ஜி வி 2 @விமர்சனம்

வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெற்றி, கருணாகரன் , அஸ்வினி, ரோகினி, மைம் கோபி, முபாஷிர், ஜவஹர் நடிப்பில் வி ஜே கோபிநாத் எழுதி இயக்கி ஆஹா ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கும் படம். 

வெற்றி நடிப்பில் பாபு தமிழ் கதை வசனத்தில் வி ஜே கோபிநாத் இயக்கி வந்த ஜி வி படத்தின் தொடர்ச்சி. 
முக்கோணவியல் , தொடர்பியல் என்கிற தத்துவங்களின் அடிப்படையில் அமைந்த படம். 

ஒரு செயல் நடக்கிறது என்றால் அதற்கு காரணமான அல்லது அதனால் பலன் பெறும் நபருக்கு அந்த செயலின் தொடர்ச்சி நல்ல விதமாகவோ அல்லது தவறான விதமாகவோ ஏதேனும் ஒரு வகையில் தொடரும் என்ற நம்பிக்கையால் ஏற்படும் சுவாரஸ்யமே இந்தப் படங்களின் அடிப்படை. 

ஷேர் ஆட்டோவும் பிறகு கால் டாக்சியும் ஓட்டுகிற சரவணன் என்ற இளைஞன் (வெற்றி)அவன் நண்பன் மணியுடன் (கருணாகரன்)சேர்ந்து வசிக்கும் நிலையில்,

குடியிருக்கும் வீட்டு ஓனர் பெண்மணியின் (ரோகினி)  வீட்டில் கொள்ளை அடிக்கிறான். அதன் பிறகு அவர் குடும்பத்திலும் தன் குடும்பத்திலும் ஒரே மாதிரி வருந்தத்தக்க நிகழ்வுகள் இழப்புகள் நடந்து இருப்பதையும் நடப்பதையும்  உணர்ந்து, தான் செய்த தவறுக்குப் பரிகாரம் என்று எண்ணி , அந்த பெண்மணியின் கண் பார்வையற்ற மகளை ( அஷ்வினி) மணந்து கொள்கிறான்.  

மாமியார் வழியே அந்த  வீடு  தனக்கு வரும் என்று எண்ணிய நிலையில் , மாமியார் தன் தம்பிக்கு அந்த வீட்டைக் கொடுக்க முடிவு எடுக்கிறாள் . 

இது இப்படி ஆக,  கணவனைப் பிரிந்த அக்கா அவளது பிள்ளை, அம்மா,  அப்பா, மாமியார்,   மாமனார், மனைவி ஆகியோரின் மளிகைச் செலவு,  குடும்பச் செலவு,  மருத்துவ செலவு யாவும் தன் தலையில் விடிய , 

பழையபடி கொள்ளையடிக்க முடிவு செய்கிறான். தனக்கும் மணிக்கும் நண்பனாக ஆகி இருக்கும் கல்லூரி மாணவனும் பணக்காரனும் பாட்டி மட்டுமே உடன் இருக்கும் வீட்டில் தனியாக வசிப்பவனுமான  ஹரியின் (முபாசிர்)   வீட்டில் மணியோடு சேர்ந்து திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிறான் 

வெற்றிகரமாக திருடி முடித்த நிலையில் ஹரி   கொலை செய்யப்படுகிறான். 

கொலை செய்தது யாரென்று தெரியாமல் சரவணனும் மணியும் விழிக்க, அப் நார்மலான இன்ஸ்பெக்டர் விசாரிக்கக் களம் இறங்க, மாமியாரின் தம்பியின் நடவடிக்கைகள் புதிராக இருக்க, 

முக்கோணவியல் , தொடர்பியல் தத்துவங்களின்படியோ அல்லது இயல்பாகவோ நடக்கிற சம்பவங்களும் அதன்  விளைவுகளுமே இந்த ஜி வி 2 .

