ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க , பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , ஈஸ்வரி ராவ் நடிப்பில் ஹரிகுமார் இயக்கி இருக்கும் படம் .
கோயம்பேடு மார்க்கெட்டில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்துக் கொழுக்கும் ரவுடியின் கையாளாக – பணம் கட்ட முடியாதவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் கொடூரமாக அசிங்கப்படுத்திக் கொடுமைப்படுத்தி குதறிக் கொட்டி தற்கொலை வரை கொண்டு போகிற- தேள் போல வாழும் ஒருவன் (பிரபு தேவா).
அவனை காதலிக்கும் பார் நடனக்காரப் பெண் ( சம்யுக்தா ஹெக்டே) . அவளது நண்பன் ஒருவன் ( யோகி பாபு).
சிறு வயது முதலே அனாதையாக வாழும் அந்த மனித மிருகத்தைத் தேடி வரும் ஒரு பெண் ( ஈஸ்வரி ராவ்) தான்தான் அம்மா என்றும் ”சிறு வயதில் முறையற்றுப் பிறந்த காரணத்தால் உன்னை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போய் விட்டேன்” என்றும் கூறுகிறாள் .
ஆரம்பத்தில் அவளை நம்பாமலும் பிறகு நம்பிய அப்புறமும் கூட அவளை அடித்துத் துவைக்கும் அவன் , ஒரு நிலையில் அன்புக்குப் பாத்திரம் ஆகிறான் . அதன் பிறகு அவன் வாழ்க்கையே மாறுகிறது. அதன் திடுக்கிடும் விளைவுகள் என்ன என்பதே இந்தப் படம் .
கொரிய மொழியில் கிம் கி டுக் இயக்கிய PIETA என்ற படத்தில் சில சில மாற்றங்கள் செய்து அப்படியே தேள் ஆக்கி இருக்கிறார்கள். அதைப் பார்க்காதவர்களுக்கு படம் பிடிக்க வாய்ப்பு உண்டு.
பிரபு தேவா நன்றாக அடிக்கிறார் . சம்யுக்தா நன்றாக ஆடுகிறார் . ஈஸ்வரி ராவ் நன்றாக நடிக்கிறார் . யோகி பாபு நன்றாக பேசுகிறார் .
நத்தை போல நகர்கிறது தேள் .
திரைக்கதையில் இன்னும் நேர்த்தியும் கனமும் இருந்திருக்கலாம் .
இந்தப் படத்தைப் பார்க்கும்போது இன்னொரு அற்புதமான கிளைமாக்ஸ் தோன்றுகிறது . அதை செய்து இருந்தால் இன்னும் நேட்டிவிட்டியுடன் படம் சிறப்பாக அமைந்து பேசப்பட்டு இருக்கும்.
