நைசத் மீடியா ஒர்க்ஸ் சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரிக்க, கணபதி ரெட்டியின் இணை தயாரிப்பில் , ரூபா கொடுவாயூர் , நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் , ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா நடிப்பில் ராஜேந்திரன் வசனத்தில் கதை திரைக்கதை எழுதி பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கி இருக்கும் படம்.
தீப்பாஞ்சு அம்மன் இருக்கும் ஓர் ஊர் . கோவில் திருவிழா சமயத்தில் அம்மனின் வைரக்கிரீடத்தை திருடி அடகு வைத்திருக்கிறான், ஊர்த் தலைவரின் ( ராஜூ ராஜப்பன்) மகன் (சுபாஷ் ராமசாமி) . அப்பாவுக்கு தெரியாத இந்த விசயத்தில் கிரீடத்தை மீட்டு திருவிழாவுக்குள் வைத்து விட அவன் முயல்கிறான் .
தலைவரின் அம்மா, வீட்டில் உள்ள ஒரு அறைக் கதவைத் திறந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்கிறார் . மீறித் திறக்கிறார்கள்.
ஊர்த் தலைவரின் மகள் ( ரூபா கொடுவாயூர்) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞனை (நரேந்திர பிரசாத்) காதலிப்பது தலைவருக்கு தெரிய வருகிறது .
மனைவியுடன் (கீதா கைலாசம் ) சண்டை போட்டு அவர் அடிக்க, தட்டிக் கேட்ட மகளையும் அடித்து விடுகிறார் தலைவர் .
மறுநாள் மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
கோவில் திருவிழா துவங்குவதற்குள் பிணத்தை எடுக்க நினைக்க, எத்தனை பேர் முயன்றும் பிணத்தை வெளியே தூக்கி வர முடியவில்லை.
பிணம் கட்டிலோடு எழுந்து நிற்க , பார்ப்பதற்கு கருவறையில் இருக்கும் தீப்பாஞ்சு அம்மன் மாதிரி இருக்கிறது .
மரணத்துக்கு காரணம் என்ன? அப்பாவிடம் அடி வாங்கிய கோபத்துக்கு மகள் செய்து கொண்ட வேலையா?
வைரக் கிரீட விவகாரமா? பாட்டி தடுத்த கதவைத் திறந்ததா? ஆணவக் கொலையா? இல்லை வேறு எதுவுமா? என்பதே படம் .
ராவான கிராமப் படம். அந்த எளிமை இந்தப் படத்தின் பலம் .
ரூபா கொடுவாயூர் வெள்ளித்திரைக்கு ஏற்ற அழகி . நல்ல நடிப்பு . மகளாக, காதலியாக, பிணமாக, அம்மனாக… அழகாக ஸ்கோர் செய்கிறார் .
அண்ணனாக நடித்து இருக்கும் சுபாஷ் ராமசாமி கவனிக்க வைக்கிறார் .
சஸ்பென்சை யூகிக்க விடாமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் . பாராட்டுகள்.
அம்மன் கடைசியில் அம்மா மேல் விழுந்து அமைதியாகும் ஷாட் நெகிழ்ச்சி .
எனினும் களமும் சூழலும் நன்றாக இருக்கிறதே ஒழிய காட்சிகள் பெரும்பாலும் பலவீனமாக இருக்கின்றன. . ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரிடம் இப்படி ஒரு சிச்சுவேஷன் சிக்கி இருந்தால் பின்னிப் பெடல் எடுத்திருக்கலாம்
இயக்கமும் ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பும் ஆரம்பக் காட்சிகளில் சவ சவ .
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ரொம்ப நல்லா இருக்கு . அல்லது ரொம்ப மோசமா இருக்கு,
பின்னணி இசையில் ஜெசின் ஜார்ஜ் கவனிக்க வைத்தாலும் ஓவர் ரிபிட்டேஷன் . ஜோசப் பாபினின் கலை இயக்கமும் கவனிக்க வைத்தலும் தெலுங்கு வாடை அதிகம்.
பல கேரக்டர்களுக்கு யதார்த்த முகங்களைப் போட்டு இருப்பது சில இடங்களில் பலமாகவும் பல இடங்களில் பலவீனமான நடிப்பால் பலவீனமாகவும் இருக்கிறது .
கிளைமாக்சில் சஸ்பென்ஸ் இருந்தாலும் கடைசியில் சொல்லப் படும் காரணம் குழப்பமோ குழப்பம் .
மொத்தப் படமும் ஒரு சிறுகதை போல மட்டுமே இருப்பதும் குறைபாடு .
எமகாதகி என்று பெயர் வைக்கும் அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது? ஒரு நல்ல பெயர் வீணாகி இருக்கிறது . இயக்குனர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் . அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் . வசனம் எழுதிய ராஜேந்திரன் சொல்ல வேண்டாமா?
எமகாதகி….. சோப்ளாங்கியும் இல்லை. ஜாலக்காரியும் இல்லை