நிதானமான இயல்பான எளிமையான படமாக்கல் படத்தின் பலம் .

வாழ்வின் கனம் சுமக்கும் பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார்  வெற்றி

தேவை என்றால் எந்த எல்லைக்கும் போகிற  – தனக்கு எதுவும் ஆகி விடுமோ என்று பயப்படுகிற கதாபாத்திரத்தில் கருணாகரன் சிறப்பு . 

கண் தெரியாத-  நடக்கும்  தவறுகள் எதையும் அறியாத பாத்திரத்தில் அஷ்வினி அழகும் பாந்தமும்.

மிக இயல்பான நடிப்பில் அசத்துகிறார்  ரோகினி 

மைம் கோபி, முபாஷிர், ஜவஹர் ஆகியோரும்நன்றாக  நடித்துள்ளனர் 

குடும்பச் செலவுகளால் சரவணன் நிலைகுலையும் விதம் படத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது . அடுத்து வரும் சம்பவங்கள் பரபரப்பு , விறுவிறுப்பு  

நாம் யாருக்கு நல்லது செய்கிறோமோ அவர்கள் நமக்கு கெடுதல் செய்வது போலவே நாம் யாருக்கு கெடுதல் செய்கிறோமோ அவர்கள் நமக்கு நல்லது  செய்திருக்கவும் கூட வாய்ப்பு உண்டு என்ற  வாய்ப்பினைச் சொல்லும் திரைக்கதைப் பகுதி அபாரம். 

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு , சுந்தர மூர்த்தியின் இசை பிரவீன் கே எல் லின் படத் தொகுப்பு ஆகியவை கோபிநாத்தின் எழுத்துக்கும் இயக்கத்துக்கும் பலம் சேர்க்கின்றன. 

மணி தங்கி இருக்கும் வீட்டை வடிவமைத்த் விதத்தில் கலை இயக்குனர் உமேஷ் குமார் தெரிகிறார் . 

தன் தேவைக்காக அடுத்தவர் பொருளை அபகரிக்கும் திருடன்தான் நாயகன்.  அடிப்படையில் அவன் நல்லவன் இல்லை  என்பதால் அவனுக்கான கஷ்டங்கள் நம்மை ஒரு நிலைக்கு மேல்  தாக்கவில்லை.

இது இரண்டு பாகத்துக்கும் பொருந்தும் என்றாலும் இரண்டாம் பாகத்திலும் அவன் தேவைக்காக மீண்டும் கூட திருடுவான் என்பது பெரிய கதாபாத்திரச் சீர்குலைவே . 

இந்தப் படத்துக்கு அப்பாலும் இந்த திரைக்கதையை யோசித்தால் மறுபடியும் ஒரு கஷ்டம் வந்தால் மறுபடியும் அவன் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்வான் என்றால் அவன் எக்கேடு கெட்டால் யாருக்கு என்ன?
என்றாலும் கூட….நாம் செய்கிற அல்லது நமக்கு நடக்கிற நல்லது அல்லது கெட்டது இரண்டாலும் ஏற்படுகிற இழப்புகள்  அல்லது பிரச்னைகள் எல்லாவற்றுக்குமான  தீர்வும் அல்லது தீர்ப்பும்  அந்த செயல்களுக்கு உள்ளேயோ அல்லது அருகிலேயோ  இருக்கும் என்று நிறுவுகிற திரைக்கதை  பாராட்டுப்  பெறுகிறது . இந்தப் படத்துக்கும் அப்பாற்பட்டு இது வாழ்க்கைக்கான பாடம் கூட . அந்த வகையில் ஜி வி 2 கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக ஜொலிக்கிறது. . 

எல்லாவற்றுக்கும் மேலாக, 

அண்மையில் நிஜமான வெற்றி பெற்ற படமான மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் படம் இது என்பது இந்தப் படத்தை மக்கள் பார்க்க வைக்கும் கூடுதல் பலம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *