7 மைல்ஸ் பெர் செகண்ட் பட நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்க, சித்தார்த் , ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பால சரவணன் , நடிப்பில் ராஜசேகர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
திரைப்பட இயக்குனராக முயலும் ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஐ லவ் யூ சொல்கிறான் . அவள் மறுக்கிறாள் . வீட்டில் வந்து பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி ”இவளை காதலிக்கிறேன்; பெண் பார்க்கப் போவோம்” என்கிறான் . பெற்றோர்க்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சி.
காரணம் அவள்தான் அவனது மனைவி . விவாகரத்தான மனைவி .
அட என்று ரசிகர்கள் ஆச்சர்ய்ப்படுவார்கள் என்ற நம்பிக்கையில்,
அப்பாவின் விருப்பத்துக்காக நாயகன் நாயகியை பிடிக்காமல் கல்யாணம் செய்து கொள்வது , மனப் பொருத்தம் அப்புறமும் அமையாமை , விபத்து , நினைவு தவறல், அரசியல்வாதியுடன் பகை போன்ற விசயங்களை வைத்து சொல்ல முயன்று இருக்கிறார்கள் .
பலன்தான் பெரிதாக இல்லை. காரணம் இதற்கு அவர்கள் வைக்கும் காட்சிகள், சூழல்கள், குண இயல்புகள், வாதங்கள் எல்லாமே குழந்தைத்தனமாக இருப்பதுதான்.
படத்தில் முதலில் கவர்வது ஆஷிகா ரங்கநாத்தின் அழகு . (டுவிஸ்ட் அல்லது திருப்பம் என்ற பெயரில் ஆரம்பத்தில் அவர் முஸ்லிம் பெண் போல நம்ப வைக்க முயல்வது எல்லாம் வேண்டாத வேலை)
வழக்கம் போல பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார் சித்தார்த் .
ஆரம்பக் காட்சிகளில் அசோக்கின் வசனம் அசத்துகிறது . ஆனால் போகப் போக தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் விசயங்களை விளக்குவதிலேயே டயர்ட் ஆகி விடுகிறது ( திரைக்கதையிலும் பங்களித்து இருக்கிறார் அசோக் . எனவே அவரும் குற்றவாளிதான்)
கே ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு .
இப்படி ஒரு பெண் கிடைத்தால் யோசிக்காமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உணர்வையே அந்த பஸ் காட்சி ஏற்படுத்தும் . ஆனால் அதற்கெலாம் கோபப்படுகிறார் நாயகன் . இப்படித்தான் வித்தியாசமாக டுவிஸ்ட் சொல்கிறோம் என்ற பெயரில் வெலவெலக்க வெலவெலக்க சுத்தி விடுகிறார்கள்
மனைவியோடு நாயகன் முரண் படுவதற்கான காரணங்கள், ஒரு இயக்குனராக முயலும் நபரின் மெச்சூரிட்டியில் இல்லை. அரைவேக்காடு அல்லது மெண்டல் லெவலில் இருக்கிறது . கல்யாணமான புதிதில் முதலிரவின் விளைவு பற்றி எந்தப் புரிதலும் இல்லாத எழுத்து .
கணவன் தான் இயக்கும் படத்தின் கதையை சொல்லும்போது, குக்கர் விசில் பற்றி மனைவி ஓடுவதும் , ஆடிட்டராகத் தகுதி உள்ள பெண்ணின் செயல்பாடாக இல்லை.
இப்படியாக காட்சிக்கு மட்டும் ஏதோ எழுதி இருக்கிறார்களே ஒழிய , கதாபாத்திரங்களை மனதில் வைத்து எழுதவில்லை.
படம் முடிஞ்சிருச்சி என்று நினைக்கும் போது, சித்தார்த்தும் நண்பர்களும் மொட்டை மாடியில் உட்கார்ந்து சாவககாசமாக பேச ஆரம்பித்து அதற்கு அப்புறமும் படத்தை ஓட்டிக் கொண்டு இருப்பதெல்லாம் அநியாயம் .
மாறன் கூட ஏமாற்றி விட்டார் .
சித்தா பட புரமோஷனுக்காக பெங்களூர் சென்ற சித்தார்த்தை தமிழர் தமிழ்ப் படம் என்பதற்காக தடுத்தார்கள். இனி இனி அப்படி நடக்கக் கூடாது என்பதற்காக இந்தப் படத்தில் பெங்களூரையும் கதை நிகழும் இடமாக மாற்றி ஆங்காங்கே கன்னடம் எல்லாம் பேசி இருக்கிறார் சித்தார்த். இந்த சிரத்தை திரைக்கதையில் இயக்குனருக்கும் இருந்திருக்கலாம் .
பாக்யராஜ் சொல்வார், “ஒரு கதைக்காக முடிச்சு போடும்போது, அவிழ்க்க முடியாது என்று நமக்கே தோன்றும்படியாக ஒரு முடிச்சை போட வேண்டும் . ஆனால் அப்படி போட்ட பிறகு, எப்படியாவது அவிழ்த்து விடவேண்டும் ” என்று .
இவர்கள் போட்டு இருக்கிறார்கள் . அவிழ்க்கத் தெரியவில்லை, எனவே அறுத்து விட்டார்கள்
