அதேதான் கதைதான் .
அமெரிக்காவில் இருந்து தேன்மொழி என்ற சென்னைப் பெண் (அனுஷ்கா) இந்தியாவுக்கு வருகிறாள் . விமானத்தில் அவளுக்கு சத்யதேவ் என்ற போலீஸ் அதிகாரி (அஜித் குமார்) அறிமுகமாகிறார் . பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தபடி இருவரும் பயணிக்க , அந்த நீண்ட பயணத்தில் ‘ஹாய் ஹாயி’ல் ஆரம்பித்து பேசி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சத்யதேவை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் தேன்மொழி.
காபி ஷாப்பில் அடுத்த முறை ஒரு சந்திப்பை நிகழ்த்தும்தேன்மொழி , தனது காதலை சத்யதேவிடம் சொல்ல ஆரம்பிக்கையில் … ஒரு முகமூடிக் கும்பல் சத்ய தேவ் மீது தாக்குதல் நிகழ்த்துகிறது. தன்னையும் காத்து தேன்மொழியையும் காப்பாற்றும் சத்யதேவ், தாக்குதல் நடத்தியது யார் என்பதை ஒருவாறு யூகிக்கிறார் .
இங்கே பிளாஷ்பேக் !
தனது பனிரெண்டு வயதில் தந்தையை இழக்கும் சத்யதேவுக்கு மேற்கொண்டு நேர்மையாக வாழ்வதா இல்லை கிரிமினலாக மாறுவதா என்ற ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது .
போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ரகசியமாக இயங்கும் ஒரு சமூக விரோதக் கும்பலை பிடிப்பதற்காக , தானும் ஒரு ரவுடி போல மாறி அண்டர் கவர் ஆப்பரேஷனில் ஈடுபடுகிறார் . அங்கே விக்டர் என்ற ஒரு கிரிமினலின் (அருண் விஜய்) நட்பு கிடைக்கிறது . ஆனாலும் தனது பணியை சத்யதேவ் மறக்கவில்லை . எனவே அவனையே ஏமாற்றுகிறார்.
ஒரு நிலையில் விக்டரோடும், தான் தேடி வந்த சமூக விரோதக் கும்பலோடும் நேரடியாக மோதும் சத்யதேவ் எல்லோரையும் அழிக்கிறார் . விக்டர் மட்டும் தப்பிக்கிறான்
தொடர்ந்து தனது காவல் துறைப் பணியில் சிறப்பாக இயங்கும் சத்யதேவ், ஒரு முறை ஒரு தாதாவை பிடிக்க ஆட்டோ டிரைவர் வேடத்தில்காத்திருக்க, கணவனால் கை விடப்பட்ட ஹேமானிகா ( திரிஷா)) என்ற கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவத்துக்கு உதவ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது . குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். ஹேமானிகா மீது அவருக்கு காதல் வருகிறது .
நான்கு வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணத்துக்கு முதல்நாள் ஹேமானிகா கொல்லப்படுகிறாள் . கொலை செய்தது விக்டரோ என்று சத்யதேவ் சந்தேகிக்க, இல்லை என்ற கூறி விடுகிறது போலீஸ் விசாரணை டீம் .
கொலைகாரர்களை கண்டு பிடித்து பழிவாங்க சத்யதேவ் நினைத்தாலும் ,அவர்களைப் பற்றி எந்தத் துப்பும் கிடைக்காத எரிச்சலில் ஒரு நிலையில் அவர் வேகமாக செயலில் இறங்கி , முன்பு தன்னுடன் மோதிய ஒரு பணக்கார தாதா செய்து இருப்பாரோ என்று எண்ணி அவரை தேடிப் போக, அது சத்யதேவின் உயிருக்கே ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது.
