நினைவெல்லாம் நீயடா @ விமர்சனம்

லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவ லக்ஷ்மி, ரெடின் கிங்ஸ்லி , மனோபாலா, மதுமிதா நடிப்பில் ஆதிராஜன் இயக்கி இருக்கும் படம். 

பள்ளி நாட்களில் காதலைச் சொன்ன நிலையில் , திடீரென்று அமெரிக்கா போய்விட்ட காதலியை,  அவளைப் பற்றி மேல் விவரங்கள் தெரியாத நிலையிலும் தொடர்ந்து காதலித்தபடி  அவளுக்காகக் காத்திருக்கிறான் ஓர் இசைக் கலைஞன் ( பிரஜன்) .

அதனால்  அவனது முறைப்பெண் ( மனிஷா யாதவ்) அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற விரக்தியில்  தற்கொலைக்கு முயல்கிறாள் . 

”அமெரிக்கக் காதலி வர வாய்ப்பில்லை. வந்தாலும் இந்நேரம் அவளுக்கு திருமணம் ஆகி இருக்கும்” என்று நண்பர்கள் வற்புறுத்திக் கூற   , அத்தை மகளை மணக்கிறான் .

கல்யாணத்துக்குப் பிறகும் காதலி நினைப்பில் மனைவியை எடுத்தெறிந்து பேச, அவள் மன நலம் பாதிக்கப்பட்டு மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறாள் . 

ஒரு நிலையில் ‘ காதலி’ வருகிறாள் , கல்யாணம் ஆகாத பெண்ணாக ! 

அப்புறம் நடந்தது என்ன என்பதே படம் . 

படம் முழுக்க அட்டகாசமான பாடலிசை மற்றும் பின்னணி இசை கொடுத்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா . இனிமை 

அதே போல ராஜா பட்டாசார்யாவின் ஒளிப்பதிவு அழகு. 

ரெடின் கிங்ஸ்லியின்  நகைச்சுவை ஆங்காங்கே பட்டாசு வெடிக்கிறது 

பள்ளிக் காதல், அது தொடர்பான காட்சிகள்  நடிக நடிகையர் பயன்படுத்தப்பட்ட விதம் யாவும் அருமை  அருமை . எல்லாம் முதல் பாதி வரைதான் . 

ஒரு படத்துக்குக் கூட செய்வினை பில்லி சூனியம் வைக்க முடியுமோ என்னவோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு குப்புறக் கவிழ்ந்து சுக்கு நூறாக உடைகிறது இரண்டாம் பகுதி . 

அமெரிக்கக் காதலி வருகிறாள் என்று சொல்லப் பட , ஒரு பெண்மணி வருகிறார் . வருவது கதாநாயகியின் அம்மா போல. ஏதோ சுவையான டுவிஸ்ட் இருக்கிறது போல என்று எண்ணினால் … அந்தக் காதலியே அவர்தான் சார் … !  தலை சுற்றி விடுகிறது நமக்கு.

அட்லீஸ்ட்..அந்தக்  காதலி அமெரிக்காவில் தசைச் சுருக்க நோய் அல்லது சீக்கிரம் வயதாகும் நோயால் பாதிக்கப்பட்டு விட்டார் என்று ஒரு வசனமாவது டப்பிங்கில் போட்டு இருக்கலாம் .

அது மட்டுமல்ல அதற்குப் பிறகும் காற்றில் கத்தி வீசும் கதையாக ஏகப்பட்ட திடீர் திடீர் திருப்பங்கள் . புளிப்பு மிட்டாய் இல்லாமல்  பார்ப்பது கடினம். 

காதல் கதைக்கு லாஜிக்தான் ஆக்சிஜன் . குறைந்த பட்சம் மூக்கைப் பொத்திக் கொண்டு சுவாசிக்க, ஒரு நாற்றம் பிடித்த காற்று அளவுக்காவது லாஜிக் வேண்டும் . ஆனால் இங்கே வீசுவது எல்லாம் விஷ வாயு என்னும் அளவுக்கு இரண்டாம் பகுதியில் அர்த்தம், லாஜிக் எதுவும்  இல்லாத காட்சிகள், திருப்பங்கள், வசனங்கள், நடிப்புகள்…. 

விட்டு விடுதலையானது போல இருக்கிறது வெளியே வரும்போது !

மொத்தத்தில் நினைவெல்லாம்  தீயடா .  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *