்ல தமிழன்டா என்ற அமைப்பை ஏற்படுத்தி தன் நண்பர்களோடு இணைந்து தமிழின் வரலாறு சொல்லும் ஆவணப்படம் ஒன்றை எடுத்தார் ஆதி
அதற்குக் கிடைத்த ஆதரவுக்குப் பிறகு, பொருநை எனப்படும் தாமிரபரணி நதிக்கரையில் நடைபெறும் அகழ்வாய்வை ஆவணப் படமாக எடுத்துள்ளார். இது இந்திய அளவில் அகழ்வாராய்ச்சி குறித்த முதல் ஆவணப்படம் என்று கூறப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி எப்படி நடக்கிறது அதில் கிடைக்கும் பொருட்களின் வயதை எப்படி கரிமக் காலக் கணக்கீடு (கார்பன் டேட்டிங்) முறையில் கண்டு பிடிக்கிறார்கள் என்று அறிவியல் பூர்வமாக விளக்கி இருப்பது நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கும் சிறப்பு .
பொருநை நதிக்கரையில் கிடைத்த இரும்பை கரிமக் காலக் கணக்கீட்டில் அறிவியல் பூர்வமாக சோதித்தபோது அதன் ஆயுள் ஐயாயிரம் ஆண்டுகள் என்ற உண்மை தெரிய வந்தது .
இது அகில உலகையே வியக்க வைத்த உண்மையாக மாறியது .
காரணம் இதுவரை துருக்கி, அனடோலியாவில்தான் இரும்பு பயன்பாடு முதன் முதலாகப பயன்படுத்தப்பட்டது என்று மேற்கத்திய நாடுகள் சொன்னதை நம்பிக் கொண்டே இருந்த நமக்கே இது ஓர் இன்ப அதிர்ச்சி .
இதை தமிழக முதல்வர் ஸ்டாலினும் அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்தில் அறிவித்தார் .
இப்படி ஒரு உண்மை வெளிப்படுவதற்கு முன்பே இப்படி ஒரு சரித்திரம் வெளிப்படும் என்று தெரியாமலேயே அந்த அகழ்வாராய்ச்சியை ஆவணப் படுத்த வேண்டும் என்று ஆதி படமாக்கத் துவங்கி இருந்தார் என்பதே இதன் சிறப்பு.
உலகத்தின் பழமையான இரும்பு நாகரீகம் தமிழர் நாகரீகமே என்ற உண்மை வெளிப்பட்டு இருக்கும் இந்த வரலாற்றை ஆவணப்படமாக்கி உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதோடுதமிழ்நாட்டில் திரையரங்கிலும் ஓ டி டி தளங்களிலும் வெளியிடவும் இருக்கிறார் ஆதி
இது பற்றிப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆதி, இந்த ஆவணப் படத்தின் துவக்க நிமிடங்களைப் போட்டுக் காட்டினார் .
அதன் பிறகு அது பற்றிப் பேசும்போது, ஆதியிடம் நான் , ” சுமார் பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் பனியுகம் (ஐஸ் ஏஜ்) முடிந்தது.. தாவரங்கள் மண்ணில் முளைப்பதை மக்கள் பார்த்தார்கள்’ என்று நீங்கள் இந்தப் படத்தில் சொல்கிறீர்கள். ஆனால் உலகம் எங்கும் பனியுகம் ஒரே நேரத்தில் முடியவில்லை. (பூமத்திய ரேகைக்கு கீழ் உள்ள தென்னிந்தியா, மலேசியா சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், ஆப்பிரிக்கா , தென் அமெரிக்கா போன்ற நாடுகள் பல காலம் முன்பே வெப்ப மண்டலப் பகுதியாக மாறி விட்டன )
ஒரிஸ்ஸா பாலு போன்றவர்கள், ” தமிழுக்கு ஐம்பதாயிரம் ஆண்டு வரலாறு உண்டு. ஆனால் அதை உலகம் ஏற்காது . முயன்றால் குறைந்த பட்சம் இருபதாயிரம் ஆண்டுகள் வரை நிரூபிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்கள் .
ஆனால் நீங்கள் ஆவணப் படத்தைத் துவங்கும் விதம் பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமே இல்லை என்ற தொனியில் உள்ளது .
எனவே உலகின் மூத்த இரும்பு நாகரீகம் தமிழர் நாகரீகமே என்ற உண்மையை சொல்லும் அதே நேரம் , அது தமிழ் மொழி இன வரலாற்றை நாமே குறைத்துக் கொள்வது போன்ற தொனியை படம் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “என்றேன்
அதற்கு ஆதி ” அப்படி வராது . நான்கு நிமிடம் மட்டுமே இங்கே காட்டி இருக்கிறேன். முழுதாகப் பார்க்கும்போது அந்த சந்தேகம் உங்களுக்கு வராது . ” என்றார் .
எனில் மகிழ்ச்சியே.
ஏனெனில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆதி ஆர்வமாக இயங்கினாலும் ஒரு நிலையில் அவரது செயல்பாடுகள் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாயின. இதிலும் அப்படி ஏதும் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஆதியின் பொறுப்பு