
E5 எண்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயகிருஷ்ணன் மற்றும் மெட்ரோ புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இருவரும் தயாரிக்க,
அறிமுக நாயகன் சிரிஷ், மாயா, பாபி சிம்ஹா, சென்ராயன் , யோகி பாபு ஆகியோர் நடிக்க ,
ஆள் படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மெட்ரோ
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன . அனைத்தும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்து எதிர்பார்ப்பைத் தூண்டின.
நிகழ்ச்சியில் பேசிய படத் தொகுப்பாளர் ரமேஷ் பாரதி ” சற்று முன்பு படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் திரையிட்டு முடித்த உடன்,
பத்திரிகையாளர்கள் பலரும் என்னிடம் பாடலும் முன்னோட்டமும் படு வேகமாக இருக்கிறது என்றார்கள் . படமும் அப்படியே இருக்கும் .
இப்படி ஒரு சிறந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பளருக்கும் நன்றி ” என்றார் .
கலை இயக்குனர் மூர்த்தி பேசும்போது ” அட்டகாசமான கதை திரைக்கதை . படத்தை மிகவும் சிறப்பாக இயக்கினார் ஆனந்த் கிருஷ்ணன் . அதற்கேப்ற பணியாற்றியது சந்தோஷமான விஷயம்” என்றார் .
“மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது எப்படி ஒரு திரில் அனுபவமாக இருக்கிறது . இந்த மெட்ரோ படத்தைப் பார்க்கும்போதும் அப்படி ஒரு அனுபவமாக இருக்கும் . அவசியம் பாருங்கள் ” என்றார் , நடிகர் சென்ராயன்
இசையமைபாளர் ஜோகன் தன் பேச்சில் ” பரபரப்பான படம் . அதற்கேற்ப விறுவிறுப்பான பின்னணி இசை கொடுத்தது சந்தோஷமான அனுபவம் .
பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன என்பதை, பாடல்களைப் பார்த்த நீங்களே உணர்ந்து இருப்பீர்கள் ” என்றார் .
கதாநாயகி மாயா பேசும்போது ” பைக்கில் வந்து பெண்களின் நகையைத் திருடும் சங்கிலித் திருடர்கள் பற்றிய படம் இது . எனக்கு நல்ல கேரக்டர் . எல்லோரும் பார்க்க வேண்டிய படம் இது ” என்றார் .
தயாரிப்பாளர் ஜெய கிருஷ்ணன் பேசுகையில் ” ஆனந்த் கிருஷ்ணன் சொன்ன கதை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது . எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .
எனவே படத்தை எடுத்து முடித்தோம் . படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோரும் குடும்பத்தோடு பார்க்கும் படமாக வந்துள்ளது ” என்றார் .
படத்தை வாங்கி வெளியிடும் காஸ்மோஸ் வில்லேஜ் சிவகுமார் பேசும்போது ” ஆனந்த் கிருஷ்ணன் சிறப்பாக படத்தை இயக்கி இருந்தார் . ஜெயகிருஷ்ணன் சிறந்த முறையில் தயாரித்து இருந்தார் .
படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது . எனவே தமிழகம் முழுவதும் 250 திரையரங்குகளில் வெளியிடுகிறேன் ” என்றார் .
இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் தனது பேச்சில் ” ஆள் படம் வெளியான நிலையில் அதை பாராட்டிய என் நண்பர்கள் சிலர் கொடுத்த பணத்தை வைத்து இந்த படத்தை ஆரம்பித்தேன் .
ஒரு நிலையில் பணம் போதாத போது ஜெயகிருஷ்ணன் தயாரிப்பாளரானார் . நடிகர் நடிகைகளை முடிவு செய்து படத்தை எடுக்க ஆரம்பித்தேன் . படம் கொஞ்சம் வளர்ந்த பிறகு ,
ஒரு அற்புதமான கேரக்டருக்கு பாபி சிம்ஹாவை கேட்டுப் போனேன் . அவர் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்தார்
2014 ஆம் ஆண்டு நபம்பர் மாதத்தில் படத்தை ஆரம்பித்தேன் . படத்தை 2015 ஏப்ரலில் முடித்தேன் . சென்சாருக்குப் போனபோது ”இந்தப் படத்தில் எப்படி எல்லாம் செயின் திருடலாம் என்று கற்றுக் கொடுக்கிறீர்கள் .
எனவே படத்தையே தடை செய்கிறோம்’ என்றார்கள் . அழுது விட்டேன் .
ஒரு குற்றத்தை பற்றி சொல்லவேண்டுமானால் அதை யதார்த்தமாகத்தான் சொல்ல முடியும் . படத்தின் முடிவில் என்ன சொல்கிறோம் என்பதுதான் முக்கியம் .
படத்தின் முடிவு குற்றவாளிகளுக்கு எதிராகவே இருக்கிறது . ஆனாலும் அதை ஒத்துக் கொள்ளாமல் படததின் தடை செய்ய வேண்டும் என்றார்கள் .
கடைசியில் ட்ரிப்யூனலுக்கு போனபோது ஒரு கட் கூட இல்லாமல் ஏ சர்டிபிகேட் கொடுத்து முடித்தார்கள் . ஆனால் இங்கேயோ ‘படத்தை ஒட்டுமொத்தமாக தடை செய்கிறோம்’ என்றார்கள் .
நல்ல வேளை கங்கை அமரன் போன்ற சினிமா தெரிந்த நபர்கள் இருந்ததால் தப்பினோம் .
இது ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட படம் என்றாலும் இது ஆபாச படம் இல்லை . குடும்பத்தோடு பார்க்க முடிகிற– சொல்லப் போனால் பார்க்க வேண்டிய படம் ” என்றார்
வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது மெட்ரோ .