சின்ன பிள்ளைகளுக்கு ஆனா ஆவன்னா சொல்லித் தரும்போது, அதற்குரிய வார்த்தைகளாக அம்மா , ஆடு என்று சொல்லித் தருவோம் இல்லையா ?
இனி அதை மாற்றி அம்மா , ஆரி என்று சொல்லித் தரலாம் . தப்பே இல்லை
அப்படி ஒரு சம்பவம் நடந்தது,
டிரான்ஸ் இண்டியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க ,
அகடம் ‘ என்ற முழு தமிழ்ப் படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற முதல் தமிழ் இயக்குநர் இசாக் இயக்கத்தில் ,
நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரி நாயகனாக நடிக்கும் நாகேஷ் திரை அரங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் நிகழ்ந்தது அந்த சம்பவம் !
அது பற்றி கனத்த மனதோடு நெகிழ்வாக குறிப்பிடுகிறார் இயக்குனர் இசாக்
” பிப்ரவரி 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் அம்மா பிறந்த நாளை ஆளாளுக்கு பங்கு போட்டு கொண்டாட பலரும் கொடி பிடிச்சிக்கிட்டு இருக்கும் போது,
திண்டிவனத்தில் எங்களோடு ஷூட்டிங்ல இருந்த ஆரி சாருக்கு வந்தது, இடி மாதிரி ஒரு செய்தி…. அவங்க அம்மா இறந்துட்டாங்க !
ஒரு மனுசனுக்கு உச்சபட்ச அன்ப கொடுக்க கூடிய ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான். சாகுற அளவுக்கு கஷ்டம் வரும்போது நாம சாய நினைக்கிற ஒரே மடி அம்மா மடிதான்
செத்துட்டான்னு தெரிஞ்சாலும் நாம ஏங்கித் தவிக்கிற மடி அம்மா மடி.
தகவல் எங்களுக்கு தெரிஞ்சதும்
நாகேஷ் திரையரங்கம் படத் தயாரிப்பாளர் , நான் \என மொத்த டீமும் ஆரி சாரை உடனே கிளம்பச் சொன்னோம்.
அப்படி கிளம்ப சொன்னாலும் எல்லாருக்கும் ஒரு விஷயம் நல்லா தெரியும்..
அதுதான் படத்தோட கடைசி நாள் ஷூட்டிங். பகல் 2 மணி கால்ஷீட்டா ஆரம்பிச்சு மறுநாள் வரைக்கும் படப்பிடிப்பு நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம்.
இல்லன்னா கபாலி ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார், திண்டிவனம் கண்ணையா தியேட்டரை நாகேஷ் திரையரங்கமா மாத்திப் போட்ட செட்டும்,
ட்ரான்ஸ் இண்டியா நிறுவனம் இந்த ஒருநாள் ஷூட்டிங்குக்காக அள்ளி இறைத்த காசும் வீணா போயிடும்.
கஷ்டமான சூழ்நிலையிலும் பிறர் கஷ்டத்த நினைச்சி தன் கஷ்டத்த ஏத்துக்கிறவன் ரொம்ப பெரிய மனுசன். ஆனா ஆரி சார் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய மனுசன்.
எக்காரணத்தக் கொண்டும் சூட்டிங் நிக்கக் கூடாதுன்னு நினைச்சவரு, தன் அம்மாவோட சடங்குகளை தள்ளி வச்சிட்டு நடிச்சிக் கொடுத்தார்.
அங்க அம்மாவுக்கு இறுதி அலங்காரம் பண்ணச் சொல்லிட்டு, இங்க அவர் மேக்கப் போட்டுக்கிட்டார்.
எனக்கு ரீடேக் சொல்லத் தோணாத போதும், ஷாட் நல்லா வராத போது ஒன்மோர் போலாம் சார்னு ஆரி சாரே, தொழிலை அம்மாவின் இடத்துல வச்சார்.
வேலை பாக்குற எங்களுக்கு ஒரே குற்றவுணர்வு..இந்த நேரத்துல இவரை கஷ்டப்படுத்தணுமான்னு.
“எனக்கு கிடைச்ச இந்த நடிகன் வாழ்க்கை என் அம்மா ஆசைப்பட்டது. இப்ப இதை நஷ்டத்தோட விட்டுட்டு போனேன்னா என் அம்மாவோட ஆன்மா என்னை மன்னிக்காது”ன்னு அவரே சொல்லி,
சூட்டிங் முடியுற வரைக்கும் கில்லியா நின்னார். மொத்த யூனிட்டும் நெருப்பா வேலை செஞ்சி அவரை சீக்கிரம் அனுப்பி வச்சோம். ஆரி சார் கார் பழனி நோக்கி பறந்தது.
அதுவரை அவர் அம்மாவோட ஆன்மா படப்பிடிப்பு தளத்திலேதான் இருந்தது.” என்கிறார் .
நமக்கும் மனம் கனக்கிறது .
இப்படி ஒரு நல்ல பிள்ளையை பெற்றெடுத்த அந்த அன்புத் தாயின் ஆன்மா,
இறைவனின் மேடையில் என்றும் நிலைக்கட்டும் !





