ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க ஸ்டுடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட, விஜய சேதுபதி, குரு சோம சுந்தரம், காயத்ரி , தமிழ் கவுதமன், பேபி மானஸ்வி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம்.
மூன்றாம் வப்பு வரை மட்டுமே படித்த – பண்ணைப்புரத்தின் முதல் ஆட்டோ டிரைவரான நேர்மை மிகு இளைஞன் ( விஜய் சேதுபதி), தனது ஆட்டோவில் மகள் கல்யாணத்துக்கு நகை வாங்கி வந்த பெரியவர் விட்டு விட்டுப் போன நகையைக் கொடுக்க நினைத்து அவரைத் தேடித் போய்க் கொடுக்க, நகையைத் தொலைத்தவரின் மகள் (காயத்ரி) மேல் காதல் வந்து , இஸ்லாமிய நண்பர் ஒருவரின் ( குரு சோம சுந்தரம்) உதவியால் அந்தக் காதல் கல்யாணத்தில் முடிகிறது .
ஒரு மகன் ( தமிழ் கவுதமன் ) ஒரு மகள் ( மானஸ்வி) என்று போகும் வாழ்க்கையில் தகப்பனுக்கு ஓர் ஆசை. தனது ஆட்டோவில் பயணிக்கும் பிள்ளைகள் எல்லாம் கான்வென்ட் பள்ளிக்குப் போக, கடைசியில் தமது மது பிள்ளைகளை மட்டும் அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டி இருக்கிறதேஎன்று எண்ணி, தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டி பணம் சம்பாதிக்க முடிவு செய்து, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார் .

மலையாளி ஒருவர் (ஷாஜி கைலாஷ்) போட்டு இருக்கும் ரியல் எஸ்டேட் மனைகளை விற்றுக் கொடுத்து லாபம் சம்பாதிக்க எண்ணி, தனது நல்ல பெயரை வைத்து மனைகளை வாங்க எல்லோரிடமும் அட்வான்ஸ் வாங்குகிறார்.
பத்திரப்பதிவு நடக்கும் நாளில் அந்த மலையாளி மொத்த நிலத்தையும் வேறு ஒருவருக்கு விற்று விற்று கம்பி நீட்டி விட்டது தெரிய வர, ஆட்டோ டிரைவரை நம்பி பணம் கொடுத்த மக்கள் துரத்த ,
மனைவி தைரியமாக இருப்பதை உணர்ந்து மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு ஓடிப் போகிறார் ஆட்டோ டிரைவர்.
இஸ்லாமிய நண்பரின் உதவியோடு மனைவியும் பிள்ளைகளும் ஊரைச் சமாளிக்க, தன்னை ஏமாற்றிய மலையாளியைத் தேடி ஆட்டோ டிரைவர் கேரளாவுக்குப் போக ,
நடந்தது என்ன என்பதே படம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குரலுக்கு விளக்கமாக வந்துள்ளது படம்.
எளிய காட்சிகளால் துவங்கும் படம் மெல்ல மெல்ல இடைவேளை வரை வாழ்வியலாக மாறுவது அழகு.
ஆட்டோ டிரைவருக்கும் மகளுக்குமான உரையாடல்கள் அழகு.
இடைவேளைக்குப் பிறகு நல்ல விசயங்களை சொன்னாலும் யதார்த்த மீறிய சம்பவங்களால் படம் விலகிப் போகிறது .
அதே நேரம் தனது இந்து நண்பருக்காக ஓர் இஸ்லாமியர் காசியில் கங்கை நதிக்கரையில் தொழுகைப் பிரார்த்தனை நடத்துவது போன்ற அற்புதமான காட்சிகளும் உண்டு .