கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் வெளியிட, மெட்ராஸ் என்டர்டெய்னர்ஸ் தயாரிக்க , விஷால் , தமன்னா வடிவேலு , சூரி ஆகியோர் நடிப்பில் சுராஜ் இயக்கி இருக்கும் படம் கத்தி சண்டை . முடிவு எப்படி?
250 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றும் ஒரு டெபுடி கமிஷனர் (ஜெகபதி பாபு ) அதை மறைத்து விடுகிறார் .
ஆறு மாதத்துக்கு பிறகு சென்னைக்கு வரும் ஓர் இளைஞன் (விஷால்) , தனது நண்பனான ஒரு டுபாக்கூர் ரவுடியை (சூரி ) மிரட்டி,
தான் ஒரு பெண்ணை (தமன்னா ) காதலிப்பதாகவும் , அதற்கு உதவ வேண்டும் என்றும் கூற,
முன் ஜென்ம காதல் என்று சொல்லி நம்ப வைத்து அவளது காதலை பெறுகிறான். பணம் கொள்ளை அடித்த கமிஷனரின் தங்கைதான் அந்தப் பெண் .
காதலை போலீஸ் கமிஷனர் ஏற்றுக் கொள்ளும் போதுதான் தெரிகிறது , காதலனின் முதல் நோக்கம் காதல் அல்ல , கமிஷனர் பதுக்கி வைத்து இருக்கும் பணம் என்பது .
சி பி ஐ அதிகாரி போல வேஷம் போட்டு அவன் கமிஷனரிடம் இருந்து பணத்தைக் கொண்டு போக , கமிஷனரிடம் ஆரம்பத்தில் பணத்தை இழந்தவன் வந்து கமிஷனரை மிரட்ட, கமிஷனர் நடந்ததை சொல்ல ,
அப்போதுதான் தெரிகிறது .தங்கையின் காதலன் சிபிஐ அதிகாரி இல்லை . ஜெயிலில் இருந்தவன் என்பது .
அவனை தேடிப் போனால் ஒரு விபத்தில் அவனுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்து விடுகிறது . தான்யார் என்பதே தெரியாமல் இருக்கும் அவனை குணப்படுத்த டாக்டர் பூத்ரி (வடிவேலு) வருகிறார் .
அவன் குணம் அடைந்தானா ? அவன் நல்லவனா கெட்டவனா ? பணத்தை அவன் எங்கே வைத்திருந்தான் . ஏன் கடத்தினான் ? அதற்கான காரணம் என்ன என்பதே இந்தப் படம் .
விஷால் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . தமன்னா அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்
அவரது கழுத்துக்கு மேல் கேமரா எப்போதாவதுதான் பார்க்கிறது . அந்த அளவுக்கு அவரை உரித்து உப்புக் கண்டம் போட,
அவரும் சளைக்காமல் சிங்கிள் பீஸ் டூ பீஸ் எல்லாம் போட்டு பார்ப்பவர்களை பீஸ் பீஸ் ஆக்குகிறார்
முதல் பாதியில் சூரி கொஞ்சமும் , இரண்டாம் பகுதியில் வடிவேலு கொஞ்சமும் சிரிக்க வைக்கிறார்கள் .
ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு அருமை . ஹிப் ஹாப் தமிழா இசையில் நான் கொஞ்சம் கருப்புதான் பாட்டு சூப்பர் ஹிட் .
கனல்கண்ணன் , தளபதி தினேஷ் , ஆக்ஷன் கணேஷ் ஆகியோரின் சண்டைப் பயிற்சிகள் ஆக்ஷன் காட்சிகள் சேசிங் காட்சிகள் அதிரவைக்கின்றன .
கிராம முன்னேற்றம் விவசாயம் என்று போகும் படத்தின் இறுதிக் காட்சிகள் அருமை .
”மக்கள் ஓட்டுக்கு காசு வாங்கறதாலதான் காசுக்கு வாங்க வேண்டிய டிவியும் மிக்சியும் இலவசமா கிடைக்குது .இலவசமா கிடைக்க வேண்டிய கல்வியும் மருத்துவமும் எட்டாக்கனியா இருக்கு” என்று,
விஷால் பேசும் வசனம் அருமை .
கடைசியில் எல்லா கதாபாத்திரங்களும் விவசாயம் பார்த்துக் கொண்டு கிராம முன்னேற்றத்துக்கு உழைப்பதாகக் காட்டுவது மனசுக்கு நிறைவு .
”இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா கால் காணி நிலம் வச்சு இருக்கறவன்தான் நிஜமான கோடீஸ்வரன்” என்று வடிவேலு சொல்வது சத்தியமான வார்த்தை .
அர்த்தம் அவசியமில்லாமல் அட்டெண்டன்ஸ் போடும் பாடல்கள் பெரிய மைனஸ் .
சூரி வடிவேலு சம்மந்தப்பட்ட காமெடி காட்சிகள் பல படங்களில் அவர்களே செய்த காட்சிகளின் தொகுப்பாக இல்லாமல் ஃபிரஷ்ஷாக புதுமையாக இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
” அவன் உன்னை எவ்ளோ உண்மையா லவ் பண்றானான்னு கண்டு பிடிக்கத்தான் அவனை ஸ்டேஷன்ல வச்சு (இரத்தம் காக்க , கிட்னி வாய் வழியா வர ) அடிச்சேன்” என்று,
டெபுடி கமிஷனர் அண்ணன் சொல்வதைக் கேட்டு தமன்னா சிலிசிலிர்த்து சந்தோஷப் படுகிறாரே .
அதை வேண்டுமானால் ‘புதுமையான வித்தியாசமான காமெடி’ என்று எடுத்துக் கொள்ளலாம் .
மொத்தத்தில் கத்திசண்டை …. பேஸ்மென்ட் ஸ்ட்ராங்தான் !