8 பாய்ண்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் பி. .அருமைச் சந்திரன் தயாரிக்க , அக்ராஸ் பிலிம்ஸ் வழியே கலைப்புலி எஸ் தாணு உலகமெங்கும் வெளியிட
நாசரின் மகனும் , ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் நடித்தவருமான லுத்புதீன் நாயகனாக நடிக்க , ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இயக்குனர் தனபால் பத்மநாபன், சத்யராஜ் குமார் பேயோன் ஆகியோர் திரைக்கதை வசனம் எழுத,
மேற்படி தனபால் பத்மநாபன் இயக்கி இருக்கும் படம் பறந்து செல்ல வா.
ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர ஆனந்தி, சுஜாதா என்று பல துணைக் கதாநாயகி நடிகைகள் ,
இவர்களோடு நரேல் கெங் என்ற ஒரு சீனப் பெண்ணும் முக்கியக் கதாநாயகியாக நடிக்கிறார் . சதீஷ், கருணாகரன், ஆர் ஜே பாலாஜி , மனோபாலா ,
பேராசிரியர் ஞான சம்பந்தன், ஜோ மல்லூரி, சுகன்யா ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்கேன்னி பேங் என்பவர் உள்ளிட்ட சில அயல்நாட்டு வில்லன்களும் படத்தில் உண்டு .
இந்தப் படத்துக்காக ஒரே நேரத்தில்ம் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் எல் ஈ டி ஸ்கிரீன் மூலம் படத்தின் டிரைலர் காட்டப்பட்டபடி ஊர்வலம் ஒன்று நடத்தி வித்தியாசமாக முறையில் பிரபலம் செய்தனர் .
இந்த நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ் தாணுவும் நடிகர் நாசரும் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்ததோடு பயணமும் செய்தனர்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினரோடு கலைப்புலி எஸ் தாணு , நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் ” நாசர் சாரின் மகன் லுத்புதீன் , கதை நாயகன் என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் .
படத்தில் இடம் பெற்ற பலரும் இங்கிருந்து சிங்கப்பூர் வந்து சுமார் ஐம்பது நாட்கள் தங்கி நடித்துக் கொடுத்தனர் . அவர்களுக்கு நன்றி .
தவிர படத்தில் மலேசிய சிங்கப்பூர் கலைஞர்களும் உண்டு . சீனப் பெண் நரேல் கெங் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார்.
என்னோடு தயாரிப்பில் இணைந்த அப்துல்லா , மற்றும் வியாபாரத்தில் இணைந்த அக்ராஸ் பிலிம்ஸ் நிறுவனங்களுக்கு நன்றி
இந்தப் படத்தை தாணு சார் வெளியிடுவது பெருமையான விஷயம் . அவருக்கு மனமார்ந்த நன்றி ” என்றார் .
இளம் நடிகை சுஜாதா பேசும்போது ”
நான் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் . சில வருடங்களாக சென்னையில் தங்கி நடித்துக் கொண்டு இருக்கிறேன் .
இந்தப் படத்துக்காக நான் மீண்டும் என் சொந்த ஊருக்குப் போய் நடித்தது சந்தோஷமான விஷயம் ” என்றார் .
அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பேசிய ஸ்ரீராம் , “ஒரு தரமான படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம் . லுத்புதீன் , ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், நரேல் என்று எல்லோரும் அற்புதமாக நடித்துள்ளனர் .
படம் ஒன்பதாம் தேதி வெளிவருகிறது ” என்றார் .
நடிகர் சதீஷ் தனது பேச்சில் ” நாசரின் வாரிசுக்கு நடிக்க வரா தா என்று சாதரணமாக கேட்கலாம் . இனிஷியல்தான் வரும் .
நடிப்பு எல்லாம் சொந்தத் திறமை இருந்தால்தான் வரும் . லுத்புதீன் மிக திறமையான நடிகர் . சிறப்பாக நடித்துள்ளார் ” என்றார் .
நடிகர் நாசர் பேசும்போது ” முதல் விஷயம் …. , இளம் கலைஞர்கள் வெல்ல வேண்டும் . அவர்கள் நடித்த படம் நன்றாக ஓட வேண்டும் .அது எனது எப்போதுமான ஆசை . அந்த விதத்தில் இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும் .
அடுத்து லுத்புதீன் என் மகன் என்பதால் , அவன் நல்ல நடிகனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவன் என் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதால் அல்ல ;
அவன் மூலமும் என் பெயரை நானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் . அதனால் அவனை பல தரப்பட்ட நடிப்புப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் . இன்னும் கற்றுக் கொண்டு இருக்கிறான். .
இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு வெளியிடுவதன் மூலம் படத்துக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது . அவருக்கு என் நன்றி ” என்றார் .
இயக்குனர் தனபால் பத்மநாபன் தன் பேச்சில் ” காதலைத் தேடும் ஒரு இளைஞன் எது உண்மையான காதல் என்று உணர்வதே இந்தப் படம் .
காதலன்– காதலி , கணவன் – மனைவி உட்பட என்று எந்த உறவாக இருந்தாலும் இரு தரப்புமே ஒருவருக்கு ஒருவர் மதித்து உணர்வுகளை புரிந்து முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வதே
அந்த உறவு நீடிக்க நல்ல வழி . . துரதிர்ஷ்ட வசமாக தமிழ் சினிமாவில் இதுவரை அது சரியாக சொல்லப் படவில்லை என்று கருதுகிறேன் . இந்தப் படம் அதை சொல்லும் .
படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர் . எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது வந்துள்ளது ” என்றார்.
எல்லோரையும் வாழ்த்தினார் கலைப்புலி எஸ் தாணு.