சென்னையில் இருந்து வடக்கும் தெற்கும் மேற்குமாக நீளும் தேசிய நெடுஞ்சாலைகளில், காரில் செல்வோரிடம் லிஃப்ட் கேட்டு ஏறும் ஒரு சைக்கோ கொலைகாரன்,
அடுத்ததடுத்து ஆறு பேரைக் கொல்கிறான். குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆந்திர எல்லையோர தமிழகத் தொகுதியை சேர்ந்த ஒரு அடாவடி ரவுடி எம் எல் ஏ (அருண்), வனப்பகுதியில் மரம் வெட்டிக் கடத்துவதை முக்கிய வேலையாகக் கொண்டிருக்கும் நிலையில்,
அதைத் தடுக்கும் பணியில் அவருக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் (பெனிட்டோ ஃபிராங்க்ளின் ) பகை வலுக்கிறது. கடத்தலைத் தடுக்கும் சண்டையில் எம் எல் ஏவின் ஆள் ஒருவரை,
இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்ல நேரிடுகிறது .
எனவே அந்த வழக்கில் இருந்து போலீஸ் அதிகாரியை விடுவிக்கும் உயர் அதிகாரி, அவரிடம் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் பணியை ஒப்படைக்கிறார் .
சம்மந்தப்பட்ட தினத்துக்கு அடுத்த நாள் அந்த போலீஸ் அதிகரிக்கும் அவரது காதலிக்கும் ( சனம் ஷெட்டி) காதலியின் சொந்த ஊரான ஆந்திர எல்லை கிராமம் ஒன்றில் உள்ள கிறித்தவ தேவாலயத்தில்,
திருமணம் நடக்க இருக்கிறது . எனவே அவர் அங்கு கிளம்புகிறார் .
இதற்கிடையே மேற்படி எம் எல் ஏவுக்கு சொந்தமான கார் ஒன்று, சென்னையில் சர்வீஸ் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு மனு தாக்கல் செய்யும் வேலையில் இருக்கும் எல் எம் ஏ,
கோவிலுக்கு அந்த ராசியான காரில்தான் போக வேண்டும் என்று விரும்புகிறார் .
எனவே அந்த சர்வீஸ் சென்டர் உரிமையாளர், காரை உடனடியாக மாலை ஐந்து மணிக்குள் கொண்டு சேர்க்கும் பொறுப்பை, தனது ஊழியரின் தம்பியிடம் (கார்த்திக் யோகி ) ஒப்படைக்கிறார் .
அந்தத் தம்பியும் காரோடு எம் எல் ஏவின் ஊருக்குக் கிளம்புகிறான் .
வழியில் போலீஸ் அதிகாரியின் கார் ரிப்பேர் ஆக , டிரைவர் கொண்டு போகும் எம் எல் ஏவுக்கு ராசியான விண்டேஜ் காரில் அந்த போலீஸ் அதிகாரி ஏறுகிறார் .
பயணம் போகையில் , வழியில் வேறு சிலர் அந்தக் காரில் ஏறுகிறார்கள்.
இதனால் பயணம் தாமதம் ஆகிறது . சரியான சமயத்தில் போய்ச் சேரவில்லை என்றால் போலீஸ் அதிகாரியின் கல்யாண முகூர்த்த நேரம் முடிந்து போய்விடும் .
நான்கு மணிக்குள் போய்ச் சேரவில்லை என்றால், அடாவடி எம் ளே ஏ , காரைக் கொண்டு போகும் டிரைவரை கொன்றே விடுவார்.
அதுவும் போலீஸ் அதிகாரி காரில் ஏறியதால்தான் தாமதம் என்று தெரிந்தால் பழைய இழப்பை மறக்காத அவர், போலீஸ் அதிகாரியையும் சும்மா விட மாட்டார் .
இந்த நிலையில் சைக்கோ கொலைகாரனும் காரில் ஏறுகிறான். அப்புறம் நடந்தது என்ன என்பதே சவாரி .
ஓர் எளிய கதையை எடுத்துக் கொண்டு, எல்லா கதாபாத்திரங்களையும் சரியாகக் கோர்த்து எந்தக் கதாபாத்திரமும் வேஸ்டாக இல்லாமல் (சைக்யாட்ரிஸ்ட் டாக்டர தவிர !) ஒரு சின்ன ஏரியாவுக்குள் ,
நுணுக்கமாக மடக்கி மடக்கி காட்சிகளை அமைத்துக் கொண்டே போகிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். டிசைன் என்ற வகையில் நைஸ் .
படத்தின் முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் செழியன்தான் . அடேயப்பா … இந்தக் கதையில் இந்த லோக்கேஷன்களில் இதற்கு மேல் ஷாட்களே வைக்க முடியாது என்ற அளவுக்கு அதி அட்டகாசமான வொர்க்!
இதற்கு மேல் யாராவது இப்படி ஒரு ஷாட் வைக்கலாம் என்று இந்தப் படத்துக்காக மூன்று மூன்று ஷாட்கள் சொன்னால், அவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு என்று தைரியமாக அறிவிக்கலாம் .
