
இயக்குனர்கள் ராஜா , ‘ஜில்லா’ நேசன் ஆகியோரிடம் பணியாற்றிய பிரான்சிஸ் மார்க், தனது மார்க் ஸ்டுடியோ பிரைவேட் லிமிட்ஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை எழுதி இயக்க,
குறையொன்றும் இல்லை , ஆகோ ஆகிய படங்களில் நடித்த கீதன் பிரிட்டோ நாயகனாக நடிக்க, சில தெலுங்குப் படங்களில் நடித்து இருக்கும் ஈஷா நாயகியாக நடிக்க,
இசைஞானி இளையராஜாவின் 1001 ஆவது படமாக வருகிறது ஒய் .
யுக ராஜ் ஒளிப்பதிவு . மணி மொழியன் கலை இயக்கம் . என் . பாஸ்கரன் வசனம் . மணியின் மணியான படத் தொகுப்பு .
எளிதான பெயராக இருந்தாலும் அது என்ன ஓய்?
இலகுவாக தெளிவாக பேசுகிறார் பிரான்சிஸ் மார்க்.
“ஓய் என்பது பொதுவாக அழைப்புச் சொல் , பிராமண சமூகத்தில் என்ன ஓய் என்பார்கள் .
சில வழக்கு மொழிகளில் ஒருவருக்கான மெல்லிய எதிர்ப்பை தெரிவிக்கும்போது ”ஓய் என்ன கிண்டலா? ” என்பார்கள் .
(சில பகுதிகளில் இந்த ஓய் என்பது அழைப்புக்கு பதில் சொல்லும் வார்த்தையாகவும் இருக்கிறது . உதாரணம் … ஏ … ராமாத்தா … என்றால் தூரத்தில் உள்ள ராமாத்தா ”ஓய்….’ என்பார் )
ஒய் என்ற வார்த்தைக்கு ஒய்வு என்றும் ஒரு பொருள் இருக்கிறது .
இப்படி தமிழ் அகராதியில் இந்த வார்த்தைக்கு உள்ள பல்வேறு அர்த்ததங்களில் ஜோடனை என்பதும் ஒரு அர்த்தம் .
ஒரு விசயததை பொய் சேர்த்து சுவாரஸ்யமாகச் சொன்னால் “நல்லா ஜோடிகிறான் பாரு…” என்பார்கள் இல்லையா ? அந்த வகையில்தான் படத்துக்குப் பெயர் வைத்துள்ளேன் ” என்கிறார் .
எனில் படத்தின் கதை ?
” ஒரு பெண்ணும் ஆணும் ஒரு முறை சந்தித்துக் கொள்கிறார்கள். அவனை ஓய் என்று அழைக்கிறான் அவள் . அவனோ ஒரு திருப்பத்தில் கடந்து விடுகிறான்.
பின்னர் இன்னொரு சூழலில் அவன் அவளை ஓய் என்று அழைக்கிறான். அவள் போய் விடுகிறாள் .
அவனது வீட்டுக்கு செல்லும் அவள், அங்கே என்ன ஜோடிக்கிறாள் என்பதுதான் கதை . இதற்கு மேல் கதையை திறந்து சொல்ல முடியாத சூழல். படத்தில் உங்களை மிகவும் கவரும் இந்தக் கதை ” என்கிறார் .
படத்தில் வேறு என்ன ஸ்பெஷல் ?
“சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் சிலம்பச் சண்டையை பிரதானமாகச் சொல்கிறோம்.
சும்மா அதை ஒரு காட்சிக்காக மட்டும் வைக்காமல், கதையில் மிக பொருத்தமாக வைத்துள்ளோம் . அது படத்தில் ரசிக்கும்படியாக இருக்கும் .
பழம்பெரும் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பதோடு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.
அவரும் இளம் நகைச்சுவை நடிகர் அர்ஜுனும் தாத்தா பேரனாக காமெடியில் கலக்கி உள்ளார்கள்
படத்தின் மிகப் பெரிய பலம் இசைஞானி இளையராஜாவின் இசை . அவரிடம் இசைக்கு போன போது பலரும் பயமுறுத்தினார்கள் .
