கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி கே ராம் மோகன் தயாரிக்க, சரத்குமார், நெப்போலியன் , சுகாசினி , முனீஸ் காந்த், அஞ்சனா பிரேம் , அஜய் , பேபி சாதன்யா நடிப்பில்
மர்மக் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் கதைக்கு , திரைக்கதை எழுதி ஜேப்பியார் என்பவர் (ம்ஹும் ! அவரு இல்லீங்க .) இயக்கி இருக்கும் படம் சென்னையில் ஒரு நாள் 2
கோவையில் பணியில் சேரும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு (சரத்குமார் ), ஒரு வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது . 
ஏஞ்சலின் மரணம் இன்றா நாளையா என்று எழுதப்பட்டு ஊர் முழுக்க ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரின் பின்னணியை விசாரிக்கும் வழக்கு அது .
துணைக்கு ஒரு அதிகாரி (முனீஸ் காந்த்)
உயர் போலீஸ் அதிகாரியின் வளர்ப்பு மகளுக்கும் டாக்டர் ஒருவரின் மகனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது .
வளர்ப்பு மகளுக்கு ஒரு தோழன் . உயர் அதிகாரிக்கு ஓர் இளைய மகள் ஆகியோரும் உண்டு
வழக்கை விசாரிக்கும் பொருட்டு ஒரு மன நல மருத்துவமனைக்கு போகிறார் அதிகாரி . அங்கே ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவள் உடலை பார்க்கிறார்.
அந்தப் பெண் , திருமணம் நிச்சயிக்கப்பட்ட வளர்ப்பு மகளின் நண்பனின் காதலி என்பது தெரிய வருகிறது . 
இந்த நிலையில் கொலைக்கரம் ஒன்று வளர்ப்பு மகளை நோக்கி நீள்கிறது
அந்த கொலைக்கரம் யார் என்பதில் ஓர் அதிர்ச்சி . அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த சென்னையில் ஒரு நாள் 2 .
குற்றவாளியை ஆரம்பத்தில் ஒரு குளோசப் கூட வைக்காமல் காட்சிப் படுத்தி கதைக்குள் கொண்டு வந்து, கடைசியில் விளக்கும் டைரக்ஷன் உத்தி அருமை . 
மன நோயாளிகள் உள்ள கட்டிடத்தை நோக்கி போலீஸ் அதிகாரியும் மன நல மருத்துவரும் (சுகாசினி) நடக்கும்,
அந்த காட்சியின் படமாக்கல் பிரம்மாதம் . ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் , இயக்குனர் ஜேப்பியாரும் பாராட்டுப் பெறுகிறார்கள் .
மற்றபடி பாராட்ட ஒன்றும் இல்லை .
ஒவ்வொரு காட்சியும் பல ஷாட்களும் அளவுக்கும் மீறி நீள்கிறது . போஸ்டர் ஓட்டுவதை எவ்வளவு நேரம் காட்டுவீங்க ?.
அதான் நூறு நிமிட படம் மூணு மணி நேர படம் போல தோன்றுகிறது .
அதுவும் அந்த கிளைமாக்ஸ் டம்மி துப்பாக்கி உத்தி எல்லாம் ரொம்ப டம்மியான விஷயம் .
படிக்க சுவையான கதையை பார்க்கச் சுவையாக எடுக்கத் தவறி இருக்கிறார்கள் .
கோயம்புத்தூரில் நடக்கும் கதைக்கு சென்னையில் ஒரு நாள் 2 என்ற பெயர் எதுக்கு ?