ஒரு நிலையில் போலீஸ் வேலையே வேண்டாம் என்று முடிவு செய்யும் சத்யதேவ் , ஹேமானிகாவின் மகளின் வாழ்வுக்காகவே தனது வாழ்நாளை பயன்படுத்தும் முடிவுக்கு வருகிறார். தனது தந்தை தனக்கு விரும்பியபடி தன் மகளுக்கு இந்தியா முழுக்க சுற்றிக் காட்டுகிறார் .
அந்த மகளுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கையில், ஒரு சக போலீஸ்காரரின் மகள் கடத்தப்பட்ட வழக்கில் சத்யதேவின் உதவி வேண்டும் என்று அந்த போலீஸ் நண்பர் வற்புறுத்திக் கேட்க, அதில் இறங்குகிறார் சத்யதேவ் .
மீண்டும் விக்டர் !
அப்படி விக்டரை சந்தித்தபோதுதான் இதுவரை தனது வாழ்வில் நடந்த எல்லா இழப்புகளுக்கும் காரணம் விக்டர்தான் என்பது சத்யதேவுக்கு தெரிய வருகிறது.
அதன் பிறகு சத்யதேவுக்கும் விக்டருக்கும் நடக்கும் ஆக்ஷன் விளையாட்டே… என்னை அறிந்தால் .
இந்தியா வரும் தமிழ்ப்பெண், ஹீரோவுடன் கண்டதும் காதல், கடத்தல் முயற்சி, ரவுடிகளால் போகிற போக்கில் அநியாயமாக கொல்லப்படும் ஹீரோவின் அப்பா, ஹீரோ போலீஸ் ஆவது, ரவுடி கும்பலை பிடிக்க ரவுடி போலவே மாறி வாழ்வது, அங்கே ஒரு தாதாவின் அன்புக்கு பாத்திரமாவது , ஒரு நிலையில் அவனுக்கு அதிர்ச்சி கொடுத்து அவனுக்கு எதிரியாவது, கல்யாணத்துக்கு முதல் நாள் ஒரு ஹீரோயின் கொல்லப்படுவது, குழndhதைக் கடத்தல் , பெண்கள் கடத்தல் , இதயம் , கிட்னிக்காக ஆட்களை கடத்தி கொலை செய்யும் தாதா கும்பல் என்று….
பார்த்து சலித்து அலுத்து புளித்த காட்சிகளே படம் முழுக்க வியாபிக்கின்றன .
ஒரு பழகிய கதையை எடுத்தாலும் அதில் நம் பங்குக்கென்று புதிதாக நாலு விஷயம் வைக்க வேண்டாமா ? அப்படி எதுவுமே இல்லை.
விஜயகாந்த் நடித்து சுபாஷ் இயக்கிய சத்ரியன் படத்தின் வடிவம் இந்தப் படத்தில் அப்படியே இருக்கிறது. அப்புறம் கவுதம் மேனனின் படங்களான காக்க காக்க , வேட்டையாடு விளையாடு, இவற்றோடு அண்மையில் வந்த கயல் போன்ற படங்கள் ஞாபகம் வருகின்றன .
ஒரு பக்கம் அஜித் பின்னணிக் குரலில் கதை சொல்கிறார் . இன்னொரு பக்கம் கவுதம் மேனனும் கதை சொல்கிறார் . ஏன் சார் ஏன் ?
விக்டர் மேட்டரை ஒரு நிலை வரை ஒப்பன் செய்யாமல் இருந்து திரிஷாவின் மரணத்துக்கு பிறகு சொல்லி இருந்தால் இன்னும் கொஞ்சம் கமர்ஷியல் சுவாரசியம் கூடி இருக்கும்
ஆக, படத்தின் பெரும் பலவீனம் ஸ்கிரிப்ட் .
பலம்? வேறு யார் அஜித் தான் !