அப்படி ஒரு முழுமையான வொர்க் செழியன செய்து இருப்பது !
எங்கே என்ன மாதிரி ஷாட் வைக்க வேண்டும் , வண்ணங்கள் , மற்றும் இருள் ஒளிப் பயன்பாடு , காட்சியின் மூட் என்று எல்லா வகையிலும் அதி அற்புதமான பங்களிப்பு . . விருது கொடுத்து வியக்க வேண்டிய ஒளிப்பதிவு .
இரண்டாவது ஹீரோ இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் . எளிய ஒலிகளால் பின்னணி இசையில் பிரம்மிக்க வைக்கிறார் . கிடைத்த ஒரு பாடலையும் படத்தின் மூடுக்கு என்று சிறப்பாகப் படைத்து இருக்கிறார் .
அச்சு அசப்பில் மஃப்டியில் இருக்கும் ஒரு நிஜ ஏ எஸ் பியைப் போலவே இருக்கும் பெனிட்டோ, அதிகம் படிக்காத மனிதனின் பாசாங்கு இல்லாத குணாதிசயத்தை வெளிப்படுத்தும் கார்த்திக் யோகி ,
வெள்ளை சட்டை போட்டு எம் எல் ஏ வாக கெத்து நடை நடக்கும் அருண், மாதிரி மற்றும் நிஜ சைக்கோகளாக வரும் மதிவாணன் ராஜேந்திரன் மற்றும் டி எம் கார்த்திக் என்று ,
படத்தில் வரும் பெரும்பாலான நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
யார் சைக்கோ என்பதற்கான டுவிஸ்ட் அற்புதம் . கழுத்தை அறுத்து ஒருவனை கொன்று விட்டு, மருத்துவ ரீதியாக பேசி போலீஸ் அதிகாரியையே நம்பவைக்கும் இடமும் கில்லி கில்லி !
படத்தில் சில நல்ல நகைச்சுவைக் காட்சிகள் இருக்கின்றன . ஆனால் அழுத்தமாக சொல்லாமல் மேம்போக்காக சொல்லி அவற்றின் வீரியத்தை அவர்களே குறைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு சீரியசான காட்சி பரபரப்பாக போய்க் கொண்டு இருக்கும்போதே, காமெடி என்ற பெயரில் எதையாவது ஜஸ்ட் லைக் தட் எதையாவது பேசி, திகில் உணர்வை நீர்த்துப் போகச் செய்கிறார்கள் .
ஏ எஸ் பி காரிலேயே சைக்கோ ஏறுகிறான் என்பதை இயக்குனர் பெரிய விசயமாக மனதுக்குள் ஃபீல் பண்ணி இருக்கிறார். ஆனால் காட்சியில் அது வரவில்லை .
தவிர ஏ எஸ் பியும் துப்பக்கயோடே இருப்பதால் யாருக்கு என்ன ஆகுமோ என்று , பெரிதாக பயம் வரவில்லை
தவிர ஒரு நிலையில் ஏ எஸ் பி , டிரைவர் , சைக்கோ என்ற மூன்று பேரோடு — கார் போகும் காட்டு வழி தார் ரோடு போலவே – திரைக்கதையும் குறுகிப் போய்விடுகிறது.
அதிக பட்சம் எம் எல் ஏ தான் சைக்கோவை கிராஸ் செய்ய முடியும். அப்படி சைக்கோ அவரை கொன்று விடுவானோ என்று பதறும் அளவுக்கு எம் எல் ஏ நல்லவரும் இல்லை . செத்தாதான் சாகட்டுமே !
ஏ எஸ் பி கல்யாணத்துக்குப் போக முடியாவிட்டலும் பரவாயில்லை அடுத்த முகூர்தததுகு மாத்திக் கொண்டால் போச்சு . சிலர் மட்டுமே கலந்து கொள்ள இருக்கும் எளிய கல்யாணம்தான் அது .
இப்படி திரைக்கதை ரீதியாக பல பின்னடைவுகள் .
பலமில்லாத நல்ல அப்பாவிகளைக் கொல்ல முயலும் சைக்கோ , அவனைத் பின் தொடரும் போலீஸ் அதிகாரி, குறிப்பிட்ட நேரத்துக்குள் டிரைவரோ ஏ எஸ் பி யோ போய் சேராவிட்டால் ஏற்படும் பெரிய விளைவுகள் ,
சோகங்கள் ஆபத்துகள்…குறிப்பிட்ட நேரத்துக்குள் சைக்கோவை பிடிக்காமல் தாமத்தித்தால் மாபெரும் விபரீதங்கள் நடக்க வாய்ப்பு….
என்று இன்னும் மெனக்கெட்டு கதை திரைக்கதையை இன்னும் விசாலமாக அமைத்து பரபரப்பு ஏற்படுத்தி இருந்தால் ..
சவாரி சவாலான பயணமாக இருந்திருக்கும் .