‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தர் குமார் தயாரிக்க,
அருண் விஜய் , மகிமா நம்பியார், தம்பி ராமையா, விஜயகுமார், அபிநயா, அமீத்பார்கவ், வம்சி கிருஷ்ணா , அரவிந்த் ஆகாஷ் , சுஜா வாருணி, கல்யாணி நடராஜன் ஆகியோர் நடிக்க ,
ஈரம், வல்லினம், ஆறாது சினம் போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் கவர்ந்திருக்கும் இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கும் படம் குற்றம் 23.
மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு கிரைம் நாவலை முறைப்படி உரிமம் வாங்கி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மார்ச் 3 ஆம் தேதி படம் வெளிவர இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டத்தையும் பாடல்களையும் திரையிட்டனர்
மரபணு வடிவமான டி என் ஏ ( டி ஆக்சி ரிபோ நியூட்ரிக் ஆசிட் ) வடிவத்தின் பின்னணியில் விரியும் முன்னோட்டம் அட்டகாசமாக இருக்கிறது.
பாடல்கள் இனிமையாக அமைந்து சிறப்பாக படமாக்கப்பட்டு இருந்தன.
படத்தை வாங்கி வெளியிடும் அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் நிகழ்ச்சியில் பேசிய பிரபு ” இயக்குனர் அறிவழகன் உண்மையிலேயே ஷங்கரின் உதவியாளர் மட்டும்தானா?
அல்லது மணி ரத்னம் , கவுதம் மேனன் ஆகியோரிடமும் பணியாற்றி இருக்கிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஆக்ஷன் எமோஷன் காட்சிகளில் மட்டும் இல்லாமல் காதல் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார் .
படத்தை விநியோகஸ்தர்களிடம் போட்டுக் காட்டியே வியாபாரம் செய்தோம் . படம் பார்ப்பதற்கு முன்பு இரண்டு ஏரியா வாங்கிக் கொள்வதாக சொன்ன ஒருவர்,
படம் பார்த்த உடன் மேலும் ஒரு ஏரியா கேட்டார் . அப்போதே படத்தின் வெற்றி முடிவு ஆகி விட்டது” என்றார் .
”குத்துப் பாடல்களாக எழுதிக் கொண்டு இருந்த எனக்கு ஈரம் படத்தில் மெல்லிசைப் பாடல்கள் கொடுத்து புதிய மாற்றம் தந்தவர் இயக்குனர் அறிவழகன் .
இந்தப் படத்திலும் அழகான பாடல்கள் எழுத முடிந்தது ” என்றார் பாடலாசிரியர் விவேகா.
நடிகை கல்யாணி நடராஜன் பேசும்போது “இயக்குனர் அறிவழகன் ஒரு காட்சியில் நடிகரிடம் இருந்து என்ன வேண்டும் என்பதை ரொம்ப தெளிவா சொல்லிடுவார் .
அதனால அவர் படத்தில் சுலபமாவே ரொம்ப நல்லா நடிச்சிட முடியும் ” என்றார் .
நடிகர் அரவிந்த் ஆகாஷ் தன் பேச்சில் ” படத்துல ரொம்ப ஆக்ஷன் உள்ள ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சு இருக்கேன் . அறிவழகன் சாருக்கு நன்றி .
இந்தப் படம் நடிச்சு முடிச்சப்ப எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் தோணுச்சு. இனிமே அவர் படங்கள் ல சென்சார் சர்டிபிகேட் இருக்கோ இல்லியோ நான் இருக்கணும். ஒத்துழைப்பு கொடுத்த அருண் விஜய்க்கும் நன்றி ” என்றார்
கலை இயக்குனர் சக்தி வெங்கட் ராஜ் பேசும்போது ” சொல்ல வரும் கதையை பிரேம்களிலேயே உணர்த்த வேண்டும் என்பதில் இயக்குனர் அறிவழகன் உறுதியா இருப்பார் .
இந்தப் படம் மெடிக்கல் சம்மந்தப்பட்ட படம் என்பதை அதன் வண்ணத்திலேயே சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து வெள்ளையும் நீலம் பாசிப் பச்சையும் கலந்த வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் ” என்றார்
ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் தன் பேச்சில் ” இயக்குனர் அறிவழகன் நினைத்தது நினைத்தபடி காட்சியில் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் .
