
தா என்ற வித்தியாசமான படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ் உத்தமன் . படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் விமர்சன ஏரியாவில் பாராட்டுகளை அள்ளியது .
மீண்டும் அழுத்தமாக ஒரு மறு வெளியீடு செய்தால் நன்றாக ஓடும் என்று பேசப்படும் அளவுக்கு அந்தப் படத்துக்கு நல்ல பெயர் உண்டு .
அதன் பிறகு சுசீந்திரனின் பாண்டி நாடு படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிந்த நடிகர் ஆனார் . வில் அம்பு உட்பட பல படங்களில் பாராட்டும்படியான நடிப்பைத் தந்தவர். இவர்
வெளியாக இருக்கும் தொடரி, மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிக்கும் மாவீரன் கிட்டு , விஜய் சேதுபதியுடன் றெக்கை, நயன்தாராவுடன் டோரா என்று தொடர்ந்து….
இப்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஹரிஷ் உத்தமன் .
என்றாலும் மிக மென்மையான குரலில் நிதானமாகப் பேசுகிறார்.
“கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள வாலையார் (செக் போஸ்ட்) பகுதியில் பிறந்தவன் நான் . பதினேழு பதினெட்டு வயசுவரை அங்கேதான் இருந்தேன் .
பின்னர் எம் பி ஏ முடித்த நிலையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபோது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் கேபின் க்ரூ ஆகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது
அப்போதுதான் என் சகோதரரின் நண்பரான இயக்குனர் சூர்ய பிரபாகர், தான் இயக்கும் தா படத்தில் என்னை ஹீரோவாகக் கேட்டார் . நான் ஒன்றரை மாசம் டைம் எடுத்துக் கொண்டுதான் ஒகே சொன்னேன் .
படம் அப்போ நல்லா ஓடலன்னாலும் இப்பவும் எல்லாரும் பாராட்டுவது சந்தோஷமான விஷயம் .
அப்போ யு. ஹரிஷ் னுதான் பேரு வச்சிருந்தேன் . அப்பா பேரு உத்தமன் .அவர் இறந்த அப்புறம் அவர் பேரையும் சேர்த்து ஹரீஷ் உத்தமன் அப்படின்னு பேரை மாத்திக்கிட்டேன் .” என்றவர்
தொடர்ந்து “சுசீந்திரன் சாரோட பாண்டிய நாடு படம்தான் எனக்கு ஒரு நல்ல அடையாளம் கொடுத்தது .
அப்புறம் பல படங்கள் .
இப்போ ரிலீஸ் ஆகப் போற தொடரி படத்துல ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிச்சு இருக்கேன் .
றெக்கை படத்துலயும் படத்தின் மூன்று முக்கியமான கேரக்டர்கள் ஒண்ணு.
நயன்தாரா கூட நடிக்கிற டோரா படத்தில் அவங்களுக்கு அடுத்த முக்கியமான கேரக்டர் என்னுடையது .
சுசீந்திரனின் மாவீரன் கிட்டு படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறேன் . பல தலைமுறைகளுக்கு முன்பு பழனி பகுதியில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியைப் பற்றிய படம் அது .
பைரவா படத்தில் விஜய் சாருடன் ஒரு முக்கியமான கேரக்டர் என்று பல நல்ல படங்களில் இருப்பது சந்தோஷமான விஷயம் .
இது தவிர தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பல படங்களில் நடித்துளேன் . அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
barcour எனப்படும் சுவர் தாண்டும் விளையாட்டில் நான் நன்றாக ஈடுபடுவேன். அதை அறிந்து என்னை மிகவும் பாராட்டினார் மகேஷ் பாபு .
அவரது அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு உள்ளது .
ஹீரோ வில்லன் என்று நான் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.
கதை திரைக்கதையில் முக்கியத்துவம் உள்ள எந்த கதாபாத்திரம் என்றாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் .” என்றார் ஹரீஷ் உத்தமன்
barcour என்றால் என்ன என்று பார்த்து வியக்க,
வாழ்த்துகள் ஹரீஷ் உத்தமன் .