அழகாக இருக்கிறார் . ஸ்டைலாக நடக்கிறார் . தபஸ் நாயக் ஒளிப்பதிவின் உதவியோடு ஜொலிக்கிறார் . ரொம்ப கேஷுவலாக நடிக்கிறார் . மற்றபடி ஸ்பெஷலாக எதுவும் இல்லை (இந்தக் கதைக்கு இது போதும் என்று நினைத்து இருக்கலாம் )
சபாஷ் அருண் விஜய் ! விக்டர் கேரக்டரில் அதகள ரணகளம் செய்து இருக்கிறார் . நடிப்பு , ஆக்ஷன் இரண்டிலும் கடும் உழைப்பைக் கொட்டி இருக்கிறார் . அருண் விஜய்க்கு இது முக்கிய படம். வாழ்த்துக்கள் அருண் விஜய் . அதே நேரம் அருண் விஜய்க்கு இவ்வளவு ஏரியா ஒதுக்கிக் கொடுத்த அஜித்தின் பெருந்தன்மைக்கும் பாராட்டுக்கள்!
அனுஷ்காவை விட திரிஷா அழகாக இருக்கிறார் . அழகான நடிப்பில் மயக்குகிறார் . படத்தில் அவரும் அஜித்தும் பேசிக் கொள்ளும் காட்சியில் திரிஷாவின் முகம் ஜொலிக்கிறது . அந்தக் காட்சி மனசிலேயே நிற்கிறது .
அனுஷ்கா மேல் யூனிட்டுக்கு என்ன கோபம் ? கழுத்துச் சுருக்கம் எல்லாம் அப்படியே தெரிகிறது . மேக்கப் , லைட்டிங் , கேமரா லென்சில் நெட் .. இப்படி எதையாவது செய்து அவரை காப்பாற்றி இருக்கக் கூடாதா ?
வசனம் சில இடங்களில் ஈர்க்கிறது . அதற்காக ஆட்களை கொலை செய்து உடல் உறுப்புகளை அநியாயமாக அறுக்கும் இடத்தில் ” ஒரு இதயம் பார்சல்ல்ல்…..’ என்று கூவுவது எல்லாம் கோராமை .
நாசர், விவேக் இருவரும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள் .
ஹாரீஸ் ஜெயராஜ் பாடல் மெட்டுகளில் எம் எஸ் வி யின் பழைய பாடல்கள் மட்டுமின்றி ‘வேணாம் மச்சான் வேணாம்’ பாடல் வரை டெம்போ மட்டும் மாற்றப்பட்டு , கொடுக்கப்படுகின்றன .
கல்யாணத்துக்கு முதல் நாள் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதில் கவுதம் மேனன் கில்லாடி . இதிலும் அசத்துகிறார் . பொதுவாகவே படமாக்கல் வெகு சிறப்பாக இருக்கிறது .
ஏனோ தெரியவில்லை . கவுதம் மேனனின் ஹீரோக்கள் தொடர்ந்து விவாகரத்து ஆன, ஆகாத, ஆகிக் கொண்டு இருக்கிற பெண்களுக்கு வாழ்க்கை கொடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் . விதவைகளையும் இனி எடுத்துக்குங்க கவுதம். நம்ம ஹீரோ பண்றாரே என்று நாலு ரசிகர்களாவது விதவைகளுக்கு மறு வாழ்வு கொடுக்கட்டுமே.
கிளைமாக்ஸ் நோக்கிய அந்த பயணத்தில் பரபரப்பை உருவாக்குவதில் அசத்தி இருக்கிறார் கவுதம் மேனன் .
ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு பாமரனுக்கும் புரியும்படி தெளிவாக கதை சொல்லி இருக்க வேண்டும் . பாடம் படிப்பது போல கூர்ந்து படம் பார்க்க பொழுதுபோக்கை நாடி தியேட்டருக்கு வரும் எல்லோரும் விரும்புவர்களா?
என்னை அறிந்தால்… தெளிவு கம்மி
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
அருண் விஜய் , அஜித் குமார், திரிஷா