அதே நேரம் சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைப்பார். படத்தில் அருண் விஜய் மஹிமா நம்பியார் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் ” என்றார்
தயாரிப்பாளர் இந்தர் குமார் பேசும்போது ” என் நண்பர் அருண் விஜய் படம் தயாரிக்க முடிவு செய்தபோது நானும் இணைந்தேன். இயக்குனர் அறிவழகன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப் படத்தை மிக சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள் .
படத்தில் திரில் ஆக்ஷன் மட்டும் இல்லாமல் சென்டிமென்ட்டும் சிறப்பாக வந்துள்ள்ளது படம் விற்பனையும் ஆகி விட்டது . மகிழ்ச்சியாக இருக்கிறது “என்றார்
அடுத்து பேசிய இயக்குனர் அறிவழகன் ” எனக்கு சின்ன வயசு முதலே புதுமைப் பித்தன், ஜெயகாந்தன் , சிவசங்கரி, ராஜேஷ்குமார் உட்பட பல எழுத்தாளர்களின் கதைகள் பிடிக்கும் .
அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடக்கணக்காக தரமான தொடர்கள் வருவது போல , நமது எழுத்தாளர்களை பயன்படுத்தி நீண்ட, தரமான தொடர்கள் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு .
தவிர மெடிக்கல் கிரைம் பற்றி ஒரு படம் செய்ய வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை .
அதற்காக ராஜேஷ்குமாரை சந்தித்து அவரது கதை வேண்டும் என்று கேட்டபோது அவர் பத்துப் பதினைந்து புத்தகங்கள் கொடுத்தார் .
”நீங்கள் நல்ல டைரக்டர் . உங்கள் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் . இந்தக் கதைகள் உங்களுக்குப் பொருத்தமானவை. இவற்றில் ஒன்றை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்
அப்படி அவர் கொடுத்த கதைகளில் ஒன்றை நான் எடுத்துக் கொண்டேன் .
கதையின் அடிப்படையை மட்டும் எடுத்துக் கொண்டு , நிறைய சேர்த்து எனது பாணியில் திரைக்கதை வசனம் எழுதினேன் .
மூதல் இரண்டு படங்களில் எனக்கு சரியான ஆர்ட் டைரக்டர் அமையவில்லை . அப்புறம் வந்தார் சக்தி வெங்கட் ராஜ் . இன்டர்நெட்டில் ரெஃபரன்ஸ் எடுத்து ஒப்பேற்றி கடமைக்கு வேலை செய்யும்,
ஆர்ட் டைரக்டர்கள் பெருகி விட்ட நிலையில் எதற்கும் சுயமாக படம் வரைந்து அதன்படி பணியாற்றும் சில ஆர்ட் டைரக்டர்களில் இவரும் ஒருவர்.
ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் படத்துக்கு பெரிய பலம் . அவருக்கும் எனக்குமான புரிதல் சிறப்பாக அமையும் .
ஒரு மாற்றத்துக்காக இசைக்கு விஷால் சந்திர சேகரிடம் போனேன். இரண்டு சிறப்பான பாடல்களையும் நல்ல பின்னணி இசையையும் கொடுத்துள்ளார் .
அருண் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசையாகவே இருந்தது. அது இதில் நிறைவேறியது . மிக சிறப்பாக நடித்துள்ளார் .
மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துக் கொடுத்தார்கள்
எங்க டைரக்டர் ஷங்கர் அடிக்கடி ”ஒரு படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை செஞ்சா அப்புறம் பல வருஷம் ஆனாலும் அந்த படத்தைப் பத்தி யோசிக்கும்போது,
நமது சிறப்பான பங்களிப்பு அந்தப் படத்தில் இருக்கு என்ற சந்தோசம் வரணும் ” என்பார்
நிறைவாகப் பேசிய அருண் விஜய் ” இந்தப் படத்தின் எல்லா விசயங்களையும் நான் பொறுப்பு எடுத்துப் பார்த்துக் கொண்டேன். எல்லா வேலைகளையும் செய்தேன் .
பழைய துணியை எடுத்து தரையை துடைக்காதது மட்டும்தான் பாக்கி . காரணம் என் நண்பர் இந்தர் என்னை நம்பி பணம் போட்டார் .
அதற்கேற்ப படத்தை மிக சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குனர் அறிவழகன் . எனக்கு இந்த படம் பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று நம்புகிறேன் .
ஒத்துழைத்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றி” என்றார் .
வாழ்த்துகள் படக் குழுவுக்கு !










