‘பிச்சைக்காரன்’ நிஜ ஹீரோவைத் தேடும் இயக்குனர் சசி

pichai 3

எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு ஏகாந்தமாக ஓடிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்துக்கு நல்ல விமர்சனம் தந்த ஊடகத்துறையினருக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது, 

இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி, நாயகி சாதனா டைட்டஸ் அடங்கிய  படக் குழு . 
உடன் மனதார வாழ்த்துவதற்காக இயக்குனர்கள் லிங்கு சாமி, ஜெயம் ராஜா, ஸ்டான்லி, தயாரிப்பாளர் தனஞ்செயன்  ஆகியோர் .

ஊரே போற்றும் உண்மையான வெற்றி என்ற வாசகத்துடன் அடங்கிய பேனர் , உண்மையைச் சொல்லி கம்பீரப்பட்டது. 
படத்தின் வெற்றியை கேக் வெட்டி அனைவரும் கொண்டாடினர் . விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் அவருக்கு அழகான நினைவுப் பரிசு ஒன்றை பரிசளித்தனர் 
pichai 99
“இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் நான் உடன் இருந்திருக்கிறேன் . சசி மாதிரி ஒரு உழைப்பாளியை,  நேர்மையான படைப்பாளியை பார்க்க முடியாது .அவர் கொடுத்தது எல்லாம் நல்ல படங்கள்தான் .
அதில் பலவும் வெற்றிப் படங்கள்தான். எனினும் இந்தப் படம் சசியை இன்னொரு உயரத்துக்கு கொண்டு போயிருக்கிறது ” என்றார் சசியின் நண்பர் இயக்குனர் ஸ்டான்லி 
“இது நான் வாங்க விரும்பிய படம் . விஜய் ஆண்டனி சாரிடமும் பேசிவிட்டு வந்தேன் . ஆனால் எனக்கு இருந்த வேறு சில கமிட்மெண்டுகள் காரணமாக வாங்க முடியாமல் போனது .
ஆனாலும் அதிர்ஷ்ட வசமாக செங்கல்பட்டு எனக்கு வந்தது. நன்றாகப் படம் போகிறது  ” என்றார் அவ்ரா சினிமாஸ் மகேஷ் .
pichai 9
‘வழக்கு எண்’   முத்துராமன் பேசும்போது ” என்னை எல்லோரும் கொடுமைக்கார போலீசாகவே நடிக்க வைத்தார்கள் .
ஆனால் மிக அற்புதமான கேரக்டர் கொடுத்து எனக்கு புது வழி காட்டி இருக்கிறார் சசி . எனக்கு நகைச்சுவை வேடங்களில் நடிக்க ரொம்ப ஆசை “என்றார் .
படத்தில் சக பிச்சைக்காரனாக நடித்து இருக்கும் இயக்குனர் மூர்த்தி “சசி சாரிடம் உதவி இயக்குனராக இருந்தவன் நான் . அப்புறம் இயக்குனராகவும் ஆனேன்.
இப்போது என்னை நடிகனாகவும் மாற்றிக் கொடுத்து இருக்கிறார் . அவருக்கு காலம் உள்ளவரை நன்றியோடு இருப்பேன்” என்று குரல் கம்மி  நெகிழ்ந்தார் . 
pichai 8
அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமனுஜம் ” நான் முன்பே சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து இருக்கிறேன் . அப்புறம் அமெரிக்கா போய் விட்டேன் . மீண்டும் வந்த எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இது .
அந்த கேரக்டருக்கு என்னை மட்டுமே பார்த்த சசி உடனே என்னை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது . படம் பார்க்கும் நிறைய பேர் இப்போது என்னை சொந்த அம்மாவாகவே நினைத்து பேசுகிறார்கள்.
