இன் பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அன்ஜும் குரேஷி, சஜித் குரேஷி தயாரிக்க, ரித்திகா சிங், சந்தீப் கோயத், மனிஷ் ஜஞ்ஜோலியா, கியான் பிரகாஷ் நடிக்க, ஹர்ஷவர்தன் எழுதி இயக்கி இருக்கும் படம் இன் கார். அதாவது ‘காரில் …’ என்று பொருள் .
கொலை செய்து விட்டு தப்பி வரும் ஒருவனை அவனது உறவுக்கார நபர்கள் இருவர் காப்பாற்றி ஒரு வாடகை காரில் அழைத்துப் போகும் போது,
‘ஒரு வேளை இவன் ஜெயிலுக்குப் போய் விட்டால் ரொம்ப கஷ்டப்படுவான்; அதற்குள் ஒரு பெண்ணை அனுபவித்துப் போகட்டும் ; நாமும் சேர்ந்து அனுபவிப்போம் ‘ என்று முடிவு செய்து,
சாலையில் ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்கும் யாரோ ஒரு இளம்பெண்ணை சட்டென்று காருக்குள் இழுத்துப் போட்டு கடத்திக் கொண்டு போனால்,
போகும் வழியிலேயே அவளிடம் அருவருப்பாக நடந்து கொண்டால், அந்த அநியாயத்தைக் கண்டிக்க முடியாத நிலையில் வயசான கார் டிரைவர் கையறு நிலையில் இருந்தால் ..
அந்தப் பெண்ணின் நிலை என்ன என்பதே இந்தப் படம்.
சிக்கிக் கொள்ளும் பெண்ணாக ரித்திகா சிங்.
மற்ற கதாபாத்திரங்களில் சந்தீப் கோயத், மனிஷ் ஜஞ்ஜோலியா, கியான் பிரகாஷ்.
பெரும்பாலான காட்சிகள் காருக்குள்ளேயே .
அதிர்ந்து பயந்து அழுது , அருவருப்பில் வெந்து நொந்து கண்ணீர் விட்டு கதறி , துடி துடித்து , ”என்னை என்ன வேண்ணா பண்ணிக்குங்க. கொன்னுடாதீங்க” என்று கோரிக்கை வைத்து,
அதற்காக கார் நிற்கும் இடத்தில் பொங்கி எழும் கதாபாத்திரத்தில் ரித்திகா சிங், கண்ணீரும் , மூக்கு ஒழுகலும், ஒடுங்குதலும், புழுதியில் புரள்தலுமாக ரித்திகா சிங் சிறப்பான நடிப்பு .
மிதுன் கங்கோபாத்யாவின் ஒளிப்பதிவு, மத்தியாஸ் டூப்லெஸ்சியின் ஒளிப்பதிவும் மணிக் திவாரின் எடிட்டிங்கும குறையில்லை. தேவையின்றி நீளும் காட்சிகள் , இந்தியில் இருந்து மொழி மாற்றும் போது எழுதப்பட்டிருக்கும் பக்குவமில்லாத தமிழ் வசனங்கள் , கிளைமாக்ஸ் திருப்பத்துக்கான அதீத காத்திருப்பு இவை குறைகள் .
எனினும் அடுத்த நிமிடம் தனக்கு நடக்கப் போகும் அநியாயம் தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பெண்களின் இடத்தில் இருந்து பார்த்தால் இந்தப் படத்தின் அவசியம் விளங்கும் .
வாகனங்கள் பயணிக்கும் சாலை ஓரங்களில் பக்கத்தில் ஆட்கள் இருக்கிறார்களே என்ற நம்பிக்கையில் பெண்கள் கவனமில்லாமல் ஒரு நொடி கூட அலட்சியமாக நிற்கக் கூடாது என்று அறிவுறுத்தும் வகையில் இது கவனிக்க வேண்டிய படம்.