டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்க, அஸ்வின், தேஜூ அஷ்வினி , அவந்திகா மிஸ்ரா, புகழ் நடிப்பில் ஹரிஹரன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
காதல் கதைகளை மட்டுமே எழுதி புகழ் பெற்ற இளம், பெண் எழுத்தாளர் அஞ்சலிக்கும் (அவந்திகா ) இளைஞன் விக்ரமுக்கும் ( அஸ்வின்) திருமணம் முடிவாகிறது. . விகர்முக்கு பெண் மிகவும் பிடித்துப் போன நிலையில் அவளோ தன் வருங்காலக் கணவனுக்கு முன்பே காதல் அனுபவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் .
எனவே அவளிடம் விக்ரம் பொய்யான ஒரு காதல் கதை சொல்ல, அந்தப் பெண்ணை பார்க்க வேண்டும் என்று அஞ்சலி சொல்ல, அதற்காக காதலியாக நடிக்க ஒரு பெண்ணைக் ( தேஜூ அஷ்வினி ) கொண்டு வர …
இதற்கு மேல் மிச்சக் கதையை நீங்களே சொல்வீங்க .

ஆயிரம் முறை மென்று துப்பப்பட்ட இந்தக் கதைக்கு, புதிதாக எந்த சேர்ப்பும் இல்லாத வழக்கமான காட்சிகளைக் கொண்ட அதீத நீளம் போகிற பொறுமையை சோதிக்க வைக்கும் திரைக்கதை .
கொஞ்சம் கூட உயிர்ப்போ யதார்த்தமோ இல்லாத மேனா மினுக்கித்தனமான பெண் கதாபாத்திரங்கள் . படம் முழுக்க அப்படி ஒரு பிளாஸ்டிசிட்டி.
புகழை சினிமா நடிகன் ஆக்க வேண்டும் என்று முதன் முதலில் யோசித்த நபரை கண்டிப்பாக கண்டு பிடித்து நாடு கடத்தவேண்டும் .
அஸ்வின் , புகழ் , சுவாமிநாதன் , டி எம் கார்த்திக் சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஒரு பெண்ணை சும்மா வெட்டியாக நிற்க வைத்திருப்பார்கள் . அல்லது திட்ட மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள் . அந்தப் பெண் நிஜமாகவே நன்றாக நடிக்கிறார்
ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு , கலை இயக்கம், நடன அமைப்பு அருமை .
வேறு என்ன சொல்லப் போகிறேன்?