அது நெகிழ்வாக இருக்கிறது ” என்றார் 
தனஞ்செயன் பேசும்போது “பிச்சைக்காரன் என்ற பெயரை வைத்து ஒரு படம் எடுக்கவும் அதை வாங்கி வெளியிடவும் ஒரு தைரியம் வேண்டும் . எங்களது இறுதிச் சுற்று படத்தின் பெயரும் அப்படிதான் .
pichai 7
படம் நன்றாக இருந்தால் பெயரில் செண்டிமெண்ட் எல்லாம் பார்க்கத் தேவை இல்லை என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம் ” என்றார் 
படத்தை கே ஆர் பிலிம்சுடன் சேர்ந்து வெளியிட்ட ஸ்கை லார்க் நிறுவனம் சார்பில் பேசிய உறுமீன் இயக்குனர் சக்தி ” இந்தப் படத்தை வாங்குவதற்கு பெரிய ஹோம் ஒர்க் செய்தோம் .
படம் எப்படி வந்திருக்கிறது என்பது பற்றி ஒரு தகவலும் தெரியாத  நிலையில்,   படத்தில் நடித்தவர்கள் வேலை செய்தவர்கள் இவர்களை எல்லாம் ஃபிரன்ட் பிடித்து,  அவர்களிடம் படம் பற்றி விசாரித்து,
 நன்றாக வந்திருப்பது தெரிந்து படத்தை வாங்கினோம் ” என்று,  அசத்தினார் .
pichai 6
இயக்குனர் மோகன் ராஜா பேசும்போது “நான் இயக்கிய வேலாயுதம் படத்தில் இசை அமைப்பாளராக வேலை பார்த்த காலத்தில் இருந்தே எனக்கு விஜய் ஆண்டனி பழக்கம் .
திரையுலகில் எனது முதல் நண்பன் அவன் . இப்போ நடிகனா தயாரிப்பாளரா பெரிய அளவுக்கு வளர்ந்துட்டான் . ஒரு தனி மையமாக ஆகிட்டான் . ரொம்ப சந்தோசம். அவன் இன்னும் பெரிய உயரங்களை தொடணும் .
சசி மிகச் சிறந்த இயக்குனர் . அவர் மிகுந்த பசியோடு  சமைத்த உணவு இந்தப் படம் .அதுதான் படம் இவ்வளவு ருசியாக இருக்கிறது.  அனைவருக்கும் வாழ்த்துகள் ” என்றார் .
லிங்குசாமி தன் பேச்சில் ” இந்தக் கதையை சசி என்னிடம் ஒன்றரை மணி நேரம் சொன்னார். அப்போது எனக்கு இருந்த சூழலில் என்னால் தயாரிக்க முடியாமல் போனது .
pichai 5
அப்போது  நான் சசியிடம்  ‘சாமியார் சொன்னதைக் கேட்டு மகன் பிச்சை எடுக்கப் போகிறான் என்ற விசயத்தை மக்கள் ஒத்துக் கொள்கிற மாதிரி பண்ணி விடுங்கள் . அது நடந்தால் படம் வெற்றி’ என்றேன் .
அப்படியே செய்து விட்டார் சசி . அசத்தல் வெற்றி .  நான் இதுவரை  விஜய் ஆண்டனி நடித்த எந்தப் படத்தையும் பார்த்தது கிடையாது . இந்தப் படம்தான் பார்த்தேன் . அவர் அட்டகாசமான நடிகர் ” என்றார்கள் .
தவிர மேலே பேசியவர்களில் பலரும் “பிச்சை எடுப்பதற்கான காலம் முடிந்து மீண்டும் பணக்காரனாக விஜய் ஆண்டனி கேரவானை நோக்கி நடக்கும் காட்சியில்,  
ஒரு விஜய்யை , ரஜினியை பார்ப்பது போல இருந்தது ” என்று  ஏகமனதாகச் சொன்னது , அந்த  உண்மைக்கு பலம் சேர்ப்பதாகவே இருந்தது  
pichai 4
மிகுந்த உணர்வுப் பூர்வமாக பேசிய கே ஆர் பிலிம்ஸ் சரவணன் ” இந்தப் படத்தை நான் வாங்கியபோது எழுந்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல .
என் அப்பாவே ‘என்னடா இது,   பிச்சைக்காரன் னு பேரு வச்ச படத்தை வாங்கி இருக்கியே/’ என்றார் . எனக்கு படம் பிடித்ததால் வாங்கினேன். எல்லாருடைய விமர்சனத்தையும் பொறுத்துக் கொண்டேன் . படம் வந்தது ஹிட் .
அப்போது கூட எனக்கு நிம்மதி இல்லை . இது ஒருவாரப் படமாக போய்விடுமோ என்று பயந்தேன் . அனால் இதோ வரும் வாரமும் படம் அப்படியே தொடர்கிறது .
இதில் இருந்து ஒன்று புரிகிறது . படம்  நல்லா இருந்தா ஓடும் . இல்லன்னா  அதை ஓட்ட வைக்க எல்லாம் முடியாது .  ” என்றார் .
pichai 2
விஜய் ஆண்டனி தன் பேச்சில் ” ஆடியோ ரிலீசிலேயே நான் சொன்னேன் . இது மாதிரி ஒரு படத்தை மீண்டும் என்னால் பண்ண முடியாது என்று . இப்போது அது எவ்வளவு உண்மை என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள்.
ஒரு இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய சசி சார் என்னை இந்தப் படத்தின் மூலம் இன்னும் உயர்த்தி இருக்கிறார் . அவருக்கு மீண்டும் நன்றி . சரவணன் இந்தப் படத்தை  அழகாக புரமோட் செய்தார் .
அவருக்கு நன்றி . எனக்கு எல்லாமுமாக இருந்து என்னை உயர்த்தும் என் மனைவி ஃபாத்திமாவுக்கு நன்றி ” என்றார் . 
சிறப்புரையாற்றிய இயக்குனர் சசி ” தமிழ் ரசிகர்களுக்கு முதல் நன்றி. அவர்களிடம் படத்தைக் கொண்டு போன பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி . சரியாக புரமோட் செய்த சரவணனுக்கு நன்றி . 
pichai 1
எனது வேறு எந்தக் கதையை விஜய் ஆண்டனி ஒத்துக் கொண்டு நடித்து இருந்தாலும் நான் அவருக்கு நன்றி சொல்லத் தேவை இல்லை . ஏனென்றால் அது ஒரு வழக்கமான வியாபாரமாக இருந்திருக்கும் .
ஆனால் என மனதுக்கு மிகவும் பிடித்த இந்தக் கதையை ஏற்று தயாரித்து நடித்ததற்கு மிக்க நன்றி ” என்று சொன்னவர் , 
படத்தில் நடித்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை மேடை ஏற்றி,  அவர்களை தேர்ந்தெடுத்த விதம் மட்டுமல்லாது, 
 படத்தில் அவர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கிச்   சொன்ன பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது . 
pichai 3
அவர் சொன்ன கடைசி விஷயம்தான் சிகரம் 
“இது ஓர் உண்மைக் கதை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என் படத்தில் வரும் அருள் செல்வகுமாரை விட , ஒரிஜினலான அந்த மனிதன் மிக உயர்ந்தவன் .
இந்தப் படத்தில் அருள் கலைச்செல்வன் அம்மா குணமாக வேண்டி 48 நாட்கள்  மட்டுமே பிச்சைக்காரனாக வாழ்கிறான் .
ஆனால் அந்த ஒரிஜினல் மனிதன் அம்மா குணமானால் பிச்சை எடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டு , அம்மா குணமான பிறகு.  ‘வருடத்துக்கு ஆறு மாதம்’ என ஐந்து வருடம் பிச்சை எடுத்து வாழ்ந்தான் .
எனக்கு அந்த மனிதன் யார் என்று தெரியவில்லை . இதைப் பார்த்தாவது அந்த மாமனிதன் என்னை சந்திக்க வந்தால் நான் ஜென்ம சாபல்யம் பெறுவேன் ” என்று உடல் சிலிர்க்க வணங்கினார் .
இவரிடம் இருந்து வரும் படம்,  எப்படி நல்ல படமாக இல்லாமல் போகும்?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →