ஆர் .செந்தில் நாடன் (எழுத்துப் பிழை அல்ல) எழுதி இயக்கி இருக்கும் படம் ஒரு முகத்திரை .
திரை விலக்கிப் பார்க்கலாமா ? பார்ப்போம் .
மனநல மருத்துவம் படிக்கும் மாணவிகள் கண்மணி (அதிதி) மற்றும் மது (ஸ்ருதி) இடையே , பிரபல மன நல மருத்துவர் சத்யமூர்த்தி ரத்னவேலை (ரகுமான்) ,
தங்கள் கல்லூரி விசிட்டிங் புரஃபசராக யார் அழைத்து வருவது என்பதில் போட்டி .
கண்மணி, முகம் தெரியாத தனது முக நூல் நண்பன் ரோஹித் உதவியை நாட , சத்ய மூர்த்தி கல்லூரிக்கு வருகிறார் . ரோஹித்துக்கும் கண்மணிக்கும் நட்பு நெருக்கம் அடைகிறது .
இதற்கிடையே , காதலித்து நெருங்கிப் பழகி பின்னர் ஏமாற்றி விட்ட மாயா என்ற பெண்ணால் (தேவிகா) ஏமாற்றப்பட்டு தற்கொலை முயற்சி வரை போகும் ,
அர்ஜுன் என்ற இளைஞனை ( ஆர் . சுரேஷ்) , சத்யமூர்த்தி காப்பாற்றுகிறார் . சிகிச்சை தொடர்கிறது .
மேற்படிப்புத் திட்டங்களோடு ரோஹித்தை நம்பி கண்மணி சென்னை வர, ரோஹித்தை பார்க்க முடியவில்லை . கண்மணிக்கு சத்ய மூர்த்தி அடைக்கலம் தருகிறார் .
அவளால் ஈர்க்கப்படுகிறார் . ரோஹித் செய்வதாக சொன்ன உதவிகளை எல்லாம் அவரே செய்கிறார் .
ஒரு நிலையில் ரோஹித் பற்றி அறியும் கண்மணி பலத்த அதிர்சிக்கு ஆளாகிறாள் . அதைத் தொடர்ந்து சத்ய மூர்த்திக்கும் கண்மணிக்கும் பிரச்னை வருகிறது .
ஒரு நிலையில் கண்மணி உயிருக்கே ஆபத்து வருகிறது . அந்த ஆபத்தில் அர்ஜுனும் பங்கு பெறுகிறான் . ரோஹித் யார்? கண்மணி தப்பித்தாளா? சத்யமூர்த்தி என்ன ஆனார் என்பதே இந்த ஒரு முகத்திரை
அதிகம், சொல்லப்படாத கதை . அதற்காக ஒரு சபாஷ் .
ஆரம்பத்தில் திரைக்கதை கொஞ்சம் டல் அடித்தாலும் போகப் போக சூடு பிடிக்கிறது . இரண்டாம் பகுதியில் இயக்கமும் சிறப்பாக இருக்கிறது .
இயக்குனர் செந்தில் நாடனின் சிறப்பான ஃபிரேம்களில் சரவண பாண்டியனின் ஒளிப்பதிவும் அருமை பிரேம் குமார் சிவபெருமானின் பின்னணி இசை படத்துக்கு டெம்போ ஏற்றுகிறது . குட்!
கிளைகளாக வந்து இணையும் திரைக்கதையை படமாக சிறப்பாகப் படைத்ததில் எஸ் பி அஹமதுவின் படத் தொகுப்பும் சபாஷ் போட வைக்கிறது .
ரகுமான் கேரக்டருக்கு ஏற்ப சிறப்பாக பரிமளிக்கிறார் .அதிதி அழகாக இருக்கிறார் . நன்றாக நடித்தும் இருக்கிறார் .
கேரக்டரின் பக்குவமற்ற தன்மையை உணர்ந்து சிறப்பாக நடிக்கிறார் சுரேஷ் . தேவிகாவும் அப்படியே . படத்தில் வரும் இளம்பெண்கள் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள் .
அர்ஜுன் அந்த அளவுக்கு பாதிக்கப்படும் அளவுக்கு மாயவுடனான அவனது காதல் அழுத்தமாக சொல்லப் படவில்லை என்பது ஒரு குறை .
இருபத்தைந்து லட்ச ரூபாய் பணத்தை கண்மணி வாங்கிக் கொள்வது, அவள் பக்கம் உள்ள நியாயத்தைக் கெடுப்பது இன்னொரு குறை .
அதை அவள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அது சொல்லப்பட்டிருக்க வேண்டும்
எனினும் இந்த வாரம் வந்துள்ள மற்ற படங்களுக்கு இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை .
ஒரு முகத்திரை .. பெரிதாக ஓட்டையோ கிழிசலோ இல்லாத ஒகே திரை