ஆனால் ‘அவரில்லாமல் இந்தப் படத்தைச் செய்ய முடியாது’ என்று உணர்ந்து அவரிடம் போனேன் . எனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அக்கறையோடு பேசி, கதை கேட்டு அற்புதமான இசை கொடுத்துள்ளார் .
அவரோடு சேர்ந்து காதலுக்கு மரியாதை கொடுத்த சங்கிலி முருகன் சாரும் என்னுடன் இருப்பது எனக்கு பெரிய உதவியாக இருந்தது
படத்தின் டீசருக்கு ராஜா சார் கொடுத்துள்ள இசையையே ரசிகர்கள் கொண்டாடுவது சந்தோஷமாக இருக்கிறது . படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் . ஐந்தும் ஐந்து விதமாக இருக்கும் .
அதுவும் ஒரு பாடலை ராப் இசையில் தூள் கிளப்பி சட்டென்று ஒரு இடத்தில் நமது மண்ணின் இசைக்கு ராஜா சார் மாற்றுவார் பாருங்கள் . அற்புதமான விருந்து அது
இப்படியாக மிக சிறப்பான , இயல்பான, யதார்த்தமாக உள்ளம் கவரக் கூடிய படமாக ஒய் இருக்கும்” என்கிறார் பிரான்சிஸ் மார்க் .
கீதன் பிரிட்டோ கூறும்போது “படத்தில் வரும் சிலம்பச் சண்டை மிக சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை சிலம்பப் பயிற்சிக்கு அனுப்பினார்கள் .
சங்கிலி முருகன் அய்யா தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எனக்கு போன் செய்து நான் பயிற்சிக்கு போகிறேனா என்று உறுதி செய்து கொள்வார் .
அவர் மற்றும் இயக்குனர் உட்பட என் மீது காட்டிய அக்கறை மறக்க முடியாதது ” என்கிறார் .
“நான் படத்தொகுப்பு செய்ய இளையராஜா சார் இசை அமைக்கும் முதல் படம் இது . அவர் பாராட்டும்படி படத் தொகுப்பு அமையவேண்டுமே என்று பதட்டமாக இருந்தேன் .
எடிட்டிங்கில் ரொம்ப நெருக்கிப் பிடித்தால் , “இதுல நான் எங்கே இசை அமைக்கிறது?’ன்னு அவர் கேட்பார் னு சொல்வாங்க . அதனால அவர் படம் பார்க்கும்போது பதட்டமா இருந்தேன் .
வெளியே வந்து ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லாரையும் பாராட்டிட்டுப் போனார் ரொம்ப சந்தோஷமா இருந்தது ” என்கிறார் மணி, துள்ளலோடு .
வசன கர்த்தா பாஸ்கரன் ” இது அருமையான கிராமத்து படம் சுவாரஸ்யமான கதை . காமெடிக்கும் பஞ்சம் இல்ல . சங்கிலி முருகன் சார் ,அர்ஜுன் காமெடி ஆகட்டும் , படத்தில் வரும் மத்த சீன்கள் ஆகட்டும் ..
இது காமெடியில் கலக்குற படமா வந்திருக்கு . ரசிகர்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை சந்தோஷமா சிரித்துக் கொண்டே இருப்பாங்க ” என்கிறார் .
படத்துக்குப் பாடல் எழுதி இருக்கும் கவிஞர் விவேகா ” மாபெரும் இசை மேதையான இசைஞானி இளையராஜாவுடன் இந்தப் படத்தில் இணைந்தது சந்தோஷமான விஷயம்.
அந்த அரிய வாய்ப்பை தந்த பிரான்சிஸ் மார்க்குக்கு நன்றி . எப்படி வார்த்தைகளை போடுவது எப்படி வரிகளை அமைப்பது என்பது குறித்து இசைஞானியிடம் பல விசயங்களை தெரிந்து கொண்டேன்.
அவருக்கு என் மனப்பூர்வமான நன்றி ” என்றார்
வெற்றிகரமா வரட்டும் ஓய் !