கதாநாயகன் @ விமர்சனம்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணுவிஷால் தயாரித்துக் கதாநாயகனாக   நடிக்க, கேத்தரின் தெரசா, சூரி, ஆனந்தராஜ் , சரண்யா , நடராஜ் நடிப்பில், 

காஷ்மோரா , மரகத நாணயம் படங்களில் காமெடி நடிப்பில் கலக்கி இருந்த  த. முருகானந்தம் இயக்கி இருக்கும் படம் கதாநாயகன் .  
 
ரசிகர்களுக்கு நாயகனா ? பார்க்கலாம் . 
 
சார் பதிவாளர் அலுவலக வேலையில் சேர்ந்து    முதன் முதலாக வேலைக்குப்  போகும் இளைஞன் ஒருவனுக்கு (விஷ்ணு விஷால்) ,
 
வழியில் பார்க்கும் அழகான பெண் மீது (கேத்தரின் தெரசா ) காதல் வருகிறது .  அவள் இருப்பதும் பக்கத்து வீட்டில்தான் . 
 
இந்தக் காதலுக்கு உதவுகிறான் , அதே  சார்பதிவாளர் அலுவலக அட்டண்டரான பால்ய சிநேகிதன் (சூரி )
 
அந்தப் பெண் தைரியசாலி . ஆனால் இவனோ எதற்கெடுத்தாலும் பயப்படும் நபர் . வழியில் வாய்ச் சண்டையைப் பார்த்தாலே,
 
 
டேக் டைவர்ஷன்  எடுத்து சுத்திக் கொண்டு போகும் சுபாவம் கொண்டவன் .  
 
அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு  ( நடராஜ்) ஒரு கந்து வட்டி ரவுடியால் ( அருள்தாஸ் )  பிரச்னை வர ,
 
அப்போது அங்கே இருக்கும் இவனிடம் அவர் உதவி கேட்கிறார். இவனோ அவரையே அம்போ என்று விட்டு விட்டு ஓடுகிறான் . 
 
அது மட்டுமல்ல , ஓர் இரவில் தன் வீட்டில் பாம்பு புகுந்த நிலையில் இவனிடம் டார்ச் லைட் உதவி கேட்கிறார் . பாம்புக்கு பயந்து அதைக் கொண்டு போய்க் கொடுக்கவே மறுக்கிறான் . 
 
இந்த நிலையில் மகனின் காதல் அறிந்த அம்மா (சரண்யா) . பெண் கேட்டுப் போக ,  ‘இவனைப் போன்ற கோழைக்கு,
 
 மகளைக் கொடுக்க விரும்பவில்லை’ என்று மறுத்து விடுகிறார் பெண்ணின் அப்பா 
 
இதற்கெல்லாம் காரணம் ரவுடிதான் என்று கொந்தளிக்கும் நாயகன் குடி போதையில் அவனை அடித்து மண்டையை உடைத்து விடுகிறான் .
 
மறுநாள் முதல் ரவுடி இவனை கொலை வெறியோடு தேடுகிறான் . 
 
இதற்கிடையில்  சண்டையில் நடந்த சிறு காயங்களுக்காக முதல் உதவி சிகிச்சை பெற மருத்துவமனை போகிறான் நாயகன் .
 
அங்கே ” நீ  இன்னும் ஆறு மாதத்தில் செத்து விடுவாய்  என்கிறார் டாக்டர் .  (சிறப்புத் தோற்றம் விஜய் சேதுபதி ).
 
மனம்  உடைந்து போகும் நாயகன் காதலியை புறக்கணிக்கிறான் .
 
அக்காவின் கல்யாணத்துக்கு பணம் போதாமல் அப்பா அம்மா கஷ்டப்படுவதை பார்க்கிறான்.  
 
ஒரு கோபக்கார சேட்டுக்கு  கிட்னி தேவைப்படுவதை அறிந்து,  தனது கிட்னியை கொடுப்பதாக சொல்லி பணத்தை வாங்கி அப்பாவிடம் தருகிறான் . 
 
ஆபரேஷன் தினத்தன்று ‘தனக்கு எந்த நோயும் இல்லை; தான் சாகமாட்டோம்’  என்பது அவனுக்கு தெரிகிறது.
 
எனவே கிட்னியை இழக்க  மறுக்க, கொலை வெறி கொண்ட சேட் ஆட்கள் கோபம் கொண்டு துரத்த , இன்னொரு பக்கம் கந்து வட்டி ரவுடி துரத்த , 
 
அப்புறம் நடந்தது என்ன என்பதே கதாநாயகன் 
 
மெலிதான கதை . பழகிய கதை . அதை மிக சன்னமான காமெடியால் நிரப்பிக் கடத்த…  முயன்று இருக்கிறார்கள்.  
 
“அடிக்கிறவன் மட்டும் வீரன் இல்ல .. நியாயத்தை தட்டிக் கேட்டு அடி வாங்கறவனும் வீரன்தான் “
 
“மரணம் என்பது முற்றுப் புள்ளி அல்ல . ஒரு நீண்ட பயணத்தின் தற்காலிக ஓய்வுதான் “
 
— இப்படி சீரியஸ் வசனங்களில் சிக்சர் அடிக்கிறார் இயக்குனர் முருகானந்தம். அருமை  (  பெயரை டைட்டிலில் த. முருகானந்தம் என்று தமிழில் மட்டுமல்ல ..
 
ஆங்கிலத்தில் கூட  THA. MURUGANANDHAM என்று போட்டுக் கொள்ளும் தமிழ்ப் பற்றுக்கு பாராட்டுகள் !)
 
சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கவர்கின்றன . பின்னணி இசை காட்சியின் சூழல் , நோக்கம் இவற்றை அபாரமாக தூக்கி நிறுத்துகிறது .
 
படத்தின் மிக சிறப்பான பணிகளில் இசை முன்னணியில் நிற்கிறது . 
 
உறுத்தாத அழகான ஒளிப்பதிவில் கவர்கிறார் லக்ஷ்மன் 
 
விஷ்ணு விஷால் மிக இயல்பாக நடித்துள்ளார் . சூரி வழக்கம் போல . 
 
குத்திய இரும்பின் சுழற்றலில் ஓவனுக்குள் உருளும்  சிக்கன் பீஸ் மாதிரி இருக்கிறார் கேத்தரின் . (அதாவது உரிச்ச கோழிக்கு எல்லாம் மேல ) .
 
ஆனால் முக பாவனைகள்தான் காமத்தி புராவையும் சோனா காஜையும் ஞாபகப்படுத்துகின்றன . கதாநாயகியின் முக பாவனைகள் கிளர்ச்சியூட்ட மட்டும் அல்ல . 
 
எதிர்பாராத நிலையில் ஒரு கெஸ்ட் ரோலில் டாக்டராக வந்து அசத்துகிறார் விஜய் சேதுபதி .
 
அந்த காட்சிகளின் அமைப்பு , வசனம் , அவை கையாளப்பட்ட விதம் , முடிக்கப்பட்ட விதம் இவற்றில் அதிக பட்ச நேர்த்தி ! சூப்பர் .
 
லக்ஷ்மி எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் நாவலில் இருந்து எடுக்கப்பட்டு மலையாளம் , இந்தி, தெலுங்கு என,
 
 
பல மொழிகளிலும் பயன்படுத்தப்பட்ட அந்த மருத்துவ மனை கவனக் குறைவு எபிசொட் ஒகே தான் . 
 
ஆனால் நடப்பது என்ன என்பதை முன் கூட்டியே காட்டி விடுவதால் நாயகனின் திடீர் சிக்கல் படத்தில் எடுபடவில்லை .
 
அதை முதலில் காட்டாமல் அப்புறம் டாக்டர் சொல்லும்போது காட்டி இருந்தாலாவது அதுவரையிலான சூழலுக்கு அழுத்தம் கிடைத்து இருக்கும் .
 
எப்படி இருந்தாலும் ஷேக்கிடம் நாயகன் மாட்டப்  போகிறான் என்ற முடிச்சு இருப்பதால் அது தவறாகவும் போயிருக்காது . அப்படி இருக்க முன்பே காட்டுவது எதற்காக ?
 
அடிப்படையில் திரைக்கதை மற்றும் வசனத்தில் காமடிக்கான வாய்ப்பு இருக்கிறது . ஆனால் அதை படத்தில் சிறப்பாக  கொண்டு வருவதில்தான் சறுக்கல் . 
 
திரைக்கதை மற்றும் காமெடி வசனத்தில் இன்னும் ஆழம் , உழைப்பு , சிந்தனை , நேர்த்தி எல்லாம் தேவைப் படும் படம் இது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *