ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி எல் தேனப்பன் தயாரிக்க, மம்முட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி,
அஞ்சலி அமீர், பாவல் நவகீதன் நடிப்பில் ராம் இயக்கி , உலகப் பட விழாக்களில் பல்வேறு விருதுகளை பெற்ற படம் பேரன்பு .
அன்பா ? வம்பா ? பார்க்கலாம் .
வெளிநாட்டிலேயே வெகு காலம் வேலை செய்த அமுதவனுக்கும் ( மம்முட்டி ) தனக்கும் பிறந்த,
பாப்பா என்ற மூளை முடக்குவாதக் குறைபாடு உடைய ( ஸ்பாஸ்டிக்) பாப்பா என்ற சிறுமியை ( தங்க மீன்கள் சாதனா) ,
கணவனிடமே ஒப்படைத்து விட்டு , தனக்குப் பிடித்தவனோடு போய் விடுகிறாள் மனைவி.
அவமானம் கருதி மனிதர்கள் குறைவான – தனக்குப் புதிய மழைப் பிரதேசத்தில் வீடு பார்த்து மகளோடு வசிக்கப் போகிறார் அமுதவன் .
அதுவரை தந்தையிடம் ஒட்டாமல் அம்மாவுக்காக ஏங்கிக் கொண்டிருந்த பாப்பா , தந்தையிடம் கொஞ்சம் நெருங்குகிறாள் .

பாப்பா பெரிய மனுஷி ஆனா நிலையில் அவளை கவனிக்க ஒரு பெண்ணின் உதவி தேவைப் படுகிறது அமுதவனுக்கு .
வேலைக்கு வந்த விஜய லக்ஷ்மி (அஞ்சலி ) பாப்பாவோடு மன ரீதியாகவும், அமுதவனோடு உடல் ரீதியாகவும் நெருங்குகிறாள் .
அமுதவனும் விஜய லட்சுமியும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ,
விஜய லட்சுமியின் தாய்மாமனாக அறியப்படும் பாபு (பாவல் நவ கீதன்) அவளது கணவன் என்பதும் …
அமுதவன் பாப்பா இருவரும் வசிக்கும் — ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிக்கு சொந்தமான அந்த வீட்டின்,
வாடகை உரிமையை பெற்று அங்கே ரெசார்ட் அமைக்க விரும்பும் சில கட்டப் பஞ்சாயத்து நபர்களின்
( பி எல் தேனப்பன், ஜே எஸ் கே சதீஷ் குமார்) ஆட்கள் என்பதும் தெரிகிறது .
விஜய லக்ஷ்மி மீது புகார் தர முடியும் என்ற நிலையிலும் , அந்த வீட்டின் வாடகை உரிமையை விட்டுக் கொடுத்து விட்டு

பாப்பாவோடு ஊருக்கு வருகிறார் அமுதவன் .
கால் டாக்சி டிரைவராக வேலை செய்து கொண்டு மகளோடு ஒண்டிக் குடித்தனத்தில் வசிக்கிறார் .
பாப்பாவுக்கு மூளை முடகுவாதக் குறைபாடு காரணமான காலை கால்களில் ஊனம் ,
மன வளர்ச்சியின் ஊனம் இருந்தாலும் வயதுக்குரிய உணர்வுகள் வருகின்றன .
மாத விலக்கு சமயத்தில் தொடர்ந்து அப்பாவே நாப்கின் மாற்றுவதை அவர் விரும்பவில்லை .
அது தொடர்பான பிரச்னைகள் அமுதவனின் மனத் திண்மையை உடைக்கின்றன .
இதற்கிடையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் ஓர் திருநங்கை விலை மாதுவின் (அஞ்சலி அமீர்)
நட்பு அமுதவனுக்கு கிடைக்கிறது .
அவளை மகளின் பிரச்னைகளை தீர்க்க பயன்படுத்திக் கொள்ள அமுதவனால் முடியவில்லை .

