
கே என்டர்டெயின்மென்ட் சார்பில் தேவி கரண் தயாரிக்க,
கரண், நேஹா , நரேன் .இளவரசு ஆகியோர் நடிக்க ,
கதை திரைக்கதை வசனம் எழுதி ஜே பி என்பவர் இயக்கி இருக்கும் படம் உச்சத்துல சிவா .
உச்சம் மச்சமா இல்லை மிச்சமா ? பார்ப்போம்.
ஷீரடி சாய் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக இருக்கும் சிவா (கரண்) , மறு நாள் காலை கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போக வேண்டிய சூழலில்,
ஒரு வாடிக்கையாளரை இறக்கி விட்டுவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் , தன்னைக் கொல்ல வருவோரிடம் இருந்து தப்பி ஓடிவரும் ஒரு இளம் ஜோடியைப் பார்க்கிறான் .
துரத்தி வந்தவர்கள் அந்த ஆணை கொன்று விட,, பெண்ணான நிலாவை (நேகா) மட்டும் சிவாவால் காப்பற்ற முடிகிறது .
அவளைக் காப்பாற்றும் முயற்சியில் சில போலீஸ் அதிகாரிகள், சில ரவுடிகள் ஒரு போதைப் பொருள் கடத்தல் கும்பல் இவற்றின் பகைக்கு ஆளாகிறான்.
வேறு யாரையும் பெண் பார்க்கப் போக வேண்டாம் . இவளையே அம்மாவிடம் கொண்டு போய் நிறுத்தி மனைவியாக்கிக் கொள்ளலாம் என்று சிவா முடிவு செய்யும் சமயம் ,
ஓர் எதிர்பாராத திருப்பம் .!
எல்லாக் கதையும் தலைகீழாகப் போய், கடைசியில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிவா ஜெயிலுக்குப் போக வேண்டி அமைகிறது .
அதில் இருந்து சிவா மீண்டானா? காதல் என்ன ஆச்சு ? பொண்ணு பாக்கப் போகிற பிளான் என்ன ஆச்சு ?
— என்பதே இந்த உச்சத்துல சிவா .
இத்தனை வருடத்துக்குப் பிறகும் கரன் இன்னும் இளமையாக இருக்கிறார் . உற்சாகமாக நடிக்கிறார் . அதிரடியாக சண்டை போடுகிறார் .
நாயகி நேகா இயல்பான அழகு . குறை சொல்ல ஒன்றும் இல்லை .
இடைவேளை டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது
கனவுப் பாடல் காட்சி எடுக்கப்பட்ட விதத்தில் இயல்பான குளுமை .
இருக்கட்டும் .. இத்தனை வருட சினிமா அனுபவம் உள்ள நிலையில் சொந்தப் படம் எடுத்து இருக்கிறார் கரண்.
அப்படி இருக்கும்போது எல்லோரையும் பேச வைக்கும் ஒரு வித்தியாசமான் கதை திரைக்கதையோடு களம் இறங்கி அசத்தியிருக்க வேண்டாமா ?
இப்படியா காதல் ஜோடி, அப்பாவிப் பெண், போதை மாஃபியா என்று ….
எட்டுத் தெருவுக்கு மூக்கைத் துளைக்கும் புளிச்ச மாவை மீண்டும் மீண்டும் ஊற்றி ஊற்றி அரைப்பது ?
உச்சத்துல .. சிவ சிவ !