Crew 21 எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்,
எபினேசர் தேவராஜ், நீலிமா இசை, ஜார்ஜ் விஜய், ஆரியா, மாரி செல்லத்துரை , கவுரிஷங்கர், ஜிதேஷ் டோனி, சந்தியன் நடிப்பில்,
ஷரவன் சரவணன் ஒளிப்பதிவில் , ஆதித்யா சூர்யா இசையில் தமிழ்க் குமரன் படத் தொகுப்பில் செல்வேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் கருப்பங்காட்டு வலசு .
நாட்டுப்புற நடனம் ஆடும் கலைஞன் பச்சைக்கிளி வாத்தியார் (எபினேசர் தேவராஜ்) அவர் காதலிக்கும் முறைப்பெண் மல்லி ( ஆரியா).
அயல்நாட்டில் வாக்கப்பட்டு அந்தத் திருமணம் நிலைக்காமல் கிராமத்துக்கு வந்திருக்கும் பணக்காரப் பெண் காந்திமதி( நீலிமா) .
அப்பாவுக்குப் பிறகு ரயில்வே வேலை கிடைத்து , அதைச் செய்யும் புகைவண்டி வேலன் (ஜிதேஷ் டோனி) ஆகியோர் உட்பட ,பல கதாபாத்திரங்கள் கொண்ட கிராமம் கருப்பங்காட்டு வலசு
ஊரில் திருடர் தொல்லை, சாதி வெறி என்று பல பிரச்னைகள் .
ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் காந்திமதி பொதுக் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்து, தெருவுக்கு தெரு கண்காணிப்புக் கேமராவும் பொருத்திக் கொடுக்க,
திருட்டு மட்டுமின்றி பல விஷயங்கள் வெளிப்பட, இயற்கை மரணம் உட்பட பல கொலைகளும் ஊரில் நடக்கிறது .
விசாரிக்க வரும் காவல் ஆய்வாளரால் ( ஜார்ஜ் விஜய்) குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடிந்ததா? நடந்தது என்ன எல்லாம்?
– என்பதே இந்த கருப்பங்காட்டு வலசு.
படம் துவங்கும்போது இது நாட்டுப்புறக் கலைஞனின் காதல் கதையோ என்று தோன்றுகிறது . நேரம் ஆக ஆக புதுப் புதுக் கதாபாத்திரங்கள், கதைப் போக்குகள் என்று பயணித்து எல்லா நிகழ்வுகளையும் ஒன்று கூட்டுகிறது படம் .
எளிய கிராமத்து முகங்களும் லொக்கேஷன்களும் அழகு.
ஜார்ஜ் விஜய் , ஊரில் உதார் விட்டுக் கொண்டு அலையும் ஒருவர் தவிர மற்றவர் எல்லாம் செயற்கையாகவும் அதீதமாகவும் நடிக்கிறார்கள் .
எது செய்தாலும் நேரா கேமாரா பார்த்துதான் நடிக்க வேண்டும் அக்கம் பக்கம் பார்த்தால் அம்புட்டுதான் என்று டைரக்டர் சொல்லி விட்டது போல பல நடிப்புகள். .
படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எதிர்பாராத திருப்பங்களைத் தருவதில் மட்டும் வெற்றி பெறுகிறது கருப்பங்காட்டு வலசு .