காரணம் குடும்பப் பெண்ணாக அறிமுகமான விஜயலட்சுமியே கொடுத்த அதிர்ச்சி .
ஒரு நிலையில் அமுதவன் மகளோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ள கடலில் இறங்க …
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த பேரன்பு
தமிழில் ஓர் உலகப் படம் ! ‘இயற்கை இரக்கமற்றது , இயற்கை புதிரானது , இயற்கை சுவாரஸ்யமானது.
இயற்கை முடிவுகள் அற்றது’ உள்ளிட்ட 12 தலைப்புகளில் 12 காட்சி அத்தியாயமாக படத்தைக் கொடுத்து இருக்கிறார் ராம் .
வார்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் !
அழுத்தமான காட்சிகள்… ஆழமான நிதானமான ஷாட்கள் .. என்று ராம் படத்தை உருவாக்கி இருக்கும் விதம் ,
நாம் பார்ப்பது படம் அல்ல என்ற உணர்வை ஏற்படுத்துகிறது .
அமுதவனாகவும் பாப்பாவாகவும் நாம் மாறி மாறி வாழத் துவங்கி விடுகிறோம் . அதுதான் இந்தப் படத்தின் ஆகப் பெரும் பலம் .

அதுதான் இதை வழக்கமான சினிமாக்களில் இருந்து மிகுந்த உயரத்தில் வைத்துக் கொண்டாட வைக்கிறது .
காட்சி அமைப்பு, படமாக்கல் , நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதம் இவற்றால், மஜீத் மஜிதி , கிம் கி டக் வரிசையில்
கம்பீர சிம்மாசனம் போட்டு உட்காருகிறார் ராம் .நெகிழ்வும் மகிழ்வும் எங்கள் மகா கலைஞனே .
“பாப்பா கையையும் காலையும் வாயையும் திருப்பிக்கிட்டு நடக்கறத பாத்து நானும் நடக்க முயற்சி பண்ணேன் . முடியவே இல்ல .
ஆனா பாப்பா சர்வசாதரணமா நடக்கும் . அது அவளுக்கு பழகின விஷயம் .
அப்போதான் ஒருத்தர் கிட்ட போய் இன்னொருத்தரை காட்டி , ” நீங்க ஏன் அவரை மாதிரி இல்லன்னு கேட்கறது எவ்வளவு பெரிய வன்முறைன்னு புரிஞ்சது “
“இவ்வளவு நல்ல குழந்தை இருக்கிற நீங்க போய் அப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கீங்கனா ,,
பாவம் உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை இருக்குமோ ?”
— போன்ற ராமின் வசனங்கள் …
எளிய வார்த்தைகளில் பெரிய விசயங்களை சொல்லும் விதம் பிரம்மிப்பு .
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு செய்திருக்க்கும் உணர்வுக் கூட்டலும் தரக் கூட்டலும் சிலிர்க்க வைக்கிறது

ஒளிபபதிவே ஒரு குணாதிசயமாக மிளிர்கிறது . உலகக் கலைப் படங்களின் ஒளிப்பதிவாளர்களுக்கு எல்லாம்,
தனது பொருள் செறிந்த ஒளிப்பதிவால் சவால் விட்டு இருக்கிறார் தேனி ஈஸ்வர் .
இது போன்ற படங்களுக்கு தனது வழக்கமான பாணியிலேயே சிறப்பான இசையை கொடுத்து தூக்கி நிறுத்துவதில்
யுவன் சங்கர் ராஜா வல்லவர்தான். ஆனால் இதில் அவரது இசை இன்னும் ஆழமாக இறங்கி நிற்கிறது .
பெரும்பாலும் மவுனத்தையும் மெல்லிய- நிதானமான ஒற்றை ஒலிகளையும் இசையாக்கி இதயம் நெகிழ்த்துகிறார் யுவன் .
கடைசியில் வரும் ரோலிங் டைட்டில் சமயத்தில் அரேபிய – உருது வடிவ இசை மூலம் தனது மனதின் மத உணர்வையும் வெளிப்படுத்திக் கொள்ள தவறவில்லை .
பாப்பாவாக தங்க மீன்கள் சாதனா ! ஒரு மூளை முடக்குவாதக் குறைபாடு உள்ள சிறுமியை ,

