ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ மற்றும் ஏ பார் ஆப்பிள் சார்பில் இயக்குனர் அட்லீ தயாரிக்க,
ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் ஐக் இயக்கி இருக்கும் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற . தியேட்டர் கதவை திறக்கலாமா ? பார்க்கலாம் .
தொடர்ந்து வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தில் பிறந்து , ஒழுங்காக வாடகை கொடுக்கும் நிலையிலும் வீட்டு உரிமையாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு ,
அடிக்கடி வீடு மாறி, அப்பாவின் மரணத்தில் கூட, வாடகை வீடு என்பதால் அசிங்கப்படுத்தப்பட்டு ,
ரியல் எஸ்டேட் தொழில் செய்தபடி அம்மா பார்வதியுடன் (ராதிகா) வசித்து வருபவன் வாசு(ஜீவா).
ஒரு பாசமுள்ள மாமா ( இளவரசு) , மாமாவுக்கு ஒரு மகள் . அந்த மகளை வாசுவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அத்தையின் ஆசை .
ஆனால் அந்த மாமன் மகளும் வாசுவின் நண்பன் சூரணமும் ( சூரி) காதலிக்கிறார்கள்
விலைமதிப்புள்ள வீடுகளை, பேய் இருப்பதாக கதை கட்டி நம்ப வைத்து குறைந்த விலைக்கு பேசி, பின் அங்கே யாராவது போலி சாமியாரை தங்க வைத்து,
மகான் இருந்த வீடு என்று சொல்லி அதிக விலைக்கு விற்பது உள்ளிட்ட பல தகிடுதத்தங்களும் செய்பவன் வாசு .
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்வேதா என்ற பெண்ணை சந்திக்க (ஸ்ரீ திவ்யா) , அவளுக்கு வாசு மீது காதல் வருகிறது .
அம்மாவுக்கு வாங்கித் தருவதாக சொல்லி இருந்த பங்களாவையும், அப்படி பேய்க் கதை சொல்லி விலை குறைத்து, தானே வாங்குகிறான் வாசு .
பங்களாவுக்குக் குடி போனால், வாசுவுக்கு வீட்டை விற்றவரின் அப்பாவின் இரண்டாவது மனைவியின் குடும்பம் பங்களாவில் இருக்கிறது . ” எங்கள் பங்கை நாங்கள் விற்கவில்லை” என்கிறது .
ஸ்வேதாவின் அப்பா (தம்பி ராமையா ), அம்மா (தேவதர்ஷினி) , ஸ்வேதா , ஸ்வேதாவின் தங்கை மற்றும் பாட்டி அடங்கிய குடும்பம்தான் அது .
வாசுவுக்கும் ஸ்வேதாவின் அப்பாவுக்கும் சண்டை வருகிறது .
வாசு மற்றும் ஸ்வேதா நெருக்கம் பார்த்து வாசுவின் அத்தை கோபப்பட, மாமா குடும்பம் பங்களாவை விட்டுப் போகிறது .
தொடர் சண்டையில் ஸ்வேதாவின் அப்பாவும், கோபப்பட்டு குடும்பத்தோடு வெளியேறுகிறார்
இந்த நிலையில் உண்மையிலேயே அந்த பங்களாவில் சங்கிலி ஆண்டவர் (ராதாரவி) என்பவரது ஆவியும் அவரது மகனான ஒரு சிறுவன் ஆவியும் இருப்பது வாசுவுக்கும் சூரனத்துக்கும் தெரிய வருகிறது .
இருவரையும் மிரட்டுகின்றன ஆவிகள் .
மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஆவி விரட்டும் வேலையை பகுதி நேரமாக செய்யும் ஈ.பி. ராஜேஸ்வரி ( கோவை சரளா) மூலம், வாசுவுக்கு ஆவியின் கதை தெரிய வருகிறது .
மனைவி மகனை இழந்த நிலையில் ஒண்டிக்கட்டையான சங்கிலி ஆண்டவரை , சொத்துக்கு அவசர ஆசைப்பட்டு,
தம்பிகள் அவர்தம் மனைவியர், தங்கை அவளது கணவன் ஆகியோர், கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.
விஷயம் அறிந்து சங்கிலி ஆண்டவரே தற்கொலை செய்து கொண்ட பிறகும், அவர் தூங்குவதாக எண்ணி பிணத்தை தலையணையில் அமுக்கி ‘கொல்’கிறார்கள்.
அவர்களின் சுய ரூபம் அறிந்த ஆவி, அதன் பிறகும் கூட அவர்கள் ஒற்றுமையாக பங்களாவில் வாழாமல், அவர்களுக்குள் சண்டை போட , எல்லோரையும் கொல்கிறது.
இதை எல்லாம் கண்டு பிடித்துச் சொல்லும் ராஜேஸ்வரி , ”இந்த வீட்டில் இருந்து இப்போது கோவித்துக் கொண்டு போன நீங்கள் எல்லோரும் இங்கே வந்து ஒற்றுமையாக தங்கினால் ஆவிகள் போய் விடும்” என்கிறார் .
ஒத்துக் கொண்டு எல்லோரோடும் வாசு வர, அப்போதும் ஆவியை நம்பாத ஸ்வேதாவின் அப்பா, ஒரு இரவில் எல்லோரும் வீட்டில் தங்கும் நிகழ்வில்,
சண்டையைப் பெரிதாக்கி ஒரேயடியாக வாசுவையும் ஸ்வேதாவையும் பிரிக்கும் நோக்கத்தோடு பங்களாவுக்கு வருகிறார்
அந்த வகையில் ஸ்வேதாவின் அப்பா பிரச்னை செய்யும்போது என்ன நடந்தது என்பதே இந்த சங்கிலி புங்கிலி கதவ தொற.
முன்பே சந்தானம் நடித்து வெளிவந்த தில்லுக்கு துட்டு ,கார்த்தி நடிப்பில் வந்த காஷ்மோரா ஆகிய படங்களின் அடிப்படைக் கதைதான் இந்தப் படத்தின் கதையும் .
என்றாலும் கூட,
வீட்டு உரிமையாளர்களால் தொடர்ந்து அல்லல் பட்ட வாடகை வீடு வாழ் இளைஞனின் சொந்த வீட்டுக் கனவு, என்kiற கதைப் போக்கில் கவர்கிறார், எழுதி இயக்கி இருக்கும் ஐகே .
(ஆனால் அதை சொன்ன விதத்தில்தான் கொஞ்சம் நாடகத்தனம். யதார்த்தத்தில் நடக்கும் விசயத்தை படமாகும் போது இருக்க வேண்டிய அழுத்தம் மிஸ்ஸிங் )
மற்றபடி மிக சாதரணமான நகர்கிறது படம் . எல்லோரும் பேசிக் கொண்டே இருந்தாலும் எப்போதோ சில இடங்களில்தான் நகைச்சுவை இருக்கிறது .
இன்னொரு பக்கம் வாழை இலை உடை பிரார்த்தனை போன்ற காட்சிகளில் காமெடி என்று பெயரில் படம் பார்ப்பவர்களை ரொம்ப சோதிக்கிறார்கள் .
இது கூடப் பரவாயில்லை .
தம்பி ராமையா , தேவ தர்ஷினி இடையிலான இரட்டை அர்த்த வசனங்கள் உவ்வே ரகம்.
காமெடி ப்ளஸ் பேய் என்ற ரீதியில் வரும் படங்களின் முதன்மைப் பார்வையாளர்களே சிறுவர் சிறுமியர்தான் . இப்படி எல்லாம் வசனம் வைத்தால் எப்படி குடும்பத்துடன் படம் பார்க்க முடியும்?
பொய் சொல்லி விலை அதிகமான வீட்டை குறைந்த விலைக்கு ஏமாற்றி வாங்கும் அயோக்கியத்தனம் செய்யும் ஹீரோ , தான் ஏமாற்றப்படுவதாக கண்ணீர் வடிக்கிறான் (அதற்கு ஒரு சப்பைக்கட்டு சமாதானம் வேறு)
”எங்க அப்பா அம்மாவுக்கு வீடு வேணும் . நீ எப்போ பெரியப்பா செத்துப் போவ?” என்று ஒரு குழந்தை குளோசப்பில் கேட்கிறது
அப்பா அம்மா பேசிக் கொள்வதைத்தான் சொல்கிறது என்றாலும் குழந்தையின் வாயின் மூலம் இப்படியா சொல்ல வைப்பது ?
இப்படி எந்த வகையிலும் படம் எதிக்ஸ் இல்லாமல் இருப்பது அநியாயம் .
பேய்க் காட்சிகளில் எந்த புதுமையும் இல்லை . ஏகப்பட்ட சவுண்ட் எஃபெக்ட் போடுவது வேறு படுத்துகிறது
கூட்டுக் குடும்பங்களின் ஒற்றுமையை கடைசிக் காட்சிகளில் முன்னெடுப்பது பாராட்டுக்குரியது . குடும்பப் பிணைப்பை உறவினர்களின் சங்கிலிப் பிணைப்பு மூலம் காட்டும் டைரக்டோரியல் டச் அருமை .
நடிப்பில் ராதாரவி மனம் கவர்கிறார் .
ஆனால் இது மட்டும் போதுமா ? இதனால் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நியாயமாகி விடுமா?
மொத்தத்தில்
சங்கிலி புங்கிலி கதவ தொற…….. நான் மாட்டேன் வெங்கலப் புள்ளி




