ஸ்டார் மேக்கர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, சாக்ஷி, இனியா, சித்தப்பு சரவணன் நடிப்பில் தனது 71 ஆவது படமாக எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருக்கும் படம்.
கொடூரமான குற்றவாளியான வீச்சருவாள் வீரப்பனை ( சரவணன்) பிடித்து சிறையில் அடைக்கிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் ( சமுத்திரகனி) அவரது மனைவிக்கு ( இனியா) தன்னையும் தன் மகளையும் வீரப்பன் சுட்டுக் கொல்வது போல கனவு வருகிறது .
சிறையில் இருந்து வெளிவரும் வீரப்பன் தனக்கு எதிராக வாதாடிய வக்கீலின் குடும்பத்தில் அனைவரையும் கொடூரமாகக் கொலை செய்கிறான்.
போலீஸ் அதிகாரியின் குடும்பத்தைக் கொல்ல ஆள் அனுப்புகிறான் . அது முடியாத நிலையில் அவரது மகளான பள்ளிச் சிறுமியைக் கடத்தி நிர்வாணமாக்கி அவமானப்படுத்தி அனுப்பி வைத்து ‘இனி எனக்கு எதிராக செயல்பட்டால் இன்னும் விபரீத விளைவுகள் சந்திக்க வேண்டி வரும்’ என்று உணர வைக்கிறான்.

போலீஸ் அதிகாரி, தன் குடும்பத்தின் வேண்டுகோளுக்காக விலகிப் போய் விடுவதாகச் சொல்ல , இனி வீரப்பனுக்கு பிரச்னையே இல்லை என்ற நிலை. ஆனால் மறுநாள் வீரப்பன் கொல்லப் படுகிறான் .
கொன்றது யார் என்பதே படம்.
சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக மிடுக்கும் ஆக்ரோஷமும் காட்டுகிறார் . அவரது அம்மா கதாபாத்திரமும் அதில் நடித்த பாட்டியும் அருமை .
நாயகனுக்கு உதவும் பெண் போலீஸ் அதிகாரியாக சாக்ஷி . அதிரடி சண்டை போடுகிறார். டூ பீஸில் கவர்ச்சி காட்டுகிறார் . நீச்சல் குளத்தில் குளிக்கிறார் . போலீஸ் வேலையையும் சிறப்பாகப் பார்க்கிறார்.

இருவரும் சேர்ந்து தண்ணி அடிக்கும் காட்சிகள் படத்தில் உண்டு . பெண் போலீஸ் வீட்டில் ஒரு மதுப் புட்டிகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன . ம்ம்ம்…. ம்ம்ம்…
சைக்கோத்தனம் நிறைந்த நாடகத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் திணறத் திணற (பார்ப்பவர்கள்தான்) நடிக்கிறார் சரவணன் . அந்தக் கதாபாத்திரம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தது என்பதை சொல்லாமலே மறைத்து விட்டார்கள்.
மனைவியாக இனியா ஒகே .
ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே சுட்டுக் கொல்வது, குழந்தையின் பிறந்த நாள் விழாவில் நுழைந்து தலைகளை அரிவாளால் சீவித்தள்ள, கேக்கில் ரத்தம் சிந்தி வழிவது போன்ற லக லக சமாச்சாரங்கள் உண்டு .
படத்தில் சமுத்திரக்கனி சம்பளத்துக்கு அடுத்து அதிக செலவே அந்த மேக்கப் ரத்தம் வாங்குவதற்குத் தான் ஆகி இருக்கும் போல

உற்சாகத்துக்கு வயது தடை இல்லை என்பது போல வணிக மயமான ஷாட்கள் அதிரடி சண்டைக் காட்சிகள் என்று படத்தை கமர்சியல் கைமாவாக இயக்கி இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். அந்த எனர்ஜி அபாரம்
.
முப்பது வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய நான் சிகப்பு மனிதனை இயக்கிய பாணியிலேயே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் . படத்தின் மைனசும் அதுதான்