திலீஷ் போத்தன், பஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் தயாரிப்பில், நிவின் பாலி , மமிதா பைஜு நடிப்பில் கிரண் ஜோஷியோடு சேர்ந்து எழுதி, கிரிஷ் ஏ டி இயக்கி இருக்கும் படம்
கேரளாவில் கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒவ்வொரு சர்ச்சுக்கும் கீழ் கிறிஸ்தவக் குடும்பங்கள் தொகுக்கப்பட்டு இருக்கும். அவை ஒரு குட்டி சமுதாயம் போலவே இருக்கும். அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அவர்களுக்கும் ஓர் ஒற்றுமையும் பேணப்படும்.
அப்படி பெத்லஹேம் என்ற பெயரில் அமைந்த குடும்பங்களின் பெயரே பெத்லஹேம் குடும்ப யூனிட் .
அந்த யூனிட் குடும்பங்களில் ஒன்றில் கல்யாணம் ஆகாமல் முதிர் கண்ணனாக வாழும் நபர் ஜெஸ்டின் ( நிவின் பாலி).. அவனது தம்பி குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்.
அந்த பெத்லஹேம் குடும்பங்களில் ஒன்றின் வீட்டுக்கு வரும் இளம்பெண் ஆஷ்லிக்கு (மமிதா பைஜூ) ஜெஸ்டின் மீது காதல் வருகிறது. அவனுக்கும் உள்ளுக்குள் பிடித்தாலும் வயது வித்தியாசம் காரணமாக மறுக்கிறான்.
ஜெஸ்டினின் தம்பி குறும்படத்தில் நடித்த பெண்ணை காதலிக்கிறான் . அது அவளது அண்ணனுக்கு பிடிக்காமல் அடிதடியாகிறது.
ஒரு நிலையில் ஜெஸ்டின் ஆஷ்லியின் காதலை ஏற்க, அஷ்லியின் மாமாவுக்கு விஷயம் தெரிந்து அது ஊருக்கே தெரிய அஷ்லியின் குடும்பம் அவளை பிரிக்கிறது.
இனி எனக்கும் ஜெஸ்டினுக்கும் எந்த உறவும் இல்லை என்ற பைபிள் மேல் சத்தியம் செய்கிறாள் அஷ்லி. விஷயம் அறிந்து உடைந்து போகிறான் ஜெஸ்டின்.
அந்தக் காதல்(கள்) என்ன ஆனது என்பதே பெத்லஹேம் குடும்ப யூனிட்.
புதுமையான கதைக்களம் ஈர்க்கிறது. காட்சிகளை இயல்பாக எழுதி, கொஞ்சமாக சீரியஸும் படம் முழுக்க லைட் காமெடியாகவும் கொண்டு போகிறார்கள். எஸ் வி சேகர் நாடக பாணி காமெடிகள் படம் முழுக்க வருகின்றன . குக்கு லேன்ட் காட்சிகள் அதற்கு உதாரணம்.
காந்தாரா ஸ்பூப் காட்சி அருமை.
மலையாள கிறிஸ்தவப் பெண்கள் கும்பலாக உட்கார்ந்து தண்ணியடித்து விட்டு பேசும் பேச்சுகள் ரகளை.
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கேரக்டரில் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படத்தில் நடித்து இருந்தாலும் அதில் இருந்து முற்றிலும் வேறு பாணியில் இந்தப் படத்தில் நடித்து அசத்துகிறார் மமிதா பைஜூ.
ஜஸ்ட் லைக் தட் பொருத்தமாக நடிக்கிறார் நிவின் பாலி . நடித்த எல்லோருமே நன்றாக நடிக்கிறார்கள்.
படத்தில் வரும் அழகழகான விதம் விதமான வல்லிய மலையாள பெண் குட்டிகள் ஓட்டத்துக்கு உதவலாம்.
பல காட்சிகளில் காமெடி சேட்டை என்ற பெயரில் எல்லோரும் செயற்கையாக சேட்டைகள் செய்வது எரிச்சல்.
அதேபோல எல்லா காட்சிகளும் மேம்போக்காகக் கடக்கின்றன .படம் முடியும்போது குளோஸ் பண்ணி விட்டு எழுந்து வருகிறோம்.
மலையாள ரசிகர்களை கவர , “இது நம்முடே மலையாளிகள் படமாக்கும் ” என்ற ஒரு வாக்கியம் போதும். தமிழ்நாட்டில் தமிழர்கள் பத்தின படம் என்றாலே கொட்டாவி விடுவார்கள்.
அலட்சியமின்றி சின்சியராக எழுதப்பட்டிருப்பது ஒரு பிளஸ். ஆனால் முழுக்க முழுக்க மலையாளப்படமாகவே இருப்பது தமிழ் பதிப்பின் தியேட்டரிக்கல் வெற்றிக்குத் தடை