மெர்சல் @ விமர்சனம்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட்  சார்பில் ராமசாமி, ஹேமா ருக்மணி, மகேந்திரன் முரளி ஆகியோர் தயாரிக்க, 

விஜய், சமந்தா , நித்யா மேனன் , காஜல்  அகர்வால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க, 

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவில் , 

 
அட்லியின் கதைக்கு , அட்லி , விஜயேந்திர பிரசாத் ரமண கிரி வாசன் திரைக்கதைக்கு,  அட்லியும் ரமணகிரி வாசனும்  வசனம் எழுத, 
 
அட்லி இயக்கி இருக்கும் படம் மெர்சல் . ரசிகன் மெர்சல் ஆவானா ? பார்க்கலாம் . 
 
அஞ்சு ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்து ஏழை மக்களுக்கு சேவை செய்து அதனால் அஞ்சு ரூபாய் டாக்டர் என்றே, 
 
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அழைக்கப்  படும் மாறன் ( விஜய் – 1) , ஒரு விருது பெறுவதற்காக பாரிஸ் போகிறார் . 
 
அங்கே வரும் பணக்கார  சென்னை  டாக்டர் ஒருவர்  மாறனிடம் ”சேவையை எல்லாம் விட்டு விட்டு ஒழுங்கா என் மருத்துவமனையில் வேலைக்கு சேர் .
 
இல்லன்னா அழிச்சுடுவேன் ” என்று மிரட்டுகிறார் .
 
அந்த பணக்கார டாக்டரின் உதவியாளரான ஒரு பெண் டாக்டருக்கு (காஜல் அகர்வால் ) மாறனுடன் நட்பு ஏற்படுகிறது . 
 
இந்த நிலையில்  மேஜிக் நிபுணர் தோற்றத்தில் வரும் ‘மாறன்’ பணக்கார டாக்டரை மேஜிக் மேடையில் கொல்கிறார்.
 
தப்பி சென்னை வந்த நிலையில் மாறனை போலீஸ் கைது செய்கிறது . ஐந்து ரூபாய்க்கு உயிர் காக்கும் மருத்துவன் கொலை செய்வானா என்றால் ..
 
கொன்றது மருத்துவன் அல்ல. அவன் போலவே தோற்றம் கொண்ட வெற்றி (விஜய் 2 ) என்பது தெரிகிறது . 
 
ஏன் கொல்ல வேண்டும் என்று கேட்டால் , தளபதி என்ற வெற்றி மாறனின் ( விஜய் 3) பிள்ளைகள் இருவரும் என்பது புரிகிறது . 
 
மதுரைப் பக்க கிராமத்தில் பிறந்து பஞ்சாப் பெண்ணை மணந்து  (நித்யா மேனன்)  ஊர் மக்களின் நன்மைக்காக, 
 
சொந்த நிலத்தில்  இலவச மருத்துவ மனை கட்டும் தளபதி அதற்கென  மருத்துவர்களை கொண்டு வர, அவர்கள் ( எஸ் ஜே சூர்யா )  தளபதியை  …… 
 
என்று ஒரு கதை விரிகிறது . அப்புறம் நடந்தது என்ன என்பதே மெர்சல் . 
 
வேட்டி கட்டிய தமிழனாக பாரிஸ் செல்லும் டாக்டர் மாறனை ஏர்போர்ட்டில் உடை பார்த்து கேவலப்படுத்தி கைது செய்து வைக்க ,
 
மருத்துவ உதவி தேவைப்படும் ஒரு பெண்ணைக் காக்க சண்டை போட்டு போராடி போய் உயிர்காத்து  எல்லோரின் மரியாதைக்கும் ஆளாகும் காட்சியிலேயே ,
 
மெர்சல் ஆக்குகிறார் விஜய் . சூப்பர் . 
 
மாறன் வெற்றி என்று இரண்டு கேரக்டர்களில் சின்ன சின்ன மேனரிசங்களில் அழகாக அசத்துகிறார் என்றால் மதுரைக்கார தளபதியாக பிரம்மாதப் படுத்துகிறார் 
 
அசத்தல் அட்லி ! படம் பேசும் மொழி , இன , நிற , வர்க்க அரசியல் அபாரமானது .
 
தமிழ் தமிழனின் பெருமை சொல்லும் பாடல்கள் , டீமானிடைசேஷனை மூக்கறுக்கும் நையாண்டி என்று படத்தில்,பல விஷயங்கள் அபாரம் .
 
நார்மல் டெலிவரி வழக்கமான இருந்த நம் நாட்டில் சிசேரியன் வழக்கமாகப் போனதற்குப் பின்னால் உள்ள மருத்துவ உலகின் மனசாட்சி இல்லாத பண வெறி ,  
 
விபத்துகளில் சிக்கி ஊசலாடும் உயிர்களை ஆம்புலன்ஸ் டிரைவர்களும் புரோக்கர்களும் சரியான மருத்துவ மனைக்கு கொண்டு போகாமல் , 
 
 பணம் பிடுங்கும் தனியார் மருத்துவமனைகள் தரும்  கமிஷனுக்காக  பலரையும் சாலையில் கொல்லும் அவலம்…… 
 
  ஆகியவற்றை படம் தோலுரிக்கும் விதம் அருமை . 
 
வெற்றியின் மேஜிக் திறமையை , காதல், சண்டை , , கொலை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்வதோடு, 
 
கடைசியில் தனது டைட்டில் கார்டுக்கும் சமத்தாக பயன்படுத்திக் கொள்கிறார் அட்லி .
 
(அதற்காக கைது செய்யப்பட்ட விஜய் கையில் பூட்டப்பட்ட விலங்கை போலீஸ் அதிகாரி சத்யராஜ் கைக்கு மாற்றும் மேஜிக் எல்லாம் ஓவர் )
 
பஞ்சாப் பெண்ணை மணந்து  மதுரைப் பக்க கிராமத்துக்கு கொண்டு வந்து கருத்தொருமித்து குடும்பம் நடத்தும்  நாயகன் என்ற கருத்தியல் அருமை . 
 
நடிப்பில் ஜொலிக்கிறார் நித்யா மேனன் . சூப்பர் . (சொந்தக் குரலில் பேச வைக்காமல் மண் மணத்தோடு ஒரு பின்னணிக் குரலை போட்டு இருக்கலாம்) 
 
விஜய் சமந்தா இடையிலான அந்த ”க்கா … டே தம்பி.. ” குறும்பு சுவாரஸ்யம் !
 
தளபதிக்கும் சிட்டுக் குருவி பாட்டிக்கும் இடையிலான உறவும் பாசமும் மேலோட்டமாகப் பார்த்தால் சுவாரஸ்யம் .
 
ஆழ்ந்து பார்த்தால் நெகிழ்வு . உறவு அல்லாத நபர்களுக்கும் உறவின் உரிமை தருவதுதானே  மனித மாண்பு .
 
ஏ ஆர்  ரஹ்மான இசையில் ‘ஆளப் போறான் தமிழன்..” சிலிர்க்க வைக்கிறது . பின்னணி இசை படத்துக்கு மதிப்புக் கூட்டல் செய்கிறது . 
 
ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு அழகியல் காட்சிகளில் குழையவும்  உணர்வுப் பூர்வமான காட்சிகளில் அழுத்தம் சேர்க்கவும் தவறவில்லை . 
 
இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடும் படத்தை பெரிதாக போரடிக்காமல் கொண்டு போவதில் ரூபனின் படத் தொகுப்புக்கும் நல்ல  பங்கு இருக்கிறது . 
 
எஸ் ஜே சூர்யா நடிப்பில் கவர்கிறார் . சத்யராஜ் தன் வழக்கமான இயல்பில் நடிக்கிறார் . ஒரு இடைவேளைக்குப் பிறகு சிரிப்பையும் வசனத்தையும் ‘குழப்பி’ அடிக்கிறார் 
 
 நீண்ட இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் உருப்படியான கேரக்டரில் வடிவேலு . சற்று சிரிக்கவும் வைக்கிறார் . நெகிழவும் வைக்கிறார் 
 
கிளைமாக்ஸ் சண்டையில்  குடியிருந்த கோயிலை அப்படியே ஞாபகப்படுத்தும் காட்சி தேவையா ?  எங்கே விஜய்யும் அடேயப்பா .. என்னமா அடிக்கறாரு .. அண்ணன்னா அண்ணன்தான் ” என்ற எம் ஜி ஆரின் வசனத்தை, 
 
அப்படியே பேசி விடுவாரோ என்று  ஒரு சுவாரஸ்யமான பயமே  வந்தது 
 
மருத்துவக் கொள்ளைக்குப் பின்னால் உள்ள வியாபாரம், சுயநலம், மனசாட்சி இன்மை , உயிர்களை பலி வாங்கும் மிருக குணம் , பிணமானாலும் பணம் பிடுங்கும் அக்கிரமம் ,
 
இதன் பின்னால் உள்ள அரசியல் , அதற்கான தேர்வு இவற்றை தமிழின உணர்வோடு சொன்ன விதத்தில் கவர்கிறது படம் . 
 
மெர்சல் … விளாசல் !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
———————————————
அட்லி , விஜய், ஏ ஆர் ரகுமான், எஸ் ஜே சூர்யா , நித்யா மேனன் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *