மிதுன் மித்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரிக்க, வைபவ் , நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், நடிப்பில் ஷெரீப் எழுதி இயக்கி இருக்கும் படம்.
அடுத்தடுத்து பலரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு எரித்துக் கருக்கப்பட்ட நிலையில், கை வேறு கால் வேறு தலை வேறாக வெவ்வேறு இடங்களில் அட்டைப் பெட்டியில் வைத்து வீசப்பட, அதில் ஒரு பெட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே போடப்பட்டிருக்க,
போலீஸ் தமது துப்பு துலக்குதலின் ஒரு பகுதியாக ,
எரிந்த முகங்களைப் பார்த்து அதன் பழைய தோற்றத்தை வரைபவனும் , தடயம் , சூழல் இவற்றை வைத்து குற்றம் எப்படி யாரால் நிகழ்ந்து இருக்கும் என்று யூகித்து கிரைம் ஸ்டோரி எழுதித் தருவதில் வல்லவனும் , அடிப்பட்டலோ அதீத அதிர்ச்சி அடைந்தாலோ முப்பது நொடி முதல் ஒரு நிமிடம் வரை, நிலை மறத்தலுக்கு ஆளாகி பார்வை தெரியாத அளவுக்குப் பாதிக்கப்படுபவனுமான ஒருவனிடம் ( வைபவ்) , உதவி கேட்கின்றனர்
கொலை செய்யப்படுபவர்கள் யார் யார் ? காரணம் என்ன என்பதே படம் .
நல்ல கதையை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர்
நாயகனின் தொழில் முறைக் கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்கு புதுசு . சிறப்பாக காட்சிகளையும் அமைத்து இருக்கிறார்கள். கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் வைபவ்
அரோல் கரோலியின் இசை .. குறிப்பாகப் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம்.
பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு , மணிமொழியன் ராமதுரையின் கலை இயக்கம் , ரண்டி ராஜின் ஒலி வடிவமைப்பு, மேக்கப் , ஷெரீப்பின் ஷாட்கள் யாவும் சிறப்பு
வைபவ் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் . எனினும் நந்திதா ஸ்வேதா பிரம்மாதமாக நடித்து அசத்துகிறார் . அவருக்குள் இப்படி ஒரு நடிப்புத் திறமையா என்ற வியப்பு எழுகிறது. பாரட்டுகள் நந்திதா. பாராட்டில் இயக்குனருக்கும் ராயல்டி உண்டு .
எரிச்சலூட்டுகிறார் தான்யா ஹோப் . எல்லா காட்சிகளிலும் ஏதோ சாக்கடை நாற்றம் வீசும் தெரு வழியே சண்டைக்குப் போவது போல ஒரு முகபாவனை ! அழகா தெரிந்தால் மட்டும் போதாது . அழகா நடிக்கணும்
இது கூடப் பரவாயில்லை. திரைக்கதையில்தான் மரண சொதப்பல் சொதப்பி இருக்கிறார்கள் .
ஆரம்பத்தில் வைபவ் காட்டப்படும் விதம் தரும் உணர்வுக்கு நேர்மாறாக ஒரு பாடல் காட்சி , லவ் எபிசொட் , சினிமா ஷூட்டிங் என்று தேவை இல்லாத காட்சிகள் ஆரம்பத்திலேயே படத்தை ஆறப் போடுகிறது .
பிணங்களைக் கொன்று தவறாகப் பயன்படுத்தி உடல் உறுப்புகள் திருடும் சைக்கோ, விபத்தில் சிக்கிய சிறுமியை செத்துப் போனதாக எண்ணி மார்ச்சுவரிக்கு அனுப்பி, உண்மை தெரிய வரும்போது, மார்ச்சுவரியையே எரிக்கும் மருத்துவமனை நிர்வாகம் யாவும் சரியாக திரைக்கதையில் இணைக்கப்படாததால், தேவைக்கும் மேற்பட்ட பல விசயங்களை கசகசவென திணித்து கண்ணைக் கட்ட வைப்பது போலவே வெளிப்படுகிறது
கடைசி கடைசியில் ரொம்ப சூப்பர் என்று எண்ணி, படத்தில் சொல்லும் ஒரு டுவிஸ்ட் வேறு தேவையில்லாத ஆணி .
நிறைய வசனங்கள் ஒரு படத்தில் இருப்பது தப்பு இல்லை. என்ன பேசுகிறார்கள் என்பதுதான் முக்கியம் . விசாரணை , இணைப்புக் காட்சிகள் என்ற பெயரில் தேவை இல்லாத பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்படியாக.. அறமாக வந்திருக்க வேண்டிய படத்தை ரணமாக்கி… தவற விட்டு இருக்கிறார்கள் .
