இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் , பங்கஜ் போரா தயாரிக்க, விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி நடிப்பில் சி எஸ் அமுதன் இயக்கி இருக்கும் படம் .
பிரபல நடிகர் ஒருவரின் வெறிபிடித்த ரசிகன் ஒருவன் ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து நடிகரைப் பற்றித் தவறாக எழுதும் பத்திரிகையாளரைக் கொல்கிறான். மாவட்ட ஆட்சியர் ஒருவரை மத வெறியன் ஒருவன் கொல்கிறான். இளம்பெண் ஒருத்தி சாதி மாறிக் காதலித்து கர்ப்பம் ஆனதாக எண்ணி சாதி வெறியன் ஒருவன் பெண்ணைக் கொல்கிறான்.
காரணத்தை ஆராய்ந்து வெளிப்படுத்த முயலும் மேற்படி தொலைக்காட்சி அதிபருக்கும் (நிழல்கள் ரவி) செய்தி ஆசிரியருக்கும் ( நந்திதா ஸ்வேதா) அரசியல் மிரட்டல் வருகிறது

ஒரு காலத்தில் இதே பத்திரிகையில் பணியாற்றிய சிறப்பான பத்திரிகையாளன் ஒருவன் ( விஜய் ஆண்டனி) , தன் பணிக் காலத்தில் ஒரு செய்திக்காக வெளியூர் போயிருந்த நிலையில் அவனது மனைவி, பிரசவ சமயத்தில் உரிய பராமரிப்ப்பு இன்றி இறந்து போய்விட , அந்தக் குற்ற உணர்ச்சியில் முதல் மகளோடு கல்கத்தா போய் அவன் வாழ்ந்தபடி குடிகாரனாக மாறி இருக்க, அவனை கல்கத்தா போய் அழைத்து வருகிறார் பத்திரிக்கை ஆசிரியர்
வந்தவன் மீண்டும் பணியில் இறங்க, நடிகனுக்கான ரசிகன், மத உணர்வுக்காக பக்தன், சாதி உணர்வுக்காக சாதி வெறியன் என இவர்கள் செய்யும் கொலைகளின் உண்மையான நோக்கம் தேடி அலையும்போது அது வேறு கோணங்களை காட்டுகிறது.
வேறு காரணங்களுக்காக சம்மந்தப்பட்ட நபர்களைக் கொல்வதற்கு , சாதி மத கருத்தியல் ரீதியாக எதிர்தரப்பில் இருக்கும் உணர்ச்சிவசப்படும் நபர்களை வைத்து இந்தக் கொலைகள் செய்யப்படுவதையும் கொலை செய்பவர்களுக்கே உண்மையான காரணம் தெரியாது என்பதையும் இங்கே கொலை செய்யப்படுபவர்கள் மட்டுமின்றி கொல்பவர்களும் கூட பாதிக்கப்படுபவர்கள் என்பதும் புரிகிறது ஆணவக் கொலைகள் போல இவை வெறுப்புக் கொலைகள் !

இப்படி….
குற்றவாளிகளிடம இருந்து பணம் பெற்றுக் கொண்டு நல்லவர்கள் அப்பாவிகள் பாதிக்கப்பட்டவர்களைக் கொல்ல , மாற்றுக் களத்தைச் சேர்ந்த உணர்ச்சிவசப்படும் நபர்களைப் பயன்படுத்தும் நபர் , அமைப்பு , எது என்பதில்….. முற்றிலும் எதிர்பாராத ஒரு கதையைச் சொல்லி, அதன் பின்னர் படத்தை காமர்சியலாகக் கொண்டு போய் முடிக்கிறார்கள் .
இதுவரை தமிழ் சினிமா கண்டிராத கதை. பாராட்டுகள்.
ஒரு பத்திரிகையாளனின் பார்வை எப்படி மாநிலம் நாடு உலகம் என்று பரந்து பட்டுக் கவனிக்கும்படி இருக்க வேண்டும்.. .
பிரசவ நேரத்தில் உடன் இருக்க முடியாத காரணத்தால் மனைவியை இழந்த குற்ற உணர்ச்சியால் நொந்து குடிகாரனாகி வாழ்வது, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளனாக ஆக்ரோஷப் பாய்ச்சல் நடத்துவது, அதிரடி நாயகனாக குதிரை ஏறுவது என்று இயல்பாக நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

பத்திரிக்கை ஆசிரியராக நிழல்கள் ரவி இளம் செய்தி ஆசிரியராக நந்திதா ஸ்வேதா, பத்திரிக்கையாளராக இருந்த கணவன் கண் முன்னால் கொலை செய்யப்பட்டதைப் பார்த்த நிலையில் நொந்து போய், புதியதொரு பிரச்னையோடு வாழும் ரம்யா நம்பீசன்… அனைவரும் இயல்பு
நம்பியார் ஆகி இருக்கிறார் மகிமா. புன்னகைக் கத்திகளை சொருகியபடி அவர் விஜய் ஆண்டனியிடம் பேசும் காட்சிகள் அருமை
பத்திரிக்கையாளர்கள் நேர்மையாக நடந்து கொள்ளவே விரும்பினாலும், விலை போகும் பத்திரிகை முதலாளிகள் விடுவதில்லை என்ற வசனம்.. தில்!
நாயகனின் மகளுக்கு வைத்திருக்கும் அறம்பாவை என்ற பெயர் அற்புதம்

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கான பூடகமான திரில் தன்மையைத் தருவதில் அற்புதமாக வெற்றி பெற்று இருக்கிறது . கண்ணன் நாராயணனின் பின்னணி இசையும் அபாரம்.
செத்துப் போன நண்பன் பற்றி மீண்டும் மீண்டும் டாஸ்மாக் வரை விஜய் ஆண்டனி பேசும் காட்சிகளிலும் இடைவேளைக்குப் பிறகும் எடிட்டிங், கொஞ்சம் முஷ்டி உயர்த்தி இருக்க்கலாம்
பத்திரிகை அலுவலக உருவாக்கம் மற்றும் இயங்கும் விதம் குறித்த யதார்த்தமின்மை, விஜய் ஆன்டனி கதாபாத்திரத்தின் தொழில் சிறப்பு பற்றிய காட்சி ரீதியான விளக்கம் இன்மை, வசனங்களால் இட்டு நிரப்பும் வேலை, கார்ப்பரேஷன் அதிகாரிகள்- ஆன்ட்டி டெர்ரரிஸ்ட் போர்ஸ் பற்றிய தெளிவின்மை , டிராக்கிங் பற்றிய குழப்பங்கள் , ஹார்ட் டிஸ்க்களுக்காக வீடு காலி செய்வது போல் கட்டில் பீரோ மெத்தை கணக்காக தூக்கிக் கொண்டு அலைவது , வீரியமுள்ள பத்திரிகைக்காரனுக்கும் ஆக்ஷன் ஹீரோவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத தன்மை இப்படி பல குறைகள் இருந்தாலும்
கொஞ்சம் சின்சியராக எழுதி இருந்தால் இந்த அற்புதமான கதைக்கு இன்னும் சிறப்பான தெறிக்க விடும் திரைக்கதை எழுதி இருக்கலாமே என்ற ஏக்கம் வந்தாலும் கூட

இந்த கதை ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி.. எவன் போதைக்கோ நீங்க ஊறுகாய் ஆகிடாதீங்க என்று சாதி மதம் வெறி பிடித்தோரை எச்சரிக்கும் விதம் ஆகியவற்றால்….
ரத்தம்……. ஓ(கோ) பாசிட்டிவ்