ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் , வடிவேலு , ரித்திகா சிங் நடிக்க பி.வாசு இயக்கும் சிவலிங்கா படத்தில்
இரண்டவது கதாநாயகனாக நடிக்கிறார் பி வாசுவின் மகன் சக்தி வாசு .
படம் பற்றியும் அதில் தனது கதாபாத்திரம் பற்றியும் கூறும் சக்தி ”’ இந்தப் படத்தில் நான் ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் .
என்னோட நடிப்பு கேரியர்ல ஆரம்பம் முதலே இஸ்லாமிய கதா பாத்திரங்கள் கூடவே வருது . தொட்டால் பூ மலரும் படத்துல அப்படி ஒரு கெட்டப்பில் ஆடி இருப்பேன் . நினைத்தாலே இனிக்கும் படத்துலயும் அப்படிதான்.
இந்த சிவலிங்கா படத்தில் எனது கதாபாத்திரம் கொலை செய்யப்பட அதை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக லாரன்ஸ் மாஸ்டர் வருவார் .
மிக ஸ்டைலாக அசத்தலாக இதுவரை நாம பார்க்காத மாதிரி அவர் நடித்து இருக்கிறார் . ரித்திகா சிங்கும் அட்டகாசமா நடிச்சு இருக்காங்க
எனது கதாபாத்திரத்தின் வாழ்க்கை காதல் இவையும் படத்தில் விவரிக்கப் படுகிறது. படத்தின் இரண்டாம் பகுதியில் எனக்கும் ஒரு மாஸ் சாங் இருக்கு
அப்பா கன்னடத்தில் ஷிவலிங்கா படத்தை ஆரம்பிக்கும்போது டிஸ்கஷனில் நானும் இருந்தேன். இந்த கேரக்டருக்கு யாரை போடலாம் என்று அப்பா என்னை பக்கத்தில் வச்சுகிட்டே டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தார் .
நான் அப்பா கிட்ட ” எப்படி ஆப்த மித்ரா படத்தை தமிழ்ல சந்திரமுகின்னு பண்ணீங்களோ அப்படி இந்த படத்தையும் பண்ணுவீங்க .
கன்னடத்துல நான் இப்ப நடிச்சாதானே தமிழ்ல இன்னும் நல்லா பண்ண முடியும்?’ னு கேட்டு வாய்ப்பை வாங்கினேன்.
படம் கன்னடத்துல செம ஹிட் . எனக்கும் நல்ல பேரு . அதனால தமிழ்ல அப்பா என்னையே போட்டார் .
இதுவரை அப்பா என் நடிப்பை பெரிசா பாராட்டுனது இல்ல . நான் நடிச்ச முதல் படமான தொட்டால் பூ மலரும் அப்பாவுக்கு அம்பத்தி நாலாவது படம்.
அந்த படத்துல என் நடிப்பை பத்தி சொல்லும்போது ”முதல் படம் அதனால ஒகே ” என்றார் . ஆனா இந்தப் படத்துல என் நடிப்பை அப்பா மனப்பூர்வமான பாராட்டினார்.
இந்த கதையில புறா முக்கியப் பங்கு வகிக்குது . கன்னடத்துல நடிச்ச அந்த புறா என் கூட ரொம்ப பழகிருச்சி . அதனால அந்த புறாவை நானே வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்.
தமிழ்ப் படத்துக்கு வேற புறா வந்தது . ஷூட்டிங் முடிஞ்சதும் அதை கொண்டுட்டுப் போய்ட்டாங்க . ” என்றவரிடம் ,
“வெண்புறா பற்றி சொன்னது போதும் . சேர்ந்து நடிச்ச பெண் புறா பத்தி சொல்லுங்க ” என்றேன்.
” கன்னடத்துல நடிச்ச புறா பேரு சாரா . அதனால தமிழ்ல நடிக்க வந்த புறாவுக்கும் சாரான்னு பேரு வச்சோம் . என்ன ஆச்சர்யம்னா படத்துல எனக்கு ஜோடியா நடிச்ச நடிகை பெரும் சாராதான் .
சாரா சாரான்னு பாட்டு ஒன்னு இருக்கு . நான் புறாவைப் பார்த்து அந்த பாட்டைப் பாட, அந்தப் பொண்ணு அதைப் பார்த்து பாடறதா நினைச்சுருச்சி (நம்பிட்டோம் சக்தி ) அப்புறம் புரிய வைச்சேன் ” என்றார் (ம்ம்ம்ம்… இதையும் நம்பிட்டோம்)
“ஹீரோவா நடிச்சுட்டு இருந்த நிலையில் இப்படி செகண்ட் ஹீரோவா பண்றது உங்களுக்கு பின்னடைவு இல்லையா ?” என்றேன்
“நிச்சயமா இல்லை சார் . நான் ஹீரோவா நடிச்ச படங்களை விட இது பெரிய படம் . தவிர என கேரக்டருக்கும் நல்ல முக்கியத்துவம் இருக்கு .
இந்தப் படத்துக்கு அப்புறம் நல்ல கதை நல்ல கேரக்டர்னு வெயிட்டான படங்களில் தனி ஹீரோவா நடிக்கிற வாய்ப்பு வரும் .
தவிர என்னைப் பொறுத்தவரை கதையும் நல்ல கேரக்டரும் அந்த கேரக்டருக்கு கதையில் முக்கியத்துவமும் இருந்தா வில்லனா நடிக்கக் கூட தயங்க மாட்டேன் . இந்த பக்குவம் முன்ன இல்ல.
இருந்திருந்தா , என்னை ஹீரோவா போட்டு களவானி படத்தை எடுக்க முடிவு பண்ணி என் கிட்ட வந்து ஆர்வமா கதை சொன்ன சற்குணம் சார் கிட்ட
” தப்பா எடுத்துக்காதீங்க . உங்க கதை எனக்கு புரியவே இல்லன்னு சொல்லி அனுப்பி இருப்பேனா ? இப்ப அந்த பக்குவம் வந்துருச்சு. இந்த சிவலிங்கா படம் எல்லாருக்கும் நல்லதா அமையும் ” என்கிறார் .
வாழ்த்துகள் சக்தி