வேலை இல்லா பட்டதாரி @விமர்சனம்

stills of vip
தனுஷின் 25ஆவது படமாக,  அவரது சொந்த நிறுவனமான உண்டர்பார் சார்பில் தயாரிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து ஒளிப்பதிவு இயக்கத்தில் வந்திருக்கும் படம் வேலை இல்லா  பட்டதாரி . தியேட்டர்களுக்கு வேலை கொடுக்குமா படம் ? பார்க்கலாம்அன்பும் கண்டிப்புமான அம்மா, கண்டிப்பும் அன்புமான அப்பா , தன்னை விட மூன்று வயது இளையவன் என்றாலும் வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்து குடும்பத்துக்கு உதவி,  பெரிய காரெல்லாம் வாங்கி விட்ட தம்பி…இவர்களுக்கு நடுவில் பொறியியல் பட்டப் படிப்பு படித்து விட்டு,  படிப்புக்கு தகுந்த வேலைக்குதான் போவேன் என்று தீர்மானித்து , வேலைக்கான இன்டர்வியூக்களிலேயே ஊழல் செய்யச் சொல்லும் கம்பெனிகளை புறக்கணித்து,  தண்டச் சோறு பட்டம் வாங்கி,  வீட்டுக்கு காய் மற்றும் கறி வாங்கித் தருவதும்  அம்மாவுக்கு துணி துவைக்க உதவுவதுமான  வேலைகளை எல்லாம் செய்து  , பக்கத்து வீட்டு ஆண்ட்டியுடன் உட்கார்ந்து மத்தியான நேர சீரியல்கள் பார்த்து அதில் வரும் வில்லிகளை கரித்துக் கொட்டி …இப்படியாக ஒரு ‘சடை’ வாழ்க்கை வாழும் வேலையில்லாப் பட்டதாரிதான் அந்த இளைஞன் (தனுஷ் ).

dhanush amalapaul in vip
வாய்ப்பும் வேலையும்

பக்கத்து வீட்டுக்கு குடிவரும் ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசும் மாசம் இரண்டு லட்ச ரூபாய் சம்பாதிப்பவளுமான அந்த இளம்பெண்ணுடன் (அமலா பால்) அவனுக்கு பரிச்சயம் ஏற்பட்டு நட்பாகிறது. வீட்டில் அப்பா அம்மாவின் ஆறுகால அர்ச்சனைகள்  , தம்பியின் சைலன்ட் அயோக்கியத்தனங்கள் போன்றவை காரணமாக மனம் புழுங்கும் அவன் மீது,  அந்த பெண் பொழியும் ஆறுதல் காதலாகிறது.

அப்பாவுக்கும் அவனுக்குமான சண்டையில் அம்மா அவனை அடித்து விட, அதனால் அவன் அம்மாவிடம் கோவித்துக் கொண்டு பேசாமல் இருக்க, உடம்பு சரியில்லாத அம்மாவை பார்த்துக் கொள்ளச்  சொல்லி விட்டு அப்பாவும் தம்பியும் வெளியூர் போக , ஒரு நிலையில் அம்மாவிடம் இருந்து வரும் அழைப்புகளை தொடர்ந்து அவன் புறக்கணிக்க, அதனால் பேரிழப்புக்கு ஆளாகிறது குடும்பம் .

நொறுங்கிப் போகும் நாயகன் அதில் இருந்து மீள்கிறான்.  அம்மா செய்த ஒரு உதவியால் பெரிய நிறுவனத்தில் அவனுக்கு புராஜக்ட் என்ஜினீயர் வேலை கிடைக்கிறது. அங்கே போனால் பண முதலைகள்,  அரசியல் ஆமைகள்,  ரவுடிப் பட்டாளம் எல்லாம் இவனை ஜெயிக்க விடாமல் வீழ்த்த முயல அதில் இருந்து அவன் மீண்டும் வென்றானா இல்லையா என்பதுதான் வேலை இல்லா  பட்டதாரி .

stills of vip
அதான் வேலை இருக்கு போலயே….

படத்தின் முதல் பலம் .. வேறு யார் ? தனுஷ்தான் !

தனுஷ் மிகச் சிறந்த நடிகர் என்பது எப்போதோ முடிவான ஒன்று . ஆனால் இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் உயர்ந்து இருக்கிறார் . கோபம் , ஆத்திரம் , சோகம் , இயலாமை , தில், வெறுப்பு , சலிப்பு போன்ற உணர்வுகளில் பின்னிப் பெடல்  எடுக்கிறார். நடனத்தில் வழக்கம் போல நட்டுவாங்கம்! முக்கால் வாசி படம் ஓடிய நிலையில் ஒரு காட்சியில் அது வரையிலான தனது வாழ்க்கைச் சம்பவங்களை ஒரே ஷாட்டில் மிக நீண்ட வசனமாக பேசும் இடத்தில் தியேட்டர் சும்மா அல்லுசில்லு ஆகிறது.

அமலா பால் இயல்பாக நடித்து இருக்கிறார் . அம்மாவாக வழக்கம்போல அசத்தி இருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். பண்பட்ட நடிப்பு!. சுப்பிரமணியபுரம் படத்தில் பார்த்த அதே வயதான கெட்டப்பில் சமுத்திரகனி,  தனுஷின் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். அவரது கேரக்டருக்கு டப்பிங்கில் சேர்த்து இருக்கும் பல அவுட் ஆஃப் ஃபிரேம் வசனங்கள் அருமை

படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் எழுதி இருப்பவர் தனுஷ்தான். “போனாய் தனியாக.! வந்தாய் நாமாக !” போன்ற வரிகளில் அசத்தி இருக்கிறார் ‘Poetu’  தனுஷ் . ஓய் திஸ் கொலைவெறி பாணியில் வரும் ஒரு பாட்டில்’ தமிழ் ஈஸ் மை மதர் டங்கு’ என்கிறார் .அனிருத்தின் இசையானது  பாடல் பின்னனி இரண்டிலும் ஒகே . ஒரு பாடலில் “அட்ரா அவள.. ஒதடா அவள.. வெட்றா அவள … ” பாட்டு அப்படியே இருக்கிறது.

கட்டுமான இடத்து சண்டைக் காட்சிகளில் வேல்ராஜின் கேமரா கவனம் ஈர்க்கிறது என்றால் அவரது திரைக்கதை இயக்கம் படம் முழுக்கவே கவர்கிறது. ஒரு வெகுஜன பிரச்னையை கதையாக எடுத்துக் கொண்டு இயல்பான காட்சிகள் பின்னப்பட்ட திரைக்கதையை கொடுத்து ஒரு நிலையில் அதில் பக்கவாக சினிமாத்தனங்களையும் கமர்ஷியல் விசயங்களையும் கோர்த்து தெளிவாக ஒரு வணிக சினிமாவை கொடுத்துள்ளார் இயக்குனர் வேல்ராஜ்.

dhanush in vip
வேலைக்’கார்’

கத்தியை வீச வரும் ரவுடியை தண்ணீர் பைப்பை வைத்து சமாளிப்பது நல்ல உத்தி. கட்டுமானக் கம்பெனி காட்சிகள் பலருக்கும் தெரியாத விசயங்களை வெளியே சொல்லி மிரட்டுகிறது. . பேஸ்புக் சமாச்சாரங்கள்… அந்த பகுதி கதைக் களம்… இவை எல்லாம் நிஜமான வேலை இல்லாப் பட்டதாரிகளை கவரும்.

ஆழ்வார்பேட்டை என்பதற்கு பதில் ஆள்வார் பேட்டை என்று போட்டு டைட்டிலிலும் தமிழ்க் கொலை செய்வதை தவிர்த்து இருக்கலாம் .

(V)வேலை (I)இல்லாப் (P)பட்டதாரி ….  (V.I.P ) வி.ஐ.பிதான் 

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————–—-

தனுஷ் , வேல்ராஜ் , சமுத்திரக்கனி

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →