ராக் லைன் வெங்கடேஷ் வழங்க, ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் முடிஞ்சா இவன புடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப் , இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ,
தயாரிப்பாளர் சூரப்பா பாபு , இசையமைப்பாளர் டி.இமான் , பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பி.வாசு ,
நடிகர்கள் தனுஷ் ,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜ ரத்தினத்தின் ஒளிப்பதிவில் இமான் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருந்தன. முன்னோட்டம் கமர்ஷியலாக இருந்தது
வரவேற்புரை ஆற்றிய கே எஸ் ரவிகுமார் ” நான் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன் . எனினும் எனக்குள் இன்னும் ஓர் இயக்குனர் இருக்கிறார் .
எனவேதான் நான் நடித்த படங்களின் ஹீரோக்களை எல்லாம் இங்கே வர வைத்து இருக்கிறேன்” என்றார்
இயக்குனர் பி.வாசு பேசும்போது ” கனவுகள் என்றும் இளமையானவை . நானும் கே எஸ் ரவிக்குமாரும் கொஞ்சம் சீனியர் என்பது அனுபவத்தில்தான் .
மற்றபடி எங்களாலும் இளம் ஹீரோக்களை வைத்து இன்றைய ரசிகர்களை கவரவும் முடியும் ” என்றார்
விழாவில் சிவ கார்த்திகேயன் பேசியபோது “நான் பார்த்து வியந்த இயக்குநர் கே.எஸ். ரவி குமார் அவர்களின் இசை வெளியீட்டு விழாவில் நான் அவர் அருகில் அமர்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
ரெமோ படத்தின் படபிடிப்பில் இயக்குநர் கே.எஸ். ரவி குமார் அவர்கள் கலந்து கொண்டு எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்தார்.
ரெமோ படத்தில் நான் பெண் வேடத்தில் நடிக்கையில் அது எனக்கும் பெரிதும் உதவியது.
வில்லன் படத்தில் அஜித் அவர்கள் கடைபிடித்த சில விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்து ரெமோ படத்தில் வரும் பெண் வேடத்தை மேலும் மெருகேற்றினார்.
டப்பிங்கில் நான் பெண் வேடத்துக்கு பேசும் போது எவ்வாறு பேச வேண்டும் என சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்.
அவர் இயக்கியுள்ள முடிஞ்சா இவன புடி எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான மிக சிறந்த படைப்பாக நிச்சயம் இருக்கும்.படத்தின் முன்னோட்டம் நன்றாக இருக்கிறது.
மேடையில் தனுஷ் சார் இருக்கிறார் . அவர் கொடுத்த பக்க பலத்தில்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன்
நான் மேடைக்கு வரும் போது விஜய் சேதுபதி அண்ணன் என்னை பார்த்து ‘சிவா நீ சூப்பர் பிகர்’ என்று கூறினார்.
மதன் கார்க்கியோ ‘மேடையில் பெண்கள் யாருமே இல்லை . சிவகார்த்திகேயனையாவது ரெமோ படத்தில் வருவது போல பெண் வேஷம் போட்டு கொண்டு வந்திருக்கலாம்’ என்று கூறினார்.
நம்மள ஒரு வழி பண்ணிடுவாங்க போல ….. ! எனக்கு பயமாக இருக்கு ” என்றார்..
அடுத்ததாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி , ” நான் சிவா நடித்த ரெமோ படத்தின் முன்னோட்டதை பார்த்தேன். நிஜமாகவே மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்.
முடிஞ்சா இவன புடி ட்ரைலர் நிஜமாகவே அருமையாக உள்ளது. இயக்குநர் கே. எஸ். ரவி குமார் அவர்கள் எப்போதும் இயக்குநர் ஜாம்பவான் தான். அவர் சிறந்த நடிகரும் கூட” என்றார்.
விழாவில் நடிகர் தனுஷ் பேசிய போது, “எனக்கு கிச்சா சுதீப் அவர்களை மிகவும் பிடிக்கும். நான் ஈ படத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்தேன்.
நான் எந்த ஓர் நடிகரின் நடிப்பை பார்த்தும் வியந்து அவர்களுக்கு கால் செய்து பேசியது இல்லை. ஆனால் கிச்சா சுதீப் அவர்களுக்கு கால் செய்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
நான் ஈ படத்தை பார்த்த மாபெரும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் சரியான தேர்வு குழு அமைந்தால் சுதீப்புக்கு நிச்சயம் நேஷனல் அவார்ட் கிடைக்கும்.
நான் அந்த தேர்வு குழுவில் இருந்தால் நிச்சயம் அவருக்கு தேசிய விருது கொடுத்து இருப்பேன் என்று கூறினார். அதை நான் அவரிடம் சொல்வதற்கு சரியான இடம் இதுதான் என்று நினைக்கிறேன்.
எனக்கு சில நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உண்டு , விஜய் சேதுபதியுடன் நடித்துவிட்டேன் மிக விரைவில் மீண்டும் நாங்கள் இனைந்து நடிக்கவுள்ளோம்.
ஆனால் எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ”என்று கூறினார்.
சுதீப் பேசும்போது ” படத்தில் நானே தமிழில் டப்பிங் பேசி இருக்கிறேன் . ஆனால் மேடையில் தவறாக தமிழ் பேசி அது ஒரு பிரச்னை ஆகக் கூடாது என்பதால்தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன் .
விரைவில் மேடையிலும் நல்ல தமிழில் பேசுவேன் ” என்றார்





