ஒரு படம் நன்றாக இருப்பதாக ஒரு பொதுக் கருத்து இருந்தால் , தனக்குப் பிடித்து இருந்தால் , தனக்கு வேண்டியவர்கள் படம் என்றால் படம் வெளியான பிறகு அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அந்தப் படம் பற்றிப் பாராட்டுவதும், படக் குழுவினரை அழைத்து பேசி பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொள்வதும் வாழ்த்துவதும் ரஜினிகாந்தின் பழக்கம் .
ஆனால் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு படத்தை வாழ்த்தி ரஜினி காணொளிப் பேச்சு தந்து இருக்கிறாரா? இதுவரை இல்லை
அப்படி ஒரு விஷயத்தை சாதித்து இருக்கிறது ஒரு படம் .
ராஜஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ்குமார் தயாரிக்க, அன்சன் பால். ரெபா மோனிகா ஜான், , மாத்யூ வர்கீஸ், அனுபமா குமார் , வெற்றிவேல் ராஜா, கிஷோர் ராஜ்குமார், சங்கர் குரு ராஜா, சுஜாதா நடிப்பில்
விஜி – கவின் பாண்டியன் வசனத்தில் கல்யாண் ஒளிப்பதிவில் விஷ்ணு பிரசாத் இசையில் ,
சுரேஷ்குமார் இயக்கி இருக்கும் , அழகான கவியான , நயமான பெயர் கொண்ட காதல் படம் மழையில் நனைகிறேன் .
இந்தப் படம்தான் அப்படி ஒரு விஷயத்தை சாதித்து இருக்கிறது . .
தயாரிப்பாளர் ராஜேஷ்குமார், தீவிர ரஜினி ரசிகர் . இவரைப் பற்றி மிகப் பெரிய அரசுத் துறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் சொல்ல , அப்படி வந்தது ரஜினியின் அந்த வாழ்த்துக் காணொளி.
அன்சன் பால் இதற்கு முன்பு ரெமோ, சோலோ, 90 எம் எல் , தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் . மலையாள நடிகரான இவருக்கு இது ஹீரோவாக முதல் படம். மலையாளத்தில் மம்முட்டியுடன் இவர் நடித்த ஆபிரகாமிண்டே சந்தாதிகள் படத்தின் மூலம் சிறப்பான பெயர் பெற்றவர்.
நாயகி ரெபாபா மோனிகா ஜான் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தவர் . ஜருகண்டி என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்தவர். தெலுங்குப் படமான சாமஜவரகமனாவில் அசத்தியவர்.
ரொம்ப நாளுக்குப் பிறகு படத்தில் ஏழெட்டு அழகான மெலடி பாடல்களோடு வருகிறது இந்தப் படம் .
விஷ்ணு பிரசாத்தின் இசையில் , கல்யாணின் சிறப்பான ஒளிப்பதிவில் அன்சன் பால், ரெபா வின் அழகிய முகங்களை வைத்து லட்டு லட்டாக பாடல்களை எடுத்து இருக்கிறார் இயக்குனர் சுரேஷ்குமார் .
அப்படி இருக்கின்றன பாடல்கள் .
படம் பற்றிப் பேசும் இயக்குனர் சுரேஷ்குமார், ” இது முழுமையான காதல் கதை. விதவிதமான காதல் படங்களில் இது ஒரு வகை. நிராகரிக்கப்பட்ட காதலைப் பற்றிய கதை இது. அமெரிக்கா சென்று மேல் படிப்பு படிக்க ஆசைப்படும் ஒரு வேற்று மதப் பெண்ணின் மீது ஓர் இளைஞனுக்கு காதல் வருகிறது . நாயகி அதை நிராகரிக்கிறார். எனினும் நம்பிக்கையோடு அவர் காத்திருக்க அந்தக் காதல் என்ன ஆனது என்பதே படம் .
படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்றாக, பேசப்படும் ஒன்றாக இருக்கும்
படத்துக்கும் மழைக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது . அது ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது . எனவேதான் இந்தப் பெயரை வைத்தோம் . இது குடும்பத்தோடு பார்க்க முடிகிற படம் “என்றார்.
தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் பேசும்போது, ” நான் ரஜினி சாரின் உயிருக்கு உயிரான ரசிகன் .முத்து படம் வெளியான போது ரஜினியின் அதே கெட்டப்புடன் கையில் சாட்டையுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தேன் (குதிரை வண்டி ஓட்டுவீங்களா சார்?)
இயக்குனர் சுரேஷ்குமார் என் தம்பியின் நண்பர் . அவர் சொன்ன கதை நன்றாக இருக்க, ஒரு நிலையில் நானே தயாரிக்க முன்வந்தேன்.. பின்னர் அன்சன் பால் ஹீரோ ஆனார் . ரஜினி சாரின் வாழ்த்து எனக்கு பெரிய ஆசீர்வாதம்” என்றார்
“முழுக்க முழுக்க காதல் படம் என்பதால் ஒளிப்பதிவில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் ” என்றார் ஒளிப்பதிவாளர் கல்யாண்.
” படத்தில் பாடல்கள் நிறைய இருப்பது சந்தோஷம் . எல்லா பாடல்களும் இனிமையாக இருக்கும் . பின்னணி இசையும் நன்றாக இருக்கும்” என்றார் விஷ்ணு பிரசாத்
நாயகன் அன்சன் பால் , ” ரெமோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான எனக்கு இது நல்ல வாய்ப்பு. படத்தில் என் கேரக்டரில் நிறைய மாற்றங்கள் இருந்தது நடிக்க நன்றாக இருந்தது . “என்றார் .
நாயகி ரெபா மோனிகா ஜான் பேசும்போது, ” உள்ளுக்குள் காதல் வந்தும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாத பாத்திரம் எனக்கு . படத்தின் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது . ரசித்து நடித்தேன் . படமும் நன்றாக இருக்கும் “என்றார்.
படத்தில் வரும் உன் காதல் பார்வை பாடலை ஹரிச்சரனுடன் சேர்ந்து பாடி இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீவித்யா ராஜேஷ்குமார் .
டிசம்பர் 12 படம் வெளிவருகிறது . அன்று ரஜினியின் பிறந்த நாள் .
