‘தடை அதை உடை’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா.

காந்திமதி பிக்சர்ஸ்  சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ” தடை அதை உடை “. 
 
அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் நடிகரான பிரபலமான  மகேஷ், சமீபத்தில் வெளியான திருக்குறள் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த நடிகர் குணா பாபு, K.M.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மகாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
 
இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல்முருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
பாக்கியம் கௌதமி, பிரபல மேடை நாடக நடிகர் M.K.ராதாகிருஷ்ணன், மற்றும் இவர்களுடன் விளாங்குடி M.R. நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், காத்து கருப்பு கலை, சுபா, சூரிய பிரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
 
தங்கப் பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.  சாய் சுந்தர் இசையமைத்துள்ளார்.
 
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார் பட்டுக்கோட்டையை சேர்ந்த அறிமுக இயக்குனர் அறிவழகன் முருகேசன்.  
 
1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையையும், சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் மிக சுவாரஸ்யமாக சொல்லும் திரைப்படம் இது. 
 
அத்துடன் சேர்ந்து தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை சொல்லும் என்கிறார்கள் . 
 
இத் திரைப்படம் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் இத் திரைப்படம் இரண்டு நேர்-எதிர் காலங்களில் நடப்பதாலும், நிறைய நடிகர்கள் உருவமாற்றம் செய்ய வேண்டி இருந்ததாலும் இரண்டரை வருடங்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
 
இத் திரைப்படம்  தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,  நடைபெற்றது. 
 
நிகழ்வினில் இசையமைப்பாளர் சாய் சுந்தர் பேசியபோது, “இது என் முதல் படம், முதல் மேடை.என்னுடைய பாடல்கள் இசை உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பாடிய சின்னப்பொண்ணு அக்கா, காளிதாஸ், சர்வேஷ் அண்ணன் உட்பட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அறிவழகன் தான் எல்லாப் பாடல்களையும் எழுதினார். மிக அழகாகவே எழுதியுள்ளார். என் நண்பன் சூர்ய தேவன் ஒரு பாடல் எழுதியுள்ளான். இந்த வாய்ப்பு தந்த அறிவழகன் சாருக்கு நன்றி”என்றார். 
 
நடிகர் குணா பாபு பேசியபோது,  எங்களுடைய டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். சின்ன டீம் எல்லோரும் சேர்ந்து உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நான் நடித்த திருக்குறள் படம் யூடியூப்பில் இருக்கிறது அனைவரும் பாருங்கள். அருள்தாஸ் அண்ணன் எங்களுக்காக வந்துள்ளார். அவருடன் நான் விக்ரம் படத்தில் வேலை பார்த்தேன். அவர் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம். கேடி என்கிற கருப்புதுரை பார்த்து, பாரி அண்ணன் அறிவழகன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்படித் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது.  
 
திரைக்கதை படிக்கும் போது அத்தனை விவரங்கள் நுணுக்கமாக இருந்தது. மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். முயன்றே எழுவோம், விழுந்தே எழுவோம் என ஒரு வரி படத்தில் வருகிறது அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும் வரிகள்.”என்றார். 
 
நடிகர் அருள்தாஸ்  பேசியபோது, ”   இந்தப் படக்குழுவில் வெகு சிலரை மட்டும்தான் தெரியும். என் கே ஆர் என் மாப்பிள்ளை, அவர் என்னுடன் தமிழ்க் குடிமகன் படத்தில் நடித்தார் அது மூலம் தான் பழக்கம். இயக்குநர் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர். அவரே சம்பாதித்த பணத்தில் அவரது சொந்த ஊரில் படமெடுத்துள்ளார். வாய்ப்புத் தேடும் இளைஞர்களுக்கு வாய்பு கொடுத்ததற்காக அவரை கண்டிப்பாக பாராட்டலாம். எல்லோருமே திறமையாளர்கள். ஒளிப்பதிவாளர் சிறப்பாக செய்துள்ளார். இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்துள்ளார். இந்தப் படம் மூலம் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர் பாரி நல்ல ரோல் செய்துள்ளார். எல்லா நடிகர் நடிகையர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.  இந்த முயற்சி எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும் “என்றார். 
 
திருக்குறள் படத்தின் இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் பேசியபோது, “இந்தப்  படத்தின் பெயர் மிக முக்கியமானது. உலக அளவில் பார்த்தால் எழுத்து தடை செய்யப்பட்டது, நாடகங்கள் தடை செய்யப்பட்டது, சினிமா தடை செய்யப்பட்டது. அந்த வகையில் தடை அதை உடை எனும் இப்படம் ஜெயிக்க என் வாழ்த்துக்கள். 80 களில் எல்லாத் தமிழர்களும் படம் பார்த்தார்கள் இன்று 30 சதவீதம் பேர் தான் படம் பார்க்கிறார்கள். இவ்விழாவிற்கு வரக் காரணம் எங்கள் படத்தில் நடித்த குணாதான். என் படத்தில் குதிரை சவாரியில் உயிரை பணயம் வைத்து நடித்தார். அவர் அர்ப்பணிப்பு பெரிதாக இருந்தது. இந்தப் படக்குழுவினர் பெரும் உழைப்பில் இப்படத்தை எடுத்துள்ளனர். புதிய குழு ஜெயிக்க என் வாழ்த்துக்கள். “என்றார். 
 
இயக்குநர் அறிவழகன் பேசியபோது, “இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி.  இந்த விழாவில் எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளனர். அவர்கள் உழைப்பை எவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா நடிகர்களுக்கும் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். என் அப்பா  ஷீட்டிங்கில் இருந்தார். விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்றார். எடுப்பதே கஷ்டம் என்றால் 36 மணி நேரம் நடிப்பது எவ்வளவு கஷ்டம். அவர்களுக்கு நன்றிகள். 
 
எல்லோரும் சொந்த பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது.  அதற்கு காரணம் மக்களும் பத்திரிக்கையாளர்களும்தான். நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர் குணா நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். என் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரும் அளவு திறமை இருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாடலாசிரியருக்கு சம்பளம் தரவேண்டுமே,  நம் படத்தில் யாரும் என்னை கேட்க மாட்டார்கள் என நானே பாடல்கள் எழுதிவிட்டேன். அடுத்த படத்தில் புதிய பாடலாசிரியருக்கு வாய்ப்பு தருவேன். 
 
படம்  1 மணி நேரம் 53 நிமிடம் மட்டுமே. பரபரவென போகும், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ஒரே ஒரு விஷயம் சினிமாவை வாழ விடுங்கள்.  ஒரு மாதம் சினிமா சினிமா ஷூட்டிங் இல்லாமல்  இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும், ஆனால் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்கா விட்டால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். இந்தப் படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும், ” என்றார்.
 
படத்தொகுப்பு  – டாய்சி 
கலை இயக்கம் – சிவகுமார்,மணி
5.1 மிக்ஸ் – சரவணா தீபன் 
 தயாரிப்பு மேற்பார்வை -வேல்முருகன்
நிர்வாக தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *