டூரிஸ்ட் ஃபேமிலி @விமர்சனம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரிப்பில் , 

சசிகுமார், , சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன் , யோகிபாபு,எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி நடிப்பில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருக்கும் படம்.

 
யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் வரும் ஒரு தமிழ்க் குடும்பம் , கணவன் (சசிகுமார்), மனைவி (சிம்ரன்) மூத்த மகன் (மிதுன் ஜெய்சங்கர்)இளைய மகன் (கமலேஷ் ஜெகன்) ராமேஸ்வரம் தீவில் இறங்குகிறார்கள் . 
 
அங்கே உள்ள  காவல் அதிகாரி (ரமேஷ் திலக்) அவர்கள் பேசுவதைப் பார்த்து  சினேக உணர்வுடன் அவர்களை முகாமுக்கு அனுப்பாமல் அவர்களைப் பார்க்க வந்திருக்கும் – அந்த பெண்ணின் சகோதரனுடன்( யோகி பாபு ) அனுப்புகிறார் . 
 
அந்தக் குடும்பம் சென்னைக்கு வந்து ஒரு வாடகை வீடு பிடித்தால்…. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு போலீஸ்காரர் (பக்ஸ்). யாழ்ப்பாணத் தமிழை  அவர் மலையாளம் என்று நினைக்க, இவர்களும் அப்படியே காட்டிக் கொண்டு வீட்டில் தங்குகின்றனர். 
 
ஒரு பணக்கார கெடுபிடி நபரிடம் ( எம் எஸ் பாஸ்கர்) கஷ்டப்பட்டு  டிரைவர் வேலைக்கு சேர்வதோடு , எப்போதும் குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கும் ஓர் இளைஞனிடம் ( இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்) அன்பு கட்டுகிறான் கணவன்.
 
ஒரு வயதான தம்பதியுடன் (குமார வேல் , ஸ்ரீஜா ரவி) சிநேகமாகிறார் மனைவி . 
 
யாழ்ப்பணத்தில் காதலியை விட்டு விட்டு அப்பாவின்  கட்டாயத்தால் இந்தியா வந்திருக்கும் அந்த மூத்த மகன் , போலீஸ்காரரின் மகளின் (யோகலட்சுமி)  போலிக் காதலனை விபத்தாக அம்பலப்படுத்தி , அந்தப் பெண்ணின் அன்புக்குப் பாத்திரமாகிறான். 
 
தான் சேரும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் என்று தெரியாமலேயே பக்கத்து வீட்டு நபரிடம் பள்ளி [போக லிப்ட்  கேட்டு அவரின் அன்புக்குப் பாத்திரமாகிறான் இளைய மகன் . 
 
இந்த நிலையில் இந்த குடும்பம் ராமேஸ்வரத்தில் கரை இறங்கிய அன்று இவர்கள் பயன்படுத்திய குப்பைத் தொட்டி ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்து இருக்க , 
 
சந்தேகம் இவர்கள் மேல் விழுகிறது . அந்த முதல் சந்திப்பில் சிறுவன் சொன்ன ஒரு சிறு பொய் தன்னை ஏமாற்றிய செயல் என்று உணரும் அந்த சிநேக போலீஸ்காரரரே ,  யாழ்ப்பாணக் குடும்பம் தன்னை ஏமாற்றியதாகக் கருத , 
 
இலங்கை தமிழர்கள்தான் என்றில்லை; தமிழர்கள் என்றாலே வெறுக்கும் வாடா இந்திய போலீஸ்காரன் ஒருவன் எப்படியாவது இந்தக் குடும்பத்தை வேட்டையாட வேண்டும் என்று களம் இறங்க…  நடந்தது ஏன்ன என்பதே படம் . 
 
ஹிட்லரின் நாஜிப் படையால் யூதர்கள் பல கொடூர முறைகளில் கொன்று குவிக்கப்பட்ட விதம் பற்றி  (இதனால் யூதர்கள் நல்லவர்கள் என்று அர்த்தம்  இல்லை)  ஜென்மங்கள் கடந்தும் ஏராளமான படங்கள் வந்தன .  
 
யூதர்கள் மீண்டும் தங்கள் மேலாதிக்கத்தைத் நிறுவத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்று விட்ட பின்னரும் இன்னும் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
 
எங்கோ யாரோ இன்னும் ஹிட்லரைக் கண்டித்தும் யூதர்கள் ஐயோ பாவம் என்றும் படம் எடுத்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள். 
 
ஆனால்  கால காலமாக பூர்வீகமாக தாங்கள் வாழ்ந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட  காரணத்தால் பொங்கி எழுந்து போராடிய இனம் ஈழத் தமிழனம் .. அதன் போராட்ட நோக்கம் குற்றம் குறை இல்லாதது. 
 
ஹிட்லரை விட மோசமான சிங்களக் கூட்டத்தால் பன்னாட்டு சதியால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தைப் பற்றி ……
 
ஹிட்லர் யூத சண்டை விஷயத்தை விடவும் அதிகப் படங்கள் எடுக்க ஆயிரம் நியாயங்கள் இருக்கினறன. அவ்வளவு அநியாயங்கள் ஈழத் தமிழினத்துக்கு நிகழ்ந்துள்ளன . 
 
ஆனால் ‘வடக்கத்தியர்களைக் கொல்லும் பாகிஸ்தான் பகை நாடு ; தமிழ நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களைக்  கொல்லும் இலங்கை கள்ளப் புருஷ நாடு’ என்று இருக்கும் ஒன்றிய அரசுகளின்  ஓர வஞ்சனைத் தணிக்கையால், 
 
 நம்மால் அப்படிப்பட்ட படங்களை நேரடியாக எடுக்க முடியவில்லை. . 
 
அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் குறித்து நகைச்சுவையாக , இயல்பாக , லேசுபாசாக, சில உண்மைகளை சொல்ல முடியாத காரணத்தால் மறைத்தும் சொல்ல முடிகிற உண்மைகளை சொல்லியும்   வரும் படங்கள் முக்கியமானவை.
 
 அது ‘மேதகு’ வாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை கமல் நடித்து கே எஸ் ரவிக்குமார் இயக்கிய’ தெனாலி’ கூட அந்த வகையில் பாராட்டப் படவேண்டிய படம்தான் . 
 
இந்த டூரிஸ்ட் பேமிலி படமும் அந்த வரிசையில் சேர்கிறது. 
 
இந்த ஒரு காரணத்தாலேயே இது கொண்டாடப்பட வேண்டிய தமிழர்கள் ஆதரிக்க வேண்டிய படமாகிறது . 
 
இருபத்தி நாலு வயதில் இப்படி ஒரு கதையை எழுதிப் படமாக்கிய அபிஷன் ஜீவிந்த் க்கு பாராட்டுகள் வாழ்த்துகள் . 
 
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் கிளைமாக்ஸ் ஏரியா . மிகச் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது என்பது மட்டுமல்ல… 
 
இலங்கைத் தமிழர் பிரச்னையை இந்தியாவின் மற்ற சில மாநில அரசுகள் எப்படிப் பார்க்கின்றன என்பது நமக்குத் தெரியும் 
 
ஆனால் உண்மையில் ஈழத் தமிழர் பிரச்னையை இந்தியாவின்  மற்ற மாநில அரசுகள் மற்ற மொழி பேசும் மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை  ஒரு வித குறியீடாக,  செருப்பால் அடித்துச் சொல்லும் படம் இது .
 
அந்த கருத்தரசியல்தான் இந்தப் படத்தின் மணிமகுடம்.
 
யாரிடமும்  கேட்காமல் படத்தில் பாருங்கள் ; உருகிப் போவீர்கள் . 
 
அல்லது கொஞ்ச பேருக்கு முன்பே கூட கிளைமாக்ஸ் புரிந்து விடலாம் . ஆனால் ஒரு படத்தில் ‘நாம் நினைத்ததுதான் வருகிறது ;ஆனால் அது நமக்குப் பிடிக்கிறது’ என்றால் அதுதான் சிறப்பம்சம் . இந்தப் படத்தின் கிளைமாக்சில்  அத்தி பூத்தாற்போல அந்த அனுபவம் நிகழ்கிறது . நெகிழ்ச்சி . 
 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாட்டுக் காலம் முதல் மாட்டுக்கார வேலன் படத்தில் , ” அப்போ என்னை நானே அழித்துக் கொள்வதுதான் ஒரே வழி ‘என்று எம் ஜி ஆர் பேசும் வசனம் தொடர்ந்து , 
 
சோகத்தையும் இழப்பையும் புன்னகையோடு சொல்லும் உத்தி என்றைக்குமே எவர் கிரீன் . இந்தப் படத்தில் அது இருக்கிறது . 
 
தங்களை மலையாளி என்று சொல்லிக் கொள்வதன்  தொடர்ச்சியாக ஓணம் பண்டிகை கொண்டாடுவது மலையாளம் பேசுவது உள்ளிட்ட காட்சிகளில் அசத்தி இருக்கிறார் சிறுவன் கமலேஷ் ஜெகன் . அவன் நிஜமாகவே ஒரு மலையாளி என்பதால் அது பொருத்தமாகவும் இருக்கிறது .
 
யாருமற்ற வயதான தம்பதி மரணம்… அந்தப் பகுதி மிக அட்டகாசமான திரைக்கதைப் பகுதி . அதை அடுத்து அது ஓர் அநாதை மரணமாகப் போகக் கூடாது என்று சசிகுமார் கதாபாத்திரம் எல்லா வீட்டுக்காரர்களையும் அழைத்து மரியாதை செலுத்தச செய்யும் காட்சி உலகத் தரம் . 
 
ஆனால் அந்தக் காட்சியின் நோக்கத்தை சரியாகச் சொல்லும் அளவுக்கு இயக்குனருக்கு அனுபவம் இல்லை. . 
” ஒரு பொணம் அநாதையா போறதோட வலி எங்களுக்குத்தான் எல்லாரையும் விட நல்லா தெரியும்” என்று யாழ்ப்பணத் தமிழரின் காதாபாத்திரமான சசிகுமார்  சொன்னால்தானே அந்தக் காட்சி முழுமை அடையும் . ஆனால் அதை எழுதாமல் , இதயம் உலுக்கும் ஒரு காட்சியை அலட்சியமாக மிஸ் செய்து இருக்கிறார்கள் . 
 
படத்தின் இடைவேளையில் இதை நான் சசிகுமாரிடமே சொன்னேன் ” இடைவேளைக்கு அப்புறம் வரும் ” என்றார் . ஆனா கடைசி வரைக்கும்  வரல. அவரிடம் சொல்லாமல் எடிட்டிங்கில் தூக்கி விட்டார்கள் போல. 
 
இது போன்ற கதைகளுக்கு வசனம் ஒரு சிற்பச் செதுக்கல் போல இருக்க வேண்டும். ஆனால் மூத்த மகன் – போலீஸ்காரர் மகள் காதல் உணரும் காட்சி தவிர வேறு எங்கும் அது இல்லை. 
 
இப்படி ஒரு கதை உள்ள படத்தில் கூட யோகிபாபு என்ன பேசினாலும் சிரிப்பார்கள் என்ற மூட நம்பிக்கைக்கு படக்குழு ஆளாகி இருப்பது பெருத்த சோகம் .  
 
ஆரம்பக் காட்சிகளில் காமெடியாக சொல்ல வேண்டும் என்று அவர்கள் முயன்று இருக்கிறார்கள் . ஆனால் நம்மிடம் வந்து சேரும்போது அது காமெடியாக இல்லை. 
 
 ஒரு காட்சியை காமெடியாக சொல்வதா இல்லை சீரியசாக சொல்வதா என்ற குழப்பமும் தெரிகிறது. 
 
குடும்பத்துக்குள் அப்பாவும் மகனுக்கும் நடக்கும்  கோப சண்டைக் காட்சி  உள்ளிட்ட சில காட்சிகள் அளவுக்கு மீறி நீள்கின்றன. 
 
இரண்டாம் பகுதி சரியான காட்சிகள் இல்லாமல் தடுமாறுவது தெரிகிறது . அதுவும் சென்னையில் நடப்பதையும் ராமேஸ்வரம் போலீஸ் விசாரணையையும் மாற்றி மாற்றிக் காட்டுவது எல்லாம்  எரிச்சல் . எந்தக் காலத்துப் பாணி அது ? 
 
முக்கியக் கட்டத்தை போலீஸ் விசாரணை எட்டிய உடன் ,  முழுக்க முழுக்க சென்னைக் கதையிலேயே கவனம் செலுத்தி , எதிர்பாராத ஒரு சமயம் திடீர் என  போலீஸ் வந்து ஏரியாவை சுற்றி வளைக்கிறது…
 
 என்று காட்சிகளை அடுக்கி இருந்தால் ,இன்னும் அதிர்ச்சி, பரபரப்பு அதிகம் ஆகி கிளைமாக்ஸ் இன்னும் கனமாக மாறி இருக்கும் 
 
எடிட்டிங்கில் கூட அப்படி மாற்றி இருக்கலாம் . ஆனால் அப்படி செய்தால் சில காட்சிகளைப் பயன்படுத்த முடியாது . எனவே படத்தின் இன்னும் நீளம் குறையும். அதற்கு மேலும் சில காட்சிகள் எழுதி எடுக்க வேண்டும் . எனவேதான்  எடிட்டர் பரத் விகரமன் அப்படியே விட்டு இருக்க வேண்டும். 
 
படத்தின் டைட்டில் முன்னோட்டம் இரண்டுமே ஏற்படுத்தும் உணர்வு இந்தப் படத்துக்கு எதிரானது . உள்ளே வந்தால் இரண்டுக்கும் சம்மந்தம் இல்லாத வேறு ஒரு படம் ஓடுகிறது. 
 
வடக்கத்திய போலீஸ் அதிகாரியைக் கண்டிக்கும் மேலதிகாரி ‘ வந்துடறாங்க நம்ம  உயிரை வாங்கறதுக்கு …” என்று லேசாக முணுமுணுப்பது போல போனால் போகிறது என்று  மொழி அரசியல் பேசுகிறார் . 
 
ஆனால் சினேக போலீஸ்காரர் ரமேஷ் திலக்கை ஓங்கி ஓங்கி அறையும் வடக்கத்திய போலீஸ் அதிகாரி , “ஏன்டா… ஒரே மொழி பேசறவன் னா அவன் என்ன பண்ணாலும் விடுவீங்களா?” என்று கேட்கிறார் . உயர் அதிகாரியை திருப்பி அறைய முடியாது என்று காட்சி வைப்பது இயக்குனரின் படைப்பு உரிமை. ஆனால் கடைசிவரை அதற்கு பதிலாக ரமேஷ் திலக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது ஒருவித இன்டல்லக்சுவல் அரகன்ஸ். 
 
அப்படி எதுவுமே பேசாமல் படத்தை முடிப்பது என்பது இந்தப் படத்தின் தன்மைக்கும் கதைக்கும் நோக்கத்துக்குமே எதிரான – வஞ்சகமான விஷயம் . 
 
சசிகுமார் கேரக்டருக்கு மிகவும் பொருந்தி வருகிறார் . சிம்ரனுக்கு இன்னும் கொஞ்சம் மேக்கப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம் .
 
எம் எஸ் பாஸ்கர் கேரக்டர் அதை அவர் கையாண்டிருக்கும் விதம் இரண்டுமே அபாரம் . 
 
மிதுன் ஜெய்சங்கர்,   ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி  யாரும் குறையில்லை. 
 
சான் ரோல்டனின் இசை,அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு இரண்டும்   ஒகே ரகம். 
 
படத்தில் சில குறைகள் குற்றங்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் கருத்தியல்,  , அட்டகாசமான அந்த கிளைமாக்ஸ் இவையே போதும் இந்தப் படத்தைக் கொண்டாட. 
 
டூரிஸ்ட் ஃபேமிலி …. நம்ம ஃபேமிலி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *