ஒரு காலத்தில் சந்தோஷமான சினிமா நிகழ்வுகளில் ஒன்று நூறாவது நாள் வெற்றி விழா. அந்த வெற்றி விழாவில் வழங்கப்பட்ட கேடயங்கள்,
பல சீனியர் சினிமா பிரமுகர்களின் வீடுகளை அலங்கரிப்பதை இப்போதும் பார்க்க முடியும் . ஆனால் இன்றைய தலைமுறை சினிமாக் கலைஞர்கள் பலரும் அறியாத அந்த அற்புத நிகழ்வை ,
மீண்டும் நடத்திக் காட்டிய வகையில் சாதனை படைத்துள்ளது, ஸ்டுடியோ 9 ஆர் கே சுரேஷ் தயாரிப்பில் , விஜய் சேதுபதி, தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை .படம்.
ஆம் !
தர்மதுரை படத்தின் நூற்றாண்டு விழாவில் படத்தின் கலைஞர்களோடு ,கலைப்புலி எஸ் தாணு கலந்து கொண்டு அனைவருக்கும் கேடயம் வழங்கினார் .
இந்த வெற்றி விழாவோடு , அடுத்து தான் வாங்கி வெளியிட இருக்கும் அட்டு என்ற படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவையும் நடத்தினர் ஆர் கே சுரேஷ்
அதோடு ஆடியோ உலகிலும் நுழையும் ஆர் கே சுரேஷின் ஸ்டுடியோ 9 மியூசிக் நிறுவன துவக்க விழாவும் நடந்தது .
நிகழ்ச்சியில் பேசிய ஆர் கே சுரேஷ் ” அண்ணன் சீனு ராமசாமி இந்தப் படத்தின் கதையை சொன்ன உடனே சந்தோஷமாக தயாரித்தேன் . படத்தை துவங்கி வைத்தவர் அண்ணன் தாணுதான் .
அப்போது நான் மருது படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன் . இந்தப் படத்தில் மக்க கலந்குதய்யா பாட்டில் ஒரு சிறு காட்சியில் தோன்றி ஆடினேன் .
சீனு ராமசாமி அண்ணனும், சகோதரர் விஜய் சேதுபதியும் இதை வெற்றிப் படம் ஆக்கிக் கொடுத்தனர் .அவர்களுக்கு நன்றி .
இப்போது அதே தாணு அண்ணன் வெற்றி விழாவுக்கு வந்து இருப்பது சந்தோசம் . அவருக்கும் நன்றி
அண்மையில் நான் பார்த்த அட்டு படம் மிக சிறப்பாக இருந்தது . அதை வாங்கி வெளியிடுகிறேன் . தவிர ஸ்டுடியோ 9 மியூசிக் சார்பில் ஆடியோ துறையிலும் இறங்குகிறேன் .” என்றார் .
“மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன் பேச எதுவுமில்லை. ரொம்ப மகிழ்ச்சி ” என்றார் விஜய் சேதுபதி . “எனக்கு சீனு ராமசாமி ஒரு படம் இயக்கித் தர வேண்டும் ” என்றார் எஸ் தாணு .
சீனு ராமசாமி பேசும்போது ” இது எனக்கு மிக முக்கியமான நாள் . ஏனெனில் நான் சினிமாவுக்கு வந்த காலம் முதலே நான் கலந்து கொள்ளும் முதல் நூறாவது நாள் இதுதான் .
நான் இந்தக் கதையை சொன்ன உடனே அதை உணர்ந்து நல்ல விதமாக் தயாரித்து இன்று வரை அதை தூக்கி சுமக்கும் ஆர் கே சுரேஷுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை .
நான் இயக்கிய இடம் பொருள் ஏவல் என்ற படம் வெளிவராத நிலையில் என்னை நம்பி இந்தப் படத்தை நடித்துக் கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி
விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் ராஜேஷ், எம் எஸ் பாஸ்கர் எல்லோரும் அற்புதமாக நடித்தார்கள் .
தென் மாவட்ட பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை மட்டும் ராதிகாவுக்கு அனுப்பி, உங்கள் கேரக்டர் இப்படி இருக்கும் என்றேன் . அப்படியே அவராகவே வந்து நின்றார் .
இவர்களோடு அற்புதமான பாடல் வரிகளால் வைரமுத்து சார், சிறப்பான ஒளிப்பதிவால் சுகுமார் , அற்புதமான இசையால் யுவன் சங்கர் ராஜா …இப்படி எல்லோரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது
இந்தப் படம் வெற்றிகரமாக ஓட மக்களிடம் இருக்கும் அற உணர்ச்சிதான் காரணம் . நான் தேவை இல்லாமல் காமெடி , கமர்ஷியல் வைக்க மாட்டேன்.
அப்படி இருந்தும் இந்தப் படத்தை எல்லா பகுதியிலும் வெற்றி பெற வைத்த மக்கள் , நல்ல படங்கள் கட்டாயம் ஓடும் என்ற நம்பிக்கையை தருகிறார்கள் .
அவர்களுக்கு நன்றி ” என்றார்