அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆத்தூர் ஆறுமுகம், சுகந்தி ஆறுமுகம் தயாரிக்க, ஆதிக் பாபு, அர்ச்சனா (இனி இவர் குற்றம் புரிந்தால் அர்ச்சனா என்று அழைக்கப்படுவாராக !) , நாடோடிகள் அபிநயா, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் டிஸ்னி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
தாய்மாமன் ( எம் எஸ் பாஸ்கர்) , அவரது மகளும் முறைப்பெண்ணும் காதலியும் வருங்கால மனைவியுமான ( அர்ச்சனா) ஆகியோரோடு வாழ்ந்து வரும் நபர் ஒருவர் (ஆதிக் பாபு)
மகிழ்வும் நெகிழ்வும் இனிய எதிர்பார்ப்புகளுமாக அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் , வீட்டுக்குள் நுழையும் மூன்று ரவுடிகள் ஆண்கள் இருவரையும் அடித்துப் போட்டு விட்டு , பெண்ணை வன்புணர்வு செய்து குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்கி விட்டுப் போகிறார்கள் .
குற்றவாளிகளுக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் அரசு மருத்துவரும் உதவுகிறார்கள் .
பொங்கி எழும் நாயகன் இன்ஸ்பெக்டரையும் மருத்துவரையும் பழி வாங்கிவிட்டு அவர்கள் அந்த மூவரும் யார் எனக் கண்டுபிடித்து பழிவாங்க திட்டமிடுகிறார் .
கொலைப் படலம் துவங்க , கொலைகாரனைக் கைது செய்யத் தீவிரமாக இயங்குகிறார் ஒரு பெண் போலீஸ் அதிகாரி (நாடோடிகள் அபிநயா) .
நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
கமல் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி படத்தை மலிவுப் பதிப்பாக மீண்டும் எடுத்தால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறது படம்.
ஆதிக் பாபு இயல்பாக நடிக்கிறார். அர்ச்சனா சிறப்பாக நடித்துள்ளார். எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல்.
மிரட்டல் செல்வாவின் சண்டைக் காட்சிகள் அபாரம். பகாசுரன் படத்திலும் கலக்கி இருந்தார் அவர் .
யூகிக்க முடிந்த திரைக்கதை மற்றும் காட்சிகளில் நாயகனுக்கும் டாக்டர் மனைவிக்குமான நட்பு தொடர்பான ஏரியா அருமை .
அதுபோல ராம்ஸ் தன் உதவியாளனை அடிக்கடி கோபமாக அறைய அது நகைச்சுவையாக வெளிப்படுவது சிரிக்க வைக்கிறது .
மற்றபடி பாராட்டவும் பெரிதாக ஒன்றும் இல்லை. குறை சொல்லவும் வேறு ஏதும் இல்லை .
“ஒரு குற்றவாளிக்கு கொடுக்கிற அதிக பட்ச தண்டனை என்ன தெரியுமா? அவன் திருந்தி என்னை விட்டுடுங்கன்னு கதறும் போது மன்னிக்காம பழி வாங்கறதுதான் ” என்று படத்தில் ஒரு வசனம் .
“திருந்தின அப்புறம் கொல்றது ஹீரோயிசம் இல்லை . எனவே இந்த வசனத்தை மாற்றி ‘ஒரு குற்றவாளிக்கு கொடுக்கிற அதிக பட்ச தண்டனை என்ன தெரியுமா? அவன் இனி தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்ச நிலையில் பயந்து என்னை விட்டுடுங்கன்னு கதறும் போது நல்லா கதறவிட்டு அப்புறமா போட்டுத் தள்ளுறதுதான் ‘ என்று இருப்பதுதானே நியாயம்?” என்றேன் , இயக்குனரிடம் .
அவர் ஒத்துக் கொள்ளவில்லை . திருந்தின அப்புறமும் கொல்வதுதான் பெரிய தண்டனை என்றார் .
”இல்லீங்க அது பெரிய தண்டனை இல்லை. உண்மையில் கேவலமான தண்டனை. சில சமயங்களில் அநியாயமான தண்டனைன்னு கூட பார்க்கப்படும் ” என்றேன்
”இல்ல சார் திருந்தின அப்புறமும் கொல்வதுதான் பெரிய தண்டனை” என்றார் .