அச்சு அசலாக தனக்குள் இருந்து உருவாக்கிக் காட்டி விதிர் விதிர்க்க வைத்து இருக்கிறாள் இந்த சிறுமி .
அந்த குறை பாடு உள்ள குழந்தையை அப்படி நடிக்க வைப்பது கூட கஷ்டமில்லை .
ஆனால் சாதனா நடித்து இருப்பது இமாலய உழைப்பும் திறமையும் இருந்தால் மட்டுமே சாத்தியம்
“பாப்பா கையையும் காலையும் வாயையும் திருப்பிக்கிட்டு நடக்கறத பாத்து நானும் நடக்க முயற்சி பண்ணேன் . முடியவே இல்ல .
ஆனா பாப்பா சர்வசாதரணமா நடக்கும் . .. ” என்ற வசனத்தை இங்கே பொருத்திப் பார்த்தால் ,
சாதனா செய்திருக்கும் சாதனையின் பரிணாமம் கொஞ்சமாவது விளங்கும் .
மகளே ! உனக்குக் கிடைக்காத விருதுகள் ,, விருதுகளே அல்ல !
தனது பண்பட்ட் நடிப்பால் அமுதவன் கதாபாத்திரத்துக்கு அமுது ஊட்டி இருக்கிறார் மம்மூக்கா !

அதுவரை மகளுக்கு எல்லா வகையிலும் பணி செய்து கிடந்த நிலையில் ,
அவளது பாலியல் பிரச்னை அறிந்து இடிந்து உடைந்து நொறுங்கி சிதறிப் போகிறாரே …
அடடா ! கல்லாய் சமைந்து போகிறோம் நாம் . (இன்னும் பேச்சில் அடிக்கும் மலையாள வாசனைதான் கொஞ்சம் உறுத்தல் . )
அஞ்சலி , பாவல் நவ கீதன் படத்துக்கு கிடைத்து இருக்கும் கூடுதல் கவிதைகள் !
அஞ்சலி அமீர் சிறப்பு .
மகளின் பாலியல் பிரச்சனைக்கு அமுதவன் தீர்வு காண முயலும் விதம் முட்டாள்தனமானது .
ராமின் அப்நார்மல் தன்மை துருத்திக் கொண்டு வெளிப்படுவதோடு , முகம் சுளிக்க வைக்கும் விஷயம் அது .

தன்னை விரும்பும் திருநங்கை விலைமாதுவை தனக்காக இல்லாவிட்டாலும்
பாப்பாவுக்காக முன்னரே திருமணம் செய்து கொண்டு தாய்மையின் அன்பால் பாப்பாவை சரி செய்ய அமுதவன் முயலாதது ஏன் ?
அதுதான் கதை .. அதுதான் குணாதிசயம் என்பது சரியான பதில் அல்ல .
மகளுக்காகவே வாழும் தகப்பன் , தன் குணாதிசயத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டான் .
அதே போல ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் இயற்கை இரக்கமற்றது , இயற்கை புதிரானது என்று
அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே போடப்படும் தலைப்புகள் திரைக்கதையின் போக்கை யூகிக்க வைக்கிறது .
மாறாக ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ” இப்படியாக.. இயற்கை இரக்கமற்றது ‘ ‘என்று போட்டு,

ஒவ்வொரு அத்தியாயத்தையும் முடித்து விட்டு , அடுத்த அத்தியாயத்தை துவங்கி இருந்தால் ….
இந்தக் குறையை தவிர்த்து இருக்கலாம் .
இப்போதைய முடிவை விட , அமுதவன் பாப்பா இருவரும் கடலில் இறங்கி போய் விடுவதோடு படத்தை முடித்து இருந்தால் ,
இந்தப் படம் இன்னும் பெரும் மன அதிர்வை ஏற்படுத்தி ஸ்பாஸ்டிக் குழந்தைகள் மீது
சமூகம் காட்ட வேண்டிய அக்கறையை உணர்த்தி இருக்கும் .
ஆனால் அது …
ஸ்பாஸ்டிக் குழந்தையை பெற்றால் தற்கொலைதான் முடிவு என்ற எண்ணத்துக்கு
ஸ்பாஸ்டிக் குழந்தைகளின் பெற்றோரை ஆளாக்கி விடும் என்ற நல்ல எண்ணத்தில் மாற்றி விட்டாரோ என்னவோ .?
படம் முடிந்து வெளியே வந்த போது, ” நெகிழ்வின் வெளியில் ஆழமும் உயரமும் ஒன்றே”

என்ற ஒரு சிந்தனை வந்து போனது .
பேரன்பு …. மனித உணர்வுகளுக்கு மகுடம் சூட்டுவது !
மகுடம் சூடும் கலைஞர்கள்
************************************
ராம், சாதனா, தேனி ஈஸ்வர், மம்முட்டி, யுவன் சங்கர் ராஜா, அஞ